Friday, August 27, 2010

"நல்லவர்"- ஒரு மோசமான கெட்ட வார்த்தை!



என்னடா இவன், நல்லவர்னு சொல்றதை கெட்ட வார்த்தை ஆக்கிட்டானேன்னு
யோசிக்கிறீங்களா.. காரணம் இருக்கு..

முதல் காரணம். நம் மனது. அதென்ன.. நன்மை தீமை, நல்லவர், கெட்டவர்..
இந்த இரண்டு விஷயங்களும் எப்படி நம் மனித சமுதாயத்தை எப்படி ஆக்ரமிக்க
ஆரம்பித்தன..?

நல்ல- என்பது என்னை பொறுத்தவரை சாதகமான என்கிற வார்த்தையின் திரிபுச் சொல்.
அதாவது நமக்கு சாதகமான எல்லாமே நமக்கு நல்லவை. நம் பேச்சை கேட்டு வளரும் பிள்ளைகள்
நல்ல பிள்ளைகள். நம் தேவைக்கேற்ற சம்பளம் வழங்கும் நிறுவனம் நல்ல நிறுவனம். இப்படி
நமக்கும், நம் சூழ்நிலைகளுக்கும் சாதகமாக எவரோ, எவைகளோ இருந்தால் அவைகள், அவர்கள்
நல்லவர்களாகிவிடுகிறார்கள்.

இந்த நல்ல , தீய என்கிற வார்த்தைகள் வெகு சீக்கிரமாக நம் மனதை  ஆக்ரமித்து நம் அறிவுக்கு
வேலை இல்லாமல் செய்து நம்மை முடமாக்கிவிடுகின்றன. அதுவும் நம்மை பார்த்தே நான்கு பேர்
நல்லவன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டால்.. முட்டாளாக முதல் வகுப்பு ஆரம்பித்துவிட்டது என்றே அர்த்தம்..!!

நல்லவர் பட்டம்: அதென்ன நல்லவர் என்கிற முத்திரை குத்துவது? ஏன் இந்த வழக்கம்?
அதாவது ஒருவர் உங்களுக்கு சாதகமாக செயல்படவோ, செயல்பட்டிருந்தாலோ அவரை உங்கள்
அருகில் வைத்துகொள்ள இந்த நல்லவர் பட்டத்தை அவருக்கு கொடுத்து நீங்களும் அவரும் சேர்ந்தே
நல்லவராகிவிடுகிறீர்கள்.

நல்லவன் ஒரு மனநோயாளி: என்னது நல்லவன் மனநோயாளியா? ஆமாம். இல்லாத ஒரு கற்பனையான
ஒரு பதவியை, முத்திரையை  தன்மீது சுமந்துகொண்டு, அதனால் ஒரு பலனும் இல்லாமல் படாதபாடுபடும்
பரிதாப மனநோயாளி. அவனுக்கு இந்த முத்திரையை குத்தியதும் சில மனநோயாளிகள்தான்.
இந்த மனநோயால் பாதிக்கப்படுவது, அவனுடைய சொந்த வாழ்க்கையும், அவனை  சுற்றியுள்ளோரின் வாழ்க்கையும்தான்.
இதை புரிந்துகொண்டாலுமே இதில் இருந்து வெளிவர பெரும்பாடு படவேண்டும்.

கடவுள் நல்லவரா? : என்னை கேட்டால் நிச்சயமாக இல்லை. நமக்கு சாதகமான விஷயங்களை , சூழ்நிலைகளை மட்டுமே  அமைத்துதரும் கடவுள் நிச்சயம் கடவுளாகக்கூட இருக்க முடியாது.
காரணம், சிறப்பான வாழ்க்கைக்கு, மேம்படும் வாழ்க்கைக்கு அன்பு எப்படி முக்கியமோ அதே போல்
சில அடிகளும் முக்கியம். இரண்டுமே நம்மை மேம்படுத்தும். நம்மை வலிமைமிக்கவராக ஆக்கும் ஒரு ஜிம் ட்ரெயினர் , அல்லது பி.டி. மாஸ்டரை போலத்தான்
கடவுள் இருக்கமுடியுமே தவிர.. நம் காதுக்கும், கண்ணுக்கும் இனிமை  அளிக்கும் கவர்ச்சி நடிகையாக இருக்க முடியாது.

இப்போ  என்னதான் செய்யட்டும்? : வெகு எளிய வழி ஒன்று இருக்கிறது. பட்டத்தை  தூக்கி எறி, அதுக்காக பத்துபேர் பல்லை உடைக்க சொல்லவில்லை.
சூழ்நிலைகளை  அப்படியே  ஏற்றுகொள்ளுங்கள். இந்த சூழ்நிலைக்கு நீங்கள் கெட்டவராகியே தீரவேண்டுமென்றால், போய்ட்டு போகுது பதவி. கெட்டவராகுங்கள்.
நமக்கு End Result தான் முக்கியமே தவிர..பட்டம் முக்கியமில்லை. கையில் கத்தியோடு எதிரி முன்னால் நிற்கும் போது, நல்லவன் வேஷம் பலிக்காது.
அவனுக்கு நீங்கள் கெட்டவனானால்தான்..உங்கள் குடும்பம் உங்களை  போற்றும். இல்லைன்னா எமதூதர்கள்கூட கேவலமாக சிரிப்பார்கள்.

மொத்தத்தில், இனிமேல் யாராவது உங்களை நல்லவர் என்று சொன்னால் எச்சரிக்கையாக இருங்கள். அது உங்களை அரவணைக்க அல்ல. ஆப்பு வைக்க.!!

 டிஸ்கி: அதே  போல் உங்களை நன்கு புரிந்துகொண்டவர்கள் உங்களை நல்லவர் என்றும் போற்றி புகழமாட்டார், கெட்டவர் என்றும் தூற்றி இகழவும் மாட்டார்.

Sunday, August 22, 2010

கல்யாணமும்,காதலும்,கசப்புகளும்!!


என்ன பாஸ் இது? என்ன இதெல்லாம்? இப்படி ஒரு பொழப்பு தேவையா நமக்கு?
நல்லா இருந்த பையனையும் பொண்ணையும் புடிச்சு கட்டிவெச்சிட்டு..இப்போ அதுங்க போடுற
ஆட்டம் தாங்கலைன்னு புலம்புறதும், அதுங்களை மாதிரி நாங்க ஒன்னும் சண்டை போட்டுக்கலைன்னு
பெருமை பேசிக்கிறதும்..ஏன் ஏன் இந்த வேலை..

..அந்த புள்ள பாட்டுக்கு படிச்சமா வேலைக்கு போனமா, ஒரு நல்ல பையனை லவ் பண்ணினமா,
வாழ்க்கைய சிறப்பா ஆரம்பிச்சமான்னு இருந்திருக்கும்..அத போய் எவனோ ஒரு குடிகாரனுக்கு கட்டிவெச்சி,
அது வாழ்க்கையை வீணடிச்சிட்டீங்க.. இப்போ அந்த நாதாரிய திருத்த அந்த புள்ள எவ்ளோ போராடிகிட்டிருக்கு.
அது மனசுல எவ்ளோ பொறுமும் , வேதனைப்படும்னு யாராச்சும் யோசிச்சீங்களா?
அந்த நாய்க்கு குடிப்பழக்கம் விட்டுபோகணும்னா மறுவாழ்வு மையத்துல சேர்க்க வேண்டியதுதானே..அதை விட்டுட்டு
இப்படியா ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிப்பீங்க..த்தூ..

இது கூட பரவால்ல..இந்தா..இந்த பையன பாருங்க..நல்லவன், நல்ல வேலை, நல்ல வாழ்க்கை, நல்ல நண்பர்கள்னு
எல்லாம் நல்லதாய் அமைஞ்ச ஒரு மனுஷன். இவனுக்கு ஒரு பொஞ்சாதி. யப்பா.. சும்மா சொல்லக்கூடாது...அடங்காபிடாரி,
இவனுக்கு என்ன கேடுகாலமோ..இப்படி ஒரு பொண்ணை கட்டிகணும்னு தலையெழுத்து. பாவம் நொடிஞ்சி போய்ட்டான்.
எப்ப பாரு, அத வாங்கி குடு, இத வாங்கி குடுன்னு தினமும் சண்டை. சம்பளத்துக்கு மீறி வாழ்க்கை நடத்தகூடாதுன்னு நினைச்சவனுக்கு,
கிம்பளம் வாங்கிகூட திருப்திபடுத்த முடியல இந்த மகராணிய. இவனோட அப்பா அம்மா மேல எனக்கு சந்தேகமா இருக்கு. இதுங்களுக்கு
பொண்ணு பார்க்க தெரியுமா தெரியாதா? இல்லை..அழகா இருக்காங்கற ஒரே காரணத்துக்காக கட்டி வெச்சிடுசுங்களா?! .. பாவம் இந்த பையன்,
இன்னைக்கு இவளால இவன் கடன்காரன், குடும்ப விரோதி, திருடன்னு பட்டம் வாங்கி குவிச்சதுதான் மிச்சம்..
...

ஸோ..மக்களே..மகாஜனங்களே!! எப்பவும் நம்ம அப்பா அம்மா நமக்கு நல்லதுதான் செய்வாங்கனு நினைச்சு..நீங்க கண்ணமூடிகிட்டு சம்மதிச்சா,
98% நீங்க அதலபாதாளத்துல குதிக்கறீங்கன்னுதான் அர்த்தம்..அது மட்டும் இல்லாம, அடுத்து வர 80 வருஷமும் உங்களுக்கு ஆயுள் தண்டனையாகவும்
போகலாம். ஸோ.. ப்ளீஸ்..யோசிங்க.. அந்த பொண்ணுகூடவோ, பையன்கூடவோ பழகி பாருங்க. உங்க குணத்துக்கு சரிவரும்னு முடிவு பண்ணிட்டு அப்புறம்
சம்மதிங்க. அழகுல மயங்கி விழுகுற வேலையே வேணாம். அது பசுத்தோல் போர்த்திய முதலை. ஸோ..ப்ளீஸ்..யோசிங்க. பழகிப்பாருங்க. முடிவுப்பண்ணுங்க.

டிஸ்கி : 
வாழ்ந்து முடிச்சவுங்களுக்காக, வாழப்போறவங்க வாழ்க்கையை தொலைக்கணும்னு எந்த தர்மமும் சொல்லலை!! அது போன்ற அதர்மமும் இல்லை!!

Monday, August 9, 2010

ஹைக்கூ என்கிற பேரில்!!

பங்கு :
மிச்சம் மீதி இருந்தா போடு தாயி
என்றுகூவிய பிச்சைகாரனை பார்த்து
கோபம் வந்தது எனக்கு,
அவள் கணவனின் உணவில் பங்கு கேட்கிறானே
என்று..!!

ஆத்திரம் :
எங்கதான்யா போச்சு?
ச்சை..ஒரே எளவா போச்சு..
வசைபாடி தீர்த்தார் அந்த உபன்யாசர்,
தன் தலையில் ஏற்றி வைத்த மூக்குகண்ணாடியை மறந்து.

வன்முறை :
அத்தனை அடியிலும்
அமைதியாய் சிரித்தாள்,
பேரக்குழந்தைகளின் பாசத்தில்!!

வலை :
மீன் வலையில் சிக்கி பார்த்திருப்போம்,
நானோ மீன் கண்கள் போட்ட வலையில்!!

கவித..கவித..!!
என்னால் எப்படி முடியும்?
ஒரு கவிதையிடமே கவிதைபாடி காட்ட?

இலவசம் : 
இவர்கள் மட்டுமே விற்பதில்லை
கொடுக்கிறார்கள்,
மழலைகளின் புன்னகை!!

Sunday, August 8, 2010

மாற்றமும் மாறும்!!



இந்த உலகத்தில் நிலைத்த தன்மை என்ற ஒன்றை நினைத்துபார்க்கவே முடிவதில்லை.
இதை இன்றைய விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்தே ஒப்புகொள்கின்றன.
காரணம், இயற்கை. இயற்கையின் நியதிகளில் மிகவும் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமாய்
இந்த மாறுதல் கோட்பாடு அமைந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இவ்வுலகமும், பிற உலகங்களும்,
ஏன்..மொத்த பிரபஞ்சமுமே இயங்கி வருகிறது.
இப்படிப்பட்ட அத்தியாவசிய மாறுதல் விதி நம்மை சுற்றி மட்டுமே நடக்கிறதா என்றால் இல்லை.
நமக்குள்ளும்,அதாவது நம்முடைய உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கு கூறுகளிலும் ஒரு தொடர் நிகழ்வாக நிகழ்ந்தவண்ணமே
உள்ளது.

நாம் அன்றைய நாகரிகமற்ற மனிதர்களைப்போல் இல்லை. கல்லை குட்டி தீமூட்டவில்லை. உணவை பச்சையாக உண்பதில்லை.
இவ்வளவு ஏன்..80களில் இருந்த மனித சமுதாயத்திற்கும் இப்போது இருக்கும் மனித சமுதாயத்திற்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள்.
இப்படி நம் அழகுணர்ச்சி முதல் நாம் பயன்பாட்டில் ஏற்றுகொண்ட பொருட்கள் வரை அவ்வளவும் தங்கள் நிலையில் இருந்து மருவி,
மாறுபட்டு நிற்கின்றன. மாறுபட்டு என்கிற வார்த்தையில் அடியிலும் எதோ ஒரு உட்கருத்து ஒளிந்துள்ளதை நான் உணர்கிறேன்.

அதுதான் படைப்பாற்றல்.

படைப்பாற்றல் என்பது ஓவியருக்கோ, பாடகருக்கோ, அல்லது சினிமாக்காரர்களுக்கு மட்டுமே இருக்கும் விஷயம் என்றால்,
நீங்கள் நினைப்பது தவறு. உங்கள் வீட்டில் தினமும் ஒரே குழம்பும் இட்லியும் செய்தால் ஏன் கோபப்படுகிறீர்கள்? மனம் புதியதை
அல்லது புதுவகையில் அதே விஷயம் மாறி இருப்பதையே விரும்புகிறது. நம் படைப்பாற்றலின் ஊற்று எல்லாருக்குள்ளும் ஒளிந்து
நம்மை மாற்றமடையவும், மேம்பட்ட ஒரு வாழ்க்கைக்கான ஊக்கத்தையும் தந்த வண்ணம் இருக்கிறது.

மாற்றங்களை தூண்டும் படைப்பாற்றல் மனித மனத்தில் ஒரு சிறந்த சீரான முதிர்ச்சியை தெளிவை கொடுக்கக்கூடியது.
அதன் எல்லைகளை தொட்டவர்கள் துறைசார்ந்த ஞானிகளாக விளங்கிகொண்டிருக்கிறார்கள். டாவின்சி முதல் ரஹ்மான் வரை
நாம் அவர்களை பெருமையோடு போற்றி வந்துள்ளோம். அப்படிப்பட்ட மாறுதலை தூண்டும் படைப்பாற்றல் எல்லாருக்கும் சொந்தமானது.

அதை அனைவரும் சுயமாய் தெரிந்துகொண்டு அதை சிறப்பான முறைகளில் வழிநடத்துவதன் மூலம் தன்னுள்ளும் மேம்பட்டு , மனித
சமுதாயத்தையும் மேம்படுத்த முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை.