Monday, December 6, 2010

நெஞ்சை தொட்ட குறள்கள் 10..


1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

இந்த குறளில் தான் எனக்கு தமிழ் முதன்முதலில் அறிமுகமானது.
இன்னும் அதன் சுவையும் பொருளும் மாறாது இனிக்கும் குறளிது.

2.இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்

என்ன அருமையான குறள். இன்னும் இவர்களை விட்டுவைக்கணுமான்னு நினைக்கும்போதெல்லாம்

நினைவுக்கு வந்து என்னை ஆசுவாசப் படுத்தும் குறள் இது.

3.என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு

நம்பிக்கை துரோகம், நம்ப வைத்து ஏமாற்றுதல், வேலை முடிந்ததும் கழட்டிவிடப்படுதல் இவற்றை எல்லாம்
தாண்டி வந்தபின் இந்த குறளின் அருமையும் ஆழமும் எனக்கு புரிந்தது.

4.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

நம் எண்ணம் போலவே வாழ்வு எனும் அருமையான தத்துவத்தை எனக்கு சொல்லிக்கொடுத்த குறளிது.

5.வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு.

தாமரை தண்டு நீர்மட்டம் பொருத்து உயர்ந்தும் தாழ்ந்தும் தன்னை சரிசெய்துகொள்வது போல்.. மனித வாழ்வில் எல்லா உயர்வு தாழ்வுகளிலும்
தன்னை சரிசெய்து வாழ்ந்து பழகி கொள்ள சொல்லும் குறள். எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் குறளிது.

6.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

என் தந்தை, ஓஷோ, வள்ளுவர் இந்த மூவரும் இந்த குறளில் ஒத்துபோகிறார்கள். மூவருமே.. துணிந்து செய்..அதுவே சக்தி தரும் என்று எனக்கு
சொல்லி தந்த குறளிது.

7.யாகவராயின் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

சொல்வன்மை குறித்தும் அதில் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லும் குறளிது. எனக்கு தேவையான குறளும் கூட..!!

8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று

என்ன அருமையான குறள்!! நல்லதை எண்ணி வாழ்வை நல்வழியில் கொண்டு போவதை விடுத்து, தீயதை ஏன் சுமக்கிறாய்..தூக்கி எறி, அழித்துவிடு
என்று சொல்லும் குறள்.

9.நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது

உறுதியான உள்ளமும், ஆர்பாட்டமில்லாத அறிவும் கொண்டவன் மலைகளுக்கும் மேலானவன். இது என்னுடைய இன்ஸ்பிரேஷன் குறள்..!!

10. அன்பிலார் எலாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு, Love, என்ன அருமையான குறள். ஒரு ஒட்டுமொத்த மனிதமே அன்புடையதாய் நினைத்து பாருங்கள். கடவுள், சாத்தான் இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்துகொள்வார்கள்.
அப்படிபட்ட மனிதத்திற்காக காத்திருக்கிறேன். அதோடு என்னால் முடிந்தமட்டும் எல்லாரிடமும் அன்பாய் இருக்கிறேன். :)

நன்றி!!

Saturday, November 13, 2010

நீ,நான்,நிலா



செல் எனும் வார்த்தையெங்கும்
வா என்பதை  மறைக்கிறாய்..

ச்சீ என்கிற கொச்சை சொல்லில்
இச்சை சேர்த்து கொல்கிறாய்..

ம்ம் என்ற மௌன சொல்லில்
பேசேன் என்றே ஏங்குகிறாய்..

போ என்று விரட்டும் சொல்லில்
விரைந்து வா என்று மிரட்டுகிறாய்..

முறைக்கும் பார்வை பார்த்தெனை
முறையற்ற மனிதனாக்குகிறாய்..

பூத்து நிற்கும் புன்னகையதில்
புதியவளாய் என்னுள் பூக்கிறாய்..

நான் பேசாதே சமயம்- பேவிடு
என்று பேசாமலே கெஞ்சுகிறாய்..

முத்தம் ஒன்று கேட்டுவிட்டால்
சத்தமில்லாமல் கொஞ்சுகிறாய்..

முத்தத்தூரல் ஓய்ந்தபின்னே
மழையாய் நெஞ்சை மிஞ்சுகிறாய்..

அன்று சிரித்திருந்தது உதடுகள்,

 துடித்திருந்தது இதயங்கள்,

இனித்திருந்திருந்தது யார்...?

நீ,நான், நிலா..!!

Tuesday, November 9, 2010

வாழ்ந்துவிடு..!!


ஓடியாடி விளையாடு..
இந்த ஓய்வற்ற வாழ்க்கை விளையாட்டை..

யாரும் போடவில்லை சட்டம்..
இது யாருக்கும் புரியா திட்டம்..

பத்தாது இந்த வாழ்வு
பத்து நூறாயிரம் வாழ்க்கை வாழ்..
வாழும் கணமெல்லாம்..
வாழ்வை உறிஞ்சி வாழ்!!

விட்டுவிடாதே..
சொட்டுவிடாதே..
முழுதாய் குடி..
மிச்சம் விடாதே..!!

நீ மிச்சத்தில் 
பிறந்த மிருகம்..
நீ எச்சத்தில் 
பிறந்த சொச்சம்..
ஆனால் உச்சம்
என்பதெல்லாம் உனக்கு
துச்சம்..

அனுமதி நதியை
உன்னை அள்ளிகொண்டுபோக
அனுமதி வாழ்வை
உன்னுள் தன்வழிபோக..

துளியாய் துள்ளாதே..
துடித்தே  ஆவியாவாய்..
கடலில் குதித்துவிடு..
கடலாய் மாறிவிடு..

நீ நின்ற இடம் 
நாளை உனக்கில்லை..
நீயே யாதுமானால்
நிறைவை தவிர வேறெதுவுமில்லை.


Friday, October 29, 2010

என் கேள்விக்கென்ன பதில்?



நாம் நம்முடைய இந்திய கல்வியின்படி சிறப்பாக பதில் சொல்லவே கற்றுதரப்படுகிறோம்.
அதே 40 வருட பழமையான கேள்விகள். பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிற்து.

என்னை எப்போதும் வாட்டுவது..
ஒரு குழந்தையிடம் ¨நீ வருங்காலத்தில் என்னவாக போகிறாய்?¨ என்ற முட்டாள்தனமான
கேள்வி.
ரேடியோக்களில், டி.வியில், ஏன் நம் வீடுகளிலும் சகஜமாய் இந்த கேள்வி குழந்தைகளிடம்
கேட்கப்படுகிறது. இது ஒரு அர்த்தமற்ற கேள்வி.
அதே கேள்வியை குழந்தை உங்களிடம் திருப்பிகேட்டால்..
¨நீங்க என்னவா  ஆகி இருக்கீங்க அங்கிள்/ஆண்டி? சின்னவயசில் நீங்க சொன்னதை அடைஞ்சுட்டீங்களா?¨ என்று தன் பிஞ்சு மொழியில் கேட்டாலும்..நெஞ்சில் நஞ்சை பாய்ச்சியதுபோல
இருக்கும். காரணம். நமக்கே தெரியும்.
நாம் நம்மை இலக்கை இன்னும் அடையவே இல்லை. நம் இலக்கை இன்னும் தீர்மானிக்கக்கூட இல்லை என்பது.
குழந்தைகள் கலெக்டர்களாவதற்கு பிறக்கவில்லை, டாக்டராகவும் பிறக்கவில்லை, என்ஜினியராகவும்
பிறக்கவில்லை. அவர்கள் வாழப் பிறக்கிறார்கள்.  அவர்கள் நம்மைப்போல் கேள்விகளுக்கு பதில்
சொல்லும் கிளிப்பிள்ளைகள் இல்லை. பிரபஞ்சத்தின் மிச்சங்கள் அவர்கள். அவர்களுக்கு சிறப்பாக
பதில் சொல்ல கற்றுதருவதை விட சிறப்பாக கேள்விகேட்க கற்றுகொடுக்க வேண்டும்.

இனி பிள்ளைகளிடம் நீ என்னவாக போகிறாய் என்று கேட்காதீர்கள்..
அவர்கள் எப்படியும் நீங்கள் சொல்லிகொடுத்ததை தான் சொல்வார்கள்.
அவர்களுக்கு முதலில் வாழ கற்றுகொடுங்கள். கேள்வி கேட்கும் பிள்ளைகளால்தான் உலகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதே தவிர..
டேப்ரிக்காடர்களாலோ, கிளிப்பிள்ளைகளாலோ..இந்த உலகுக்கு ஒரு புண்ணியமும் இல்லை.

ஏன் ஆப்பிள் கீழே விழவேண்டும்? என்று ஒரு இந்தியன் யோசிக்கவில்லை.
ஒருவேளை  பூமி சூரியனை சுற்றுகிறதோ? என்று இந்தியன் யோசிக்கவில்லை. தீக்குளித்தானே முத்துகுமார்.. உண்மையில் அவன் ஈழத்துக்காகத்தான் இறந்தானா? என்று
எத்தனை பேர் யோசித்து இருப்போம்..??

3000 ஆண்டுகளாக மண்ணையும், பெண்ணையும் தின்றே வாழ்ந்த சமூகம் நம் சமூகம்.
இல்லை..இல்லை..ஆர்யபட்டருக்கு புவியீர்ப்பு தெரியும், கோள்களை பற்றியும் தெரியும் என்று சொன்னாலும்..
அவைகள் மதக்கலாச்சாரத்தில் மக்கிபோய்விட்டன.

தெரியும் என்று சொல்வதை விட..தெரிவிக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பவனை தான் உலகம்
தேடிக்கொண்டிருக்கிறது.

இன்று கேள்விகளை சிறப்பாக கேட்க தெரிந்ததால் தான் சந்திராயன் என்கிற இந்திய செயற்கோளை
உலகுக்கு தந்து நம்மால் நெஞ்சை  நிமிர்த்தி நிறக முடிகிறது.

கேட்பவனின் துணிவும், அதற்கான பதிலை  அடைய துடிக்கும் முயற்சியும் இருந்துவிட்டால்..பிரபஞ்சத்தின் கதவுகள்..தானே  திறந்துகொள்ளும்..!!

(பி.கு):  இந்த பதிவு சம்பந்தமாய் எதேனும் கேள்விகள் இருந்தால் என்னை கேட்கலாம்!!

Monday, October 25, 2010

எல்லாருக்குள்ளும் ஒரு கமலஹாசன்!!









"ம்கும்..ஆளை பார்த்ததும் என்ன நடிப்பு நடிக்கிறா /ன்.."
"வந்துட்டா/ன்.. இவ /ன்கிட்ட கமல் ட்யூஷன் போகணும்.."
”ஹையோ.. இப்படி நடிக்கிதே பக்கி.”
”ஆரம்பிச்சுட்டாண்டா/டி சீனை..!!”





இதெல்லாம் மக்களிடையே பொதுவாக ஆக்டிங் போடுபவர்களை
பார்த்ததும் எழும் மைண்ட் வாய்ஸ்.
ஏன்யா இந்த நடிப்பு நடிக்கிறாய்ங்க..?
என்னதான் பிரச்சனை இவங்களுக்குன்னு
ரோசிக்கிறதுக்கு முன்னாடி..
ஏன் நடிக்கிறோம்னு யோசிச்சமா?
லேது..இப்போ யோசிப்போம்..

பொதுவா நடிப்பு என்பது..நாலு அடிப்படை விஷயங்களால் நடக்குது.
1. சுயநலம்.   
2. சுயமரியாதை.
3. பயம்
4. கோபம்

1. சுயநலம்னா..
தனக்காக ஒருத்தரை அன்புகாட்டியோ, கோபப்பட்டோ பணியவெச்சு, அல்லது தானே பணிஞ்சு போய்
வேலைகளை முடித்துகொள்ளுதல். இதற்காக இவங்க போடுற சீன், நடிப்பு எல்லாமே வேலை முடிஞ்சதும் கலைஞ்சிடும்.

2. சுயமரியாதை..
தன்னை யாரும் எதுவும் சொல்லிடக்கூடாது..
தன்னை யாரும் தப்பா நினைக்க கூடாது
தன்னை எல்லாரும் நல்லவன், மேதாவி, அறிவாளி, அனுபவசாலினு நம்பணும்..
தன்னை ஒரு தேவமகன்/தேவமகள் மாதிரி மக்கள் பார்க்கணும்..
இப்படி தன்னை பிறர் ரொம்ப உயர்வா நினைக்கணுனே வாழும் க்ராக்குகள்..ஸாரி..
நண்பர்கள் அருமையா நடிப்பாங்க..
அவர்களை பற்றி உண்மை தெரியும்போது.. டர்ர்ர்ர்னு ஒரு சத்தத்தோட அவங்க முகத்திரை
கிழிஞ்சி..ஒரு கோரமான முகம் தெரியும்..உவ்வே.. இவங்களை கிட்டவே சேர்க்காதீங்க.
ரொம்ப பாவமா இருந்தா மட்டும் மன்னிசுடுங்க.!!

3. பயம்..
மத்தவங்க நம்மை எதுவும் சொல்லிடுவாங்களோ?
அவங்க தப்பா நினைச்சா என்ன பண்றது?
இப்படி தன் அந்தஸ்தும் மரியாதையும் கெட்டுவிடக்கூடாது என்கிற பயம்.
இது முத்தி போவதால் தான் பலவீடுகளில் இன்று வாங்கும் சம்பளம் EMI கட்டவே சரியா போகுது.
இந்த பயத்தில் இருந்து கொஞ்சம் முயன்றாலே வெளியே வந்துடலாம்.

4. கோபம்..
கோபத்துல நிறைய கேட்டகரிங்க.. வேணாமா..சரி சிம்பிளா சொல்றேன்..
கேலியால் வர்ற கோபம், ஏமாற்றத்தால் வர்ற கோபம் ரெண்டுதான் மெயினா
மனசை ரொம்ப பாதிக்கும். ஆனா அதுக்கு உடனே நெகட்டிவா எதாவது பண்ணினா..
உறவுக்கயிறு அந்துக்கும். அதுக்காகவும் நடிக்க வேண்டி இருக்கும். இதுக்கு செம
பொறுமை வேணும். (எல்லாரும் அவங்கவங்க அம்மாகிட்ட இதை கத்துக்கோங்க ;)

ஃபைனலா பார்த்தீங்கன்னா.. நடிப்பு என்பது..எந்த உறவு பாலங்கள் எளிதில் உடைந்துகொள்ளாமல்
இருக்க உதவும் கயிறு மாதிரி. ஆனா என்னைக்கு நீங்க நடிச்சீங்கன்னு தெரிஞ்சாலும்..
டமால் தான்..அப்புறம் அவங்க உங்களை மதிப்பாங்கன்னு எதிர்ப்பார்க்க கூடாது.
அதே போல்.. நடிக்கிறதே தெரியாம நடிக்கவும் நாம நல்லா பழகிக்கணும்.
அப்போ உறவுகளும் நஷ்டமாகாது. எந்த சூழ்நிலையும் கஷ்டமாகாது.

இன்னும் ஒண்ணு சொல்லிக்கிறேன்.. ரொம்ப நெருக்கமானவங்க.. லைக்..அம்மா, அப்பா,
மனைவி, கணவன், நெருங்கிய உண்மையான நண்பர்கள் ,
இவங்ககிட்ட நடிக்காதீங்க.
எவ்ளோ சூப்பரா நடிச்சாலும் மாட்டிப்பீங்க...உண்மையா இருங்க(இவங்ககிட்டயாச்சும்!!)


எப்படியோ..எல்லாரும் நல்லா நடிங்கப்பூ..!! வாழ்த்துக்கள்!! ஹிஹிஹி..!!


Tuesday, October 19, 2010

நீங்க அறிவாளியா ? நல்லவரா?


இந்த உலகமே இரண்டு முக்கியமான அம்சங்களில் இயங்குகிறது.
ஒன்று.. அறிவு. இன்னொன்று அன்பு.

சொல்லபோனால்.. இரண்டுமே எல்லாவகையிலும் ஒன்றுகொன்று எதிரானவை.
ஆனால் இந்த இயற்கையை , மொத்த பிரபஞ்சத்தை எடுத்து பார்த்தால்..
வாய்பிளக்கவைக்கும் அறிவியலும், நெஞ்சை பிழியும் அன்பும் சரிசமமாய் இணைந்திருக்கிறது.

ஏன் வானம் வரை போய்கொண்டு... ஒரு மரத்தை எடுத்துகொள்ளுங்கள்.
அதன் வேர்கள்.. அதன் கிளைகளை விட நீளமானவை.. ஆழமானவையும் கூட.
அதன் நடுமரம். அதாவது தண்டுபகுதி.. அது கடினமானதே என்றாலும்..அதன் வழியாகத்தான்
நீர் புகுந்து செல்கிறது. இது கிளைகளின் பரவி..இலைகளை தளைக்க செய்கிறது.
சூரியகாந்தி பூவை எடுத்துகொள்ளுங்கள். அதன் நடுவில் மகரந்த அடுக்கு.. அது ஒரு
Fibonacci numberக்கு சரியான குறியீடு.

இப்படி மனிதன் தன்னை சுற்றி உள்ள எல்லா விஷயங்களில் அறிவியல் ஒளிந்திருப்பதை
காண்கிறான். அதை கணிதத்திலும், கணினியிலும் கணக்கிட்டு புதிய பல மேம்பாடுகளை
அவன் வாழ்க்கைக்கு ஏற்படுத்தி கொள்கிறான்.

இப்படி, வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் அறிவியலை திணித்து திணித்து..
அதாவது..மூளையை கொண்டு மட்டுமே யோசித்து யோசித்து..இன்று மனிதன்
இதயமில்லாதவன் என்ற பெரும்பேறு பெற்றிருக்கிறான்.

ஒரு மரத்தின் இத்தனை விஷயங்களை கவனித்து கணித்த நாம், அதன்
சலசலப்பில் என்றாவது மனம் மயங்கி நின்று..நாமும் மரமும் ஒன்றாகி நின்றிருப்போமா?

இப்போது அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் வாழ்வில் நடத்த சம்பவத்தை
சொல்கிறேன் கேளுங்கள்.

ஒருமுறை  அவரை சந்திக்க சில விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள்.
என்ன விஷயம் என்று கேட்டால், புகழ்பெற்ற பீத்தோவனின் சிம்பனிகளை
ஆராய்ந்ததில் சில புதிய ஒலிமாறுபாடுகளை கண்டுபிடித்திருப்பதாகவும்,
அவைகளை ஐன்ஸ்டீனும் ஆராய்ந்து ஒரு ஒப்புகை சான்று வழங்கவேண்டும்
எனக் கேட்க வந்திருந்தனர்.
ஐன்ஸ்டீனுக்கோ வெகு கோபம், ஒழுங்காக ஓடிவிடுங்கள்.
அந்த மாமனிதரின் இசையை, அதன் தெய்வீகத்தை  ரசித்து மகிழ்வதை
விட்டுவிட்டு.. அதை கூறுபோட்டு அசிங்கப்படுத்த பார்க்கிறீர்களா?
கிளம்புங்கள் முதலில்.. என்று அவர்களை விரட்டிவிட்டார்.

 அறிவு.. என்ற ஒன்றை மட்டுமே கொண்டு
எந்த வகையிலும் வாழ்க்கையை நடத்திவிட முடியாது என்று இயற்கைக்கே
தெரிந்ததால்தான் நமக்கு இதயத்தையும் சேர்த்து வைத்து படைத்திருக்கிறது.

அதை சுத்தமாய் மறந்துவிட்டு... அறிவியலை கண்ட உலகில் அன்பை
பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்.

இதற்கு ஒரு மாற்று உண்டு.
நீங்கள் உங்களை பிடிக்காதவரோடு பேசவும் பழகவும் வேண்டி உள்ளதா?
3:1 என்கிற அளவில் , 3 பங்கு அறிவு, ஒரு பங்கு அன்போடு இருங்கள்.
உங்கள் குழந்தைகளிடம்... 1:3, அதாவது ஒரு பங்கு அறிவு..மூன்று பங்கு
அன்போடு இருங்கள். இப்படி சரியான அளவுகளில் மூளையையும், இதயத்தையும்,
பயன்படுத்த பழகிகொண்டால், வாழ்வில் நாம் எந்த தடைகளையும்
முறியடித்து வாழலாம்..!!

Monday, September 27, 2010

ஹையா ஜாலி!! நான் சுயநலவாதி!!

இதுக்கெல்லாமா சந்தோஷப்படுவாங்க.
ஏங்க..ஏன் சந்தோஷப்படகூடாது..?

இன்னைக்குதான் சுயநலம் என்பது எவ்வளவு அழகானதுன்னு புரிஞ்சிகிட்டேன்.


இது ரொம்ப முக்கியமான விஷயம். பல சந்தர்பங்களில் நாம் பொதுநலவாதிகளா மாறி நமக்கு நாமே ஆப்புவைத்துகொண்ட
நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும்  நடந்திருக்கும். அப்படிப்பட்ட நிலைமைக்கு காரணம் இந்த "பொதுநலம்" என்கிற எண்ணம்.

முதலில் பொதுநலம் என்பது என்ன? நாலு பேருக்கு கொடுப்பது.. நாலு பேருக்கு நன்மை செய்வது. இப்படி நாலு நாலு பேருக்கா
தினமும் நன்மை செஞ்சிகிட்டு  இருந்தா .நாலு பேரு நம்மை... நாலு நாள் கழிச்சு.. நாலு தெரு தள்ளி இருக்குற இடுகாட்டுக்கு தூக்கிட்டு
போகவேண்டியதுதான்.

  ஏன் இப்படி சொல்கிறேன்?

காரணம் நம்மிடம் இருப்பதில் பங்களித்து கொடுப்பதுதான் பொதுநலமாகமே தவிர.. நம்மையே கொடுத்துவிடுவது பொதுநலமில்லை.
அப்படி கொடுத்தவர்களும் உண்டு. அவர்கள் அன்பில் நிறைந்துவழிந்தவர்கள், அப்படிப்பட்ட நிறைவு, நம்மிடம் இருக்குமேயானால்
கொடுப்பதில் தவறேதும் இல்லை.

இங்கு நாமே "அய்யா சாமி"என்று அலையும்போது நம் வாசலில் எவனாவது கடன்கேட்டு வந்தால், கண்டிப்பாக உதையை தவிர வேறெதுவும் கொடுக்க
வேண்டியதில்லை. நம்மிடமே இல்லாத போது கர்ணபிரபுவாக மாறுவது முட்டாள்தனம். நம்மிடம் அதிகமாக இருக்கும்போது கஞ்சப்பிரபுவாக
மாறுவது அதைவிட முட்டாள்தனம். நாம் இவைகள் இரண்டையுமே இப்போதைய காலத்தில் சிறப்பாக செய்து வருகிறோம்.
நம் வறுமையை போக்கிகொள்ள வக்கில்லாமல் இருந்தாலும், பிறருக்காக, பொதுநலனுக்காக செய்கிறேன் பேர்வழி என்று எத்தனையோ பேர்
குடும்பத்தை கவிழ்த்திருக்கிறார்கள்.

இயற்கையில் தனக்காக வாழத்தெரியாத ஒரு பைத்தியக்காரத்தனமான உயிரனம் மனிதாக மட்டுமே இருக்க முடியும். மரங்களை எடுத்துகொள்ளுங்கள்.
அவைகள் சுயநலமானவைதான். அவைகள் நன்கு வளரும்வரை வேர்களை பரப்பி நீரை தேடுகின்றன. இலைகளில் சூரியவெப்பத்தை சேர்த்து உணவு
சமைக்கின்றன. இப்படி ஒரு பெரும் சுயநலப் போராட்டத்திற்கு பின்பே..அவைகள் பூக்கின்றன, காய்க்கின்றன, கனிகள் தருகின்றன. காரணம், அவைகள்
நிறைந்துவிட்டன. நிறைவடைந்துவிட்டன. இனிமேல் அவைகள் பொதுநலவாதிகள் ஆகலாம். அவைகள் தன்னளவில் நிறையாவிட்டால் காயுமில்லை,
கனியுமில்லை. இப்படிமொத்த இயற்கையும் சுயநலம் என்பதை சரியாக பயன்படுத்திகொள்கிறது.
இவ்வளவு சுயநலமான இயற்கையை நம்மால் ரசிக்கமுடிகிறது. நம் அருகில் இருக்கும் ஒரே ஒரு சுயநலவாதியை நம்மால் சகித்துகொள்ள முடிவதில்லை.

அப்போ எப்பவுமே சுயநலமா இருக்கணுமா?
எப்போதும் சுயநலமாய் இரு என்று சொல்லவரவில்லை. நீங்க நிறைவடையாமல், நீங்கள் முழுமையடையாமல் பிறரை முழுமைப்படுத்த முடியாது.
நீங்கள் எப்போது முழுமையடைகிறீர்களோ அப்போதே அது பொதுநலமாக மாறிவிடும். அது உங்களை மீறி நடந்துவிடும். பொதுநலம் ஒரு மகிழ்ச்சிதரும்.
நிறைவடையாமல் இப்போது நாம் செய்யும் எந்த பொதுநல சேவையும் மகிழ்ச்சிதராது. நம்மை நாமே ஏமாற்றிகொள்வது அது. நீங்கள் வாழ்வை முழுமையாக வாழுங்கள்.
முழுமை கிடைத்ததும், பிறரை கவனிக்கலாம். :)

புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு முக்கியமாய் நான் சொல்வதும் இதுதான். அவளை நீயும், அவனை நீயும் புரிந்துகொள்ளுங்கள். புரிதலில் முழுமை வந்ததும்
பிறப்பதே பிள்ளையாக இருக்கும்.!!, மற்றவை.....  ( இது ஒரு பேச்சுலரின் அட்வைஸ். :))) )

Friday, September 10, 2010

புத்தரை தடுமாற வைத்த கேள்வி!



என்னது புத்தரையே தடுமாற வெச்ச கேள்வியா? ஆமாங்க..
அப்படி யோசிச்சு கேள்விகேட்டது யாருங்க? இருங்க சொல்றேன்..
ஞானி..எல்லாம் தெரிஞ்சவர் அவர் ஏன் தடுமாறினாரு? எல்லாம் தெரிஞ்சதாலதான்..

Thursday, September 9, 2010

Deja Vu - 2006 திரை விமர்சனம்

What if you had to tell someone
the most important thing in the world,
but you knew they'd never believe you?

இந்த உலகத்திலேயே முக்கியமான விஷயத்தை ஒருத்தர்கிட்ட சொல்றீங்..
ஆனா அவங்க இதை நிச்சயம் நம்பமாட்டாங்கன்னு உங்களுக்கு தெரியும்.
அப்போ நீங்க என்ன செய்வீங்க?

Friday, August 27, 2010

"நல்லவர்"- ஒரு மோசமான கெட்ட வார்த்தை!



என்னடா இவன், நல்லவர்னு சொல்றதை கெட்ட வார்த்தை ஆக்கிட்டானேன்னு
யோசிக்கிறீங்களா.. காரணம் இருக்கு..

முதல் காரணம். நம் மனது. அதென்ன.. நன்மை தீமை, நல்லவர், கெட்டவர்..
இந்த இரண்டு விஷயங்களும் எப்படி நம் மனித சமுதாயத்தை எப்படி ஆக்ரமிக்க
ஆரம்பித்தன..?

நல்ல- என்பது என்னை பொறுத்தவரை சாதகமான என்கிற வார்த்தையின் திரிபுச் சொல்.
அதாவது நமக்கு சாதகமான எல்லாமே நமக்கு நல்லவை. நம் பேச்சை கேட்டு வளரும் பிள்ளைகள்
நல்ல பிள்ளைகள். நம் தேவைக்கேற்ற சம்பளம் வழங்கும் நிறுவனம் நல்ல நிறுவனம். இப்படி
நமக்கும், நம் சூழ்நிலைகளுக்கும் சாதகமாக எவரோ, எவைகளோ இருந்தால் அவைகள், அவர்கள்
நல்லவர்களாகிவிடுகிறார்கள்.

இந்த நல்ல , தீய என்கிற வார்த்தைகள் வெகு சீக்கிரமாக நம் மனதை  ஆக்ரமித்து நம் அறிவுக்கு
வேலை இல்லாமல் செய்து நம்மை முடமாக்கிவிடுகின்றன. அதுவும் நம்மை பார்த்தே நான்கு பேர்
நல்லவன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டால்.. முட்டாளாக முதல் வகுப்பு ஆரம்பித்துவிட்டது என்றே அர்த்தம்..!!

நல்லவர் பட்டம்: அதென்ன நல்லவர் என்கிற முத்திரை குத்துவது? ஏன் இந்த வழக்கம்?
அதாவது ஒருவர் உங்களுக்கு சாதகமாக செயல்படவோ, செயல்பட்டிருந்தாலோ அவரை உங்கள்
அருகில் வைத்துகொள்ள இந்த நல்லவர் பட்டத்தை அவருக்கு கொடுத்து நீங்களும் அவரும் சேர்ந்தே
நல்லவராகிவிடுகிறீர்கள்.

நல்லவன் ஒரு மனநோயாளி: என்னது நல்லவன் மனநோயாளியா? ஆமாம். இல்லாத ஒரு கற்பனையான
ஒரு பதவியை, முத்திரையை  தன்மீது சுமந்துகொண்டு, அதனால் ஒரு பலனும் இல்லாமல் படாதபாடுபடும்
பரிதாப மனநோயாளி. அவனுக்கு இந்த முத்திரையை குத்தியதும் சில மனநோயாளிகள்தான்.
இந்த மனநோயால் பாதிக்கப்படுவது, அவனுடைய சொந்த வாழ்க்கையும், அவனை  சுற்றியுள்ளோரின் வாழ்க்கையும்தான்.
இதை புரிந்துகொண்டாலுமே இதில் இருந்து வெளிவர பெரும்பாடு படவேண்டும்.

கடவுள் நல்லவரா? : என்னை கேட்டால் நிச்சயமாக இல்லை. நமக்கு சாதகமான விஷயங்களை , சூழ்நிலைகளை மட்டுமே  அமைத்துதரும் கடவுள் நிச்சயம் கடவுளாகக்கூட இருக்க முடியாது.
காரணம், சிறப்பான வாழ்க்கைக்கு, மேம்படும் வாழ்க்கைக்கு அன்பு எப்படி முக்கியமோ அதே போல்
சில அடிகளும் முக்கியம். இரண்டுமே நம்மை மேம்படுத்தும். நம்மை வலிமைமிக்கவராக ஆக்கும் ஒரு ஜிம் ட்ரெயினர் , அல்லது பி.டி. மாஸ்டரை போலத்தான்
கடவுள் இருக்கமுடியுமே தவிர.. நம் காதுக்கும், கண்ணுக்கும் இனிமை  அளிக்கும் கவர்ச்சி நடிகையாக இருக்க முடியாது.

இப்போ  என்னதான் செய்யட்டும்? : வெகு எளிய வழி ஒன்று இருக்கிறது. பட்டத்தை  தூக்கி எறி, அதுக்காக பத்துபேர் பல்லை உடைக்க சொல்லவில்லை.
சூழ்நிலைகளை  அப்படியே  ஏற்றுகொள்ளுங்கள். இந்த சூழ்நிலைக்கு நீங்கள் கெட்டவராகியே தீரவேண்டுமென்றால், போய்ட்டு போகுது பதவி. கெட்டவராகுங்கள்.
நமக்கு End Result தான் முக்கியமே தவிர..பட்டம் முக்கியமில்லை. கையில் கத்தியோடு எதிரி முன்னால் நிற்கும் போது, நல்லவன் வேஷம் பலிக்காது.
அவனுக்கு நீங்கள் கெட்டவனானால்தான்..உங்கள் குடும்பம் உங்களை  போற்றும். இல்லைன்னா எமதூதர்கள்கூட கேவலமாக சிரிப்பார்கள்.

மொத்தத்தில், இனிமேல் யாராவது உங்களை நல்லவர் என்று சொன்னால் எச்சரிக்கையாக இருங்கள். அது உங்களை அரவணைக்க அல்ல. ஆப்பு வைக்க.!!

 டிஸ்கி: அதே  போல் உங்களை நன்கு புரிந்துகொண்டவர்கள் உங்களை நல்லவர் என்றும் போற்றி புகழமாட்டார், கெட்டவர் என்றும் தூற்றி இகழவும் மாட்டார்.

Sunday, August 22, 2010

கல்யாணமும்,காதலும்,கசப்புகளும்!!


என்ன பாஸ் இது? என்ன இதெல்லாம்? இப்படி ஒரு பொழப்பு தேவையா நமக்கு?
நல்லா இருந்த பையனையும் பொண்ணையும் புடிச்சு கட்டிவெச்சிட்டு..இப்போ அதுங்க போடுற
ஆட்டம் தாங்கலைன்னு புலம்புறதும், அதுங்களை மாதிரி நாங்க ஒன்னும் சண்டை போட்டுக்கலைன்னு
பெருமை பேசிக்கிறதும்..ஏன் ஏன் இந்த வேலை..

..அந்த புள்ள பாட்டுக்கு படிச்சமா வேலைக்கு போனமா, ஒரு நல்ல பையனை லவ் பண்ணினமா,
வாழ்க்கைய சிறப்பா ஆரம்பிச்சமான்னு இருந்திருக்கும்..அத போய் எவனோ ஒரு குடிகாரனுக்கு கட்டிவெச்சி,
அது வாழ்க்கையை வீணடிச்சிட்டீங்க.. இப்போ அந்த நாதாரிய திருத்த அந்த புள்ள எவ்ளோ போராடிகிட்டிருக்கு.
அது மனசுல எவ்ளோ பொறுமும் , வேதனைப்படும்னு யாராச்சும் யோசிச்சீங்களா?
அந்த நாய்க்கு குடிப்பழக்கம் விட்டுபோகணும்னா மறுவாழ்வு மையத்துல சேர்க்க வேண்டியதுதானே..அதை விட்டுட்டு
இப்படியா ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிப்பீங்க..த்தூ..

இது கூட பரவால்ல..இந்தா..இந்த பையன பாருங்க..நல்லவன், நல்ல வேலை, நல்ல வாழ்க்கை, நல்ல நண்பர்கள்னு
எல்லாம் நல்லதாய் அமைஞ்ச ஒரு மனுஷன். இவனுக்கு ஒரு பொஞ்சாதி. யப்பா.. சும்மா சொல்லக்கூடாது...அடங்காபிடாரி,
இவனுக்கு என்ன கேடுகாலமோ..இப்படி ஒரு பொண்ணை கட்டிகணும்னு தலையெழுத்து. பாவம் நொடிஞ்சி போய்ட்டான்.
எப்ப பாரு, அத வாங்கி குடு, இத வாங்கி குடுன்னு தினமும் சண்டை. சம்பளத்துக்கு மீறி வாழ்க்கை நடத்தகூடாதுன்னு நினைச்சவனுக்கு,
கிம்பளம் வாங்கிகூட திருப்திபடுத்த முடியல இந்த மகராணிய. இவனோட அப்பா அம்மா மேல எனக்கு சந்தேகமா இருக்கு. இதுங்களுக்கு
பொண்ணு பார்க்க தெரியுமா தெரியாதா? இல்லை..அழகா இருக்காங்கற ஒரே காரணத்துக்காக கட்டி வெச்சிடுசுங்களா?! .. பாவம் இந்த பையன்,
இன்னைக்கு இவளால இவன் கடன்காரன், குடும்ப விரோதி, திருடன்னு பட்டம் வாங்கி குவிச்சதுதான் மிச்சம்..
...

ஸோ..மக்களே..மகாஜனங்களே!! எப்பவும் நம்ம அப்பா அம்மா நமக்கு நல்லதுதான் செய்வாங்கனு நினைச்சு..நீங்க கண்ணமூடிகிட்டு சம்மதிச்சா,
98% நீங்க அதலபாதாளத்துல குதிக்கறீங்கன்னுதான் அர்த்தம்..அது மட்டும் இல்லாம, அடுத்து வர 80 வருஷமும் உங்களுக்கு ஆயுள் தண்டனையாகவும்
போகலாம். ஸோ.. ப்ளீஸ்..யோசிங்க.. அந்த பொண்ணுகூடவோ, பையன்கூடவோ பழகி பாருங்க. உங்க குணத்துக்கு சரிவரும்னு முடிவு பண்ணிட்டு அப்புறம்
சம்மதிங்க. அழகுல மயங்கி விழுகுற வேலையே வேணாம். அது பசுத்தோல் போர்த்திய முதலை. ஸோ..ப்ளீஸ்..யோசிங்க. பழகிப்பாருங்க. முடிவுப்பண்ணுங்க.

டிஸ்கி : 
வாழ்ந்து முடிச்சவுங்களுக்காக, வாழப்போறவங்க வாழ்க்கையை தொலைக்கணும்னு எந்த தர்மமும் சொல்லலை!! அது போன்ற அதர்மமும் இல்லை!!

Monday, August 9, 2010

ஹைக்கூ என்கிற பேரில்!!

பங்கு :
மிச்சம் மீதி இருந்தா போடு தாயி
என்றுகூவிய பிச்சைகாரனை பார்த்து
கோபம் வந்தது எனக்கு,
அவள் கணவனின் உணவில் பங்கு கேட்கிறானே
என்று..!!

ஆத்திரம் :
எங்கதான்யா போச்சு?
ச்சை..ஒரே எளவா போச்சு..
வசைபாடி தீர்த்தார் அந்த உபன்யாசர்,
தன் தலையில் ஏற்றி வைத்த மூக்குகண்ணாடியை மறந்து.

வன்முறை :
அத்தனை அடியிலும்
அமைதியாய் சிரித்தாள்,
பேரக்குழந்தைகளின் பாசத்தில்!!

வலை :
மீன் வலையில் சிக்கி பார்த்திருப்போம்,
நானோ மீன் கண்கள் போட்ட வலையில்!!

கவித..கவித..!!
என்னால் எப்படி முடியும்?
ஒரு கவிதையிடமே கவிதைபாடி காட்ட?

இலவசம் : 
இவர்கள் மட்டுமே விற்பதில்லை
கொடுக்கிறார்கள்,
மழலைகளின் புன்னகை!!

Sunday, August 8, 2010

மாற்றமும் மாறும்!!



இந்த உலகத்தில் நிலைத்த தன்மை என்ற ஒன்றை நினைத்துபார்க்கவே முடிவதில்லை.
இதை இன்றைய விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்தே ஒப்புகொள்கின்றன.
காரணம், இயற்கை. இயற்கையின் நியதிகளில் மிகவும் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமாய்
இந்த மாறுதல் கோட்பாடு அமைந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இவ்வுலகமும், பிற உலகங்களும்,
ஏன்..மொத்த பிரபஞ்சமுமே இயங்கி வருகிறது.
இப்படிப்பட்ட அத்தியாவசிய மாறுதல் விதி நம்மை சுற்றி மட்டுமே நடக்கிறதா என்றால் இல்லை.
நமக்குள்ளும்,அதாவது நம்முடைய உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கு கூறுகளிலும் ஒரு தொடர் நிகழ்வாக நிகழ்ந்தவண்ணமே
உள்ளது.

நாம் அன்றைய நாகரிகமற்ற மனிதர்களைப்போல் இல்லை. கல்லை குட்டி தீமூட்டவில்லை. உணவை பச்சையாக உண்பதில்லை.
இவ்வளவு ஏன்..80களில் இருந்த மனித சமுதாயத்திற்கும் இப்போது இருக்கும் மனித சமுதாயத்திற்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள்.
இப்படி நம் அழகுணர்ச்சி முதல் நாம் பயன்பாட்டில் ஏற்றுகொண்ட பொருட்கள் வரை அவ்வளவும் தங்கள் நிலையில் இருந்து மருவி,
மாறுபட்டு நிற்கின்றன. மாறுபட்டு என்கிற வார்த்தையில் அடியிலும் எதோ ஒரு உட்கருத்து ஒளிந்துள்ளதை நான் உணர்கிறேன்.

அதுதான் படைப்பாற்றல்.

படைப்பாற்றல் என்பது ஓவியருக்கோ, பாடகருக்கோ, அல்லது சினிமாக்காரர்களுக்கு மட்டுமே இருக்கும் விஷயம் என்றால்,
நீங்கள் நினைப்பது தவறு. உங்கள் வீட்டில் தினமும் ஒரே குழம்பும் இட்லியும் செய்தால் ஏன் கோபப்படுகிறீர்கள்? மனம் புதியதை
அல்லது புதுவகையில் அதே விஷயம் மாறி இருப்பதையே விரும்புகிறது. நம் படைப்பாற்றலின் ஊற்று எல்லாருக்குள்ளும் ஒளிந்து
நம்மை மாற்றமடையவும், மேம்பட்ட ஒரு வாழ்க்கைக்கான ஊக்கத்தையும் தந்த வண்ணம் இருக்கிறது.

மாற்றங்களை தூண்டும் படைப்பாற்றல் மனித மனத்தில் ஒரு சிறந்த சீரான முதிர்ச்சியை தெளிவை கொடுக்கக்கூடியது.
அதன் எல்லைகளை தொட்டவர்கள் துறைசார்ந்த ஞானிகளாக விளங்கிகொண்டிருக்கிறார்கள். டாவின்சி முதல் ரஹ்மான் வரை
நாம் அவர்களை பெருமையோடு போற்றி வந்துள்ளோம். அப்படிப்பட்ட மாறுதலை தூண்டும் படைப்பாற்றல் எல்லாருக்கும் சொந்தமானது.

அதை அனைவரும் சுயமாய் தெரிந்துகொண்டு அதை சிறப்பான முறைகளில் வழிநடத்துவதன் மூலம் தன்னுள்ளும் மேம்பட்டு , மனித
சமுதாயத்தையும் மேம்படுத்த முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை.

Friday, July 23, 2010

உறவுப்பூர்வமான அன்பும், உணர்வுப்பூர்வமான அன்பும்!!




அன்பு, கேட்க, காண, நுகர, தொட, உணர என பல்வேறு வழிகளில் தினமும் நாம் அன்பை , அன்பாய் பெற்றும் கொடுத்தும் வருகிறோம்.
அதே அன்பு இன்றைய உலகில் இரண்டு வேறு கூறுகளாக பிரிந்துகிடக்கிறது. 

ஒன்று: உறவுப்பூர்வமான அன்பு.
இரண்டு: உணர்வுப்பூர்வமான அன்பு.

முதலில் ஏன் இப்படி அன்பு இருகூறுகளாய் பிரிந்தது என்று தெரிஞ்சிக்குவோம்.
அன்பு எப்போதும் அன்பு மட்டுமே. அதற்கு வேறு  அடைமொழிகள் கிடையாது.
ஆனால் உறவுக்காக சிலர் அன்பாய் இருப்பதாய் காட்டிகொள்ள ஆரம்பித்த போது,
உண்மை அன்பு குறைந்து சிதறி, உறவுப்பூர்வமான அன்பாகி போனது.

உணர்வுப்பூர்வமான அன்பு என்பது முழுக்க முழுக்க சுயநலமான அன்பு. என்னடா
இவன் உணர்வுப்பூர்வமான அன்பை சுயநலம் என்கிறானே என்று நீங்கள் எண்ணலாம்.
ஆனால் அதில்தான் விஷயம் இருக்கிறது.

நீங்கள் உங்கள் அன்பை பிறருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமெனில், அது முதலில் உங்களுக்காக,
உங்களுக்குள் பூத்த அன்பாய் இருக்கவேண்டும். அதாவது, உங்களுக்குள் மணற்கேணி நீராய் ஊரும்
அன்பானது வெளியே கொடுக்கப்பட்டால் அது உண்மையில் நல்ல சுயநலமான, அன்புதான்.
அப்படிப்பட்ட அன்பை தான் புத்தர் போதித்தார். ஏசு ரத்தத்தில் காட்டினார். மஹாவீரர் அகிலத்தையே
அரவணைத்து தன் சொந்த அன்பால் உலகை நனைத்தார்.

இப்படி அன்பானது அதன் துவக்கம், அல்லது அது பிறக்கும் காரணத்தை பொறுத்து மாறுபடுகிறது.
உறவுப்பூர்வமான அன்பிற்கு வருவோம். இதுதான் இந்த உலகில் இப்போது மலிந்துகிடக்கும் அன்பின்
ரகம். ஆனால் தரம் மிககுறைவு. ஏன் தரம் குறைந்தது என்கிறேன்..?

பல நேரங்களில் பல உறவுக்காரர்களை நமக்கு பிடிக்காவிட்டாலும், அவர்களை பார்த்தமட்டில் அன்பே
பொங்காவிட்டாலும், அவர்கள் மீது அன்புசெலுத்துவதாய் காட்டிகொள்கிறோம். அவர்களை நாம் ஆதரிப்பதாகவும்,
அரவணைப்பதாகவும் காட்டிகொள்கிறோம். காரணம். சொஸைட்டி. கௌரவம். அவர்கள்மீது நீங்கள் அன்பாய் இருப்பதாக
காட்டிகொண்டால் மட்டுமே நீங்கள் மற்றவரால் மதிக்கப்படுவீர்கள் என்கிற சூழ்நிலை என்பதால், இந்த அன்பு நாடகம்.

இது வெரும் உறவுக்காரர்கள் மத்தியில் மட்டும் நாம் செய்வதல்ல, நம் நண்பர்களிடமும் இதே நிலைமை தான். வசதிப்படைத்த
நண்பர்கள் கைவசம் இருக்கவேண்டும் என்பதற்காக நாம் அன்பாய் நடிக்கிறோம். சரி..நண்பர்கள், உறவுக்காரர்கள் மத்தியில்
மட்டும்தான் இந்த நிலை என்றால் அதுதான் இல்லை. ஒரு குடும்பத்திற்குள்ளேயே இது நடக்கிறது. எனக்கு தெரிந்தவர் வீடு ஒன்றில்,
கலியாணம் முடிந்த  அடுத்த வருடமே குழந்தை பெற்றுகொள்கிறார்கள்! இப்போது
இரண்டு பிள்ளைகளுடன் அந்த இளம்தாயார், "இதுங்களை பெத்ததுக்கு", "ஏன்தான் இந்த மனுஷனை கட்டிகிட்டேனோ?!" என்று எசப்பாடல்கள்
பாடிவருகிறார்.

சமுதாய அங்கீகாரத்திற்காக பிள்ளைகள் பெறுவதை  எப்போதுதான் நிறுத்துவார்களோ சில பெண்கள். இப்படி சமுதாயத்திற்காக பிள்ளைபெற்றுகொள்ளும் மனோபாவம் மாறவேண்டும்.

இப்படி பிள்ளைபெற்றவர்கள் உண்மை அன்பை அவர்களுக்கு காட்ட இயலுமா? அவர்களால் அதை உணர்ந்திருக்கவும் முடியுமா?பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்கமுடியுமா? என்பது சந்தேகமே!!

உறவுரீதியான அன்பை  விடுத்து, உணர்வுப்பூர்வமான அன்பை கொடுங்கள்!! அதுவே மனிதத்தின் வளர்ச்சியாகும். மனதின் முதிர்ச்சியும் அங்கேதான் பரிமளிக்கிறது!!
உறவுப்பூர்வமான அன்பிற்கு மனமுதிர்ச்சி தேவையே இல்லை. ஆனால் உணர்வுப்பூர்வமான அன்பில் மனம் நிச்சயமாய் முதிர்ச்சியடையும்! உலகம் மீதான பயம் தெளிந்து
தெளிவு பிறக்கும்.

உறவுரீதியான அன்பை  விடுத்து, உணர்வுப்பூர்வமான அன்பை கொடுங்கள்!!


வாழ்க்கை அன்புமயமாகட்டும், வாழ்த்துக்கள்!!


டிஸ்கி : இந்த பதிவில் தாய்மார்களை தாக்க வேண்டுமென எனக்கேதும் எண்ணமில்லை.
அப்படி தாக்கி இருந்தாலும் அது வெகு சிலரையே தவிர.. என் அன்னையை  போல் எல்லாரையும் மதிக்கிறேன்.

Friday, July 9, 2010

சிங்கத்தின் எண்ணங்கள்!!

இந்த பதிவில் நான் எழுதியது எதுவும் இல்லை..!!
விவேகானந்தரின் வீரமான வார்த்தைகளில் இருந்து பிறந்த வாக்கியங்களை இங்கே தந்துள்ளேன்..!


முடிந்தால் ப்ரிண்ட் போட்டு கண்ணில்படுமாறு ஒட்டிவிடுங்கள்.
தன்னம்பிக்கை குறைவதாய்ப்படும் சமயங்களில் இது பெரிதும் உதுவும்.(அனுபவச்சி சொல்றேன் :) )







* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.


* நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும்.


* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில் அக்கறை காட்டுங்கள்.


* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக இன்னொன்றைக் கொடுங்கள்.


* மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.


* ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.


* எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடையவராகுங்கள். உங்கள் மீதே முழுப்பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப்பழகுங்கள்.


* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.


* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்கு தேவை.


* தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும் இறைவனே முன்நின்று உதவுவார்.


* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.


* நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சியளிக்கிறது. நமது எண்ணங்களே உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும் ஆக்குகின்றன.


* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

Tuesday, June 22, 2010

தூக்கமும், மரணமும், கொஞ்சம் புரிதலும்!! பாகம்-1

இரவு தூங்கும் நேரம்..நினைவு தூங்கிடாது!! நினைவு தூங்கினாலும், உறவு தூங்கிடாது!!
நல்ல பாடல் !! இரவில் கேட்க இன்னும் சுகம்..!!

தூக்கம் மனிதனின் ஆதர்ஷ நண்பன். இவன் அதிக நேரம் நம்மோடு இருந்துவிடவும் கூடாது.
வராமலும் நம்மை வருந்தவைக்க கூடாது.

ஒரே ஒரு நண்பனை மட்டும் நாம் எப்போதும் வரவேற்பதில்லை. அவன் பெயர் மரணம்!!

இவைகள் இரண்டை பற்றியும் நான் சிந்தித்து தெளிந்த கருத்துகளை சொல்ல ஆசைப்படுகிறேன்..!!

தூக்கம், மரணம் இவை இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்களாக...அல்லது
ஒரே விஷயமோ என்று யோசிக்கிறேன்!!


முதலில் தூக்கத்திற்கு வருவோம். தூக்கம் என்பது உடம்புக்கு ஓய்வு கொடுத்து மனதை அமைதிப்படுத்தும்
ஒரு தினசரி நிகழ்வு. சிலருக்கு இது நடப்பதே இல்லை..உடம்பு ஓய்வுபெற்றாலும் மனம் தூக்கத்திலும் இயங்கி,
தூக்கத்தை கெடுத்துவிடுவது வேறு கதை :).

இப்போது தூக்கத்தின் சாரத்தை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டி
இருக்கிறது. முதலில் தூக்கம் துவங்கும் போது..உடனே கண்கள் மூடி ஆழ்ந்து தூங்கிவிடுவதில்லை. முதலில் உடலுக்குள்
ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு..கொஞ்சமாய் நம் கைகளும் கால்களும் ஓய்வு பெறுகின்றன..அடுத்து அடிவயிறு, மேல்வயிறு..பிறகு
மார்பு என இந்த பகுதிகளில் ஒரு அயற்சி ஏற்பட்டு அந்த சதைகள் இளகுகின்றன.

பிறகு அதற்கும் மேலாக நம் தோள்பட்டை சதைகள்
இளகிவிடும் போது..தூக்கம் நம்மை நெருங்கியதாக உணர ஆரம்பிக்கிறோம். மூச்சு லேசாகிறது. ஆழ்ந்து மூச்சுவிட முடிகிறது. கண்கள்
கனத்து தூக்கம் வந்துவிடுகிறது. அடுத்து..உடல் மீண்டும் சுறுசுறுப்பாகிறது. உங்கள் அனுமதியை பற்றியெல்லாம் கவலைப்படாமல்
உடல் திசுக்கள் தானாக தங்களை சரிசெய்து கொள்கின்றன.

அடுத்த கட்டமான ரிப்பேர்கள் முடிந்து உடல் சமநிலை பெறுகிறது. அப்போது உங்களை மறந்து ஆழ்ந்து தூங்கிபோவீர்கள்.அப்போது
நம் உள்ளார்ந்த சக்திகள் அனைத்தும் நிதானமடைந்து அவைகள் உயிராற்றலுடன் கலந்துவிடுகிறது. இதைதான் “Returning to Source" என்று
சொல்வார்கள். அதாவது உயிரின் மூலத்திற்கே எல்லா சக்திகளும் திரும்பி விடுவது. அப்போது கொஞ்ச நேரம் நீங்கள் மரணமடைந்தவர்தான்.

....இதில் நல்ல விஷயம் என்னவென்றால் காலை நீங்கள் எழும் போது..உங்கள் முதல் கான்சியஸில் சக்திகள் அனைத்தும் உடலின் பாகங்களுக்கு
மீண்டும் பரவி உங்களை ஃப்ரெஷ்ஷாக்கி விடுகிறது. தூங்கி எழுந்தவுடன் ஃப்ரெஷ்ஷாக உணர்வதெல்லாம் அதனால் தான்.
புதிய சக்தி உங்கள் உடலில் பாயதுவங்கியதால்.நாம் எப்போது தூங்குவோம், எப்போது விழிக்க வேண்டும், என்ற கால நேர வரையறைகளில்
தூக்கம் முடிந்துவிடுகிறது. ஆனால் ”மிஸ்டர் மரணம்” அப்படி இல்லை..!!

”நான் எப்போ வருவேன்..எப்படி வருவேன்னு யாருக்கு தெரியாது” ...என்று அது பஞ்ச் டயலாக் பேசினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உண்மை என்னவோ அதுதான்..!!

மனிதர்கள் தூங்க தயார். சாக தயாரில்லை என்று சொல்வதே வினோதமான ஒன்று.
தூக்கம் என்பதே ஒருவகை வரையறுக்கப்பட்ட மரணம்தான்.!!


நீங்கள் உங்கள் உடலில் இறந்து...மீண்டும் அதே உடலில் மீண்டும் விழிந்தெழுந்தால் அது தூக்கம்...!! 
நீங்கள் இன்று தூங்கி நாளை காலை வேறொரு உடலில் விழித்தெழுந்தால்.. அது தூக்கமில்லை ..மரணம்!!



மரணம் பற்றிய பயத்தை விட அதை பற்றிய புரிதல் தேவை..அப்படி புரிந்துகொண்டால் அது எவ்வளவு நல்ல விஷயம் என்பது புரியும்..!!
அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்..!!

Tuesday, June 15, 2010

பாட வராதா? ஆட வராதா? கவிதை வராதா? பொய் சொல்லாதீங்க..!!

ம்ம்ம்ம்..மனிதர்கள் தோன்றி ஒரு 2 லட்சம் வருடங்கள் இருக்குமா?

                      

இருக்கும்...!! கடந்த கால மனிதர்களுக்கும் நம் நவீன கால மனிதர்களுக்கும் தான் எத்தனை வித்தியாசம்.!!
எத்தனை மாற்றங்கள், எத்தனை முன்னேற்றங்கள், எத்தனை சவுகரியங்கள், சுகங்கள்!!

இதை, இந்த சவுகரியத்தையும் சுகத்தையும்தான் அந்த ஆதிகால மனிதன், அந்த கல்லை குட்டி தீமூட்டி நின்றவன்
சிந்தித்தான். செயலாற்ற முனைந்தான். அதுவே இன்று நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டுருக்கின்றன..!!

இதற்கு அடிப்படை மனிதனின் படைப்பாற்றல்!! Creativity. அது அவனை இன்னும் பல்வேறு மைல்கள் கொண்டுசெல்லும்
என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை..!! அது எப்போதும் முட்டி மோதி தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது..!!

ஆனால்..இப்போது சூழ்நிலை சரியில்லையோ என்று தோன்றுகிறது. என்னிடம் பேசும் பலர்...எனக்கு கற்பனைத் திறன் கம்மி!! என்று
பெருமையாக சொல்லும் போது “வெகு சிறுமையாக உணர்ந்தேன்”..!!
என்ன செய்ய..இப்போது இதுவே ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது..

ஹிஹி..!! எனக்கு பாட வராது..!! எனக்கு வரைய வராது..!! எனக்கு வாசிக்க வராது..!! என்று எல்லா படைப்பாற்றலையும்
வராது வராது என்று சொல்லியே வரவிடாமல் செய்துவிட்டோம்..!!

ஏன் நான் வரைய வராது என்று கூசாமல் சொல்கிறேன்..?? அடிப்படை படைப்பாற்றலையே அழிக்க பார்க்கும் இந்த சுபாவம்
எங்கிருந்து வந்தது?
அதன் அடிப்படை..நம்முடைய தாழ்வு மனப்பான்மை.!! இப்போது இந்த மொத்த சமூகத்திலும் தாழ்வு மனப்பான்மை பெருமையானதாக
மாற துவங்கி இருக்கிறது..!!

நாம் பாடலாம், ஆடலாம், வரையலாம், இசை மீட்டலாம், குறுந்திரைப்படங்கள் இயக்கலாம்..இப்படி எல்லா வகையான படைப்பாற்றல்மிக்க
செயல்களும் செய்ய நமக்கு வசதியும் வாய்ப்பும் இருந்தும்....நாம் வராது என்று சொல்வது நம் கையை நாமே முறித்துகொள்வது போல்.!!

நாம் ஒரு புல்லாங்குழலை எடுத்து ஊத ஆரம்பிக்கும் போது  மனம் சொல்லும்..”இதனால் உனக்கென்ன புதிதாய் வேலைகிடைத்துவிட போகிறதா?
இதனால் என்ன ப்ரயோஜனம்? வீணான வேலை இல்லையா இது? “இப்படி மனம் பல்வேறு வழிகளில் உங்கள் படைப்பாற்றலை முடக்கி போடும்..!!

கண்டுகொள்ளவே செய்யாதீர்கள்.உங்கள் ஜென்ம சனி உங்கள் மனம் மட்டுமே..!! இதயமும் அறிவும் கலந்து நடத்தும் படைப்பாற்றிலின் வித்தையை
மனம் எப்போதும் குறுக்கிட்டு கெடுக்கும்..!

விடாதீர்கள்..அதை கண்டுகொள்ளாமல்.. இசையை..அந்த ஆழ்ந்த நேசத்தை..உங்களுக்கான உள்ளார்ந்த காதலை..
அன்பை..இறைவன் அருளை..அனுபவியுங்கள்..!! நீங்கள் பார்த்திராத நிம்மதியும் அமைதியும் உங்களை தேடி வந்து தாலாட்டும்..மீண்டும்
உங்கள் தாயின் மடிக்கே திரும்பிய சுகத்தை நிச்சயம் உணர்வீர்கள்..!!

முயன்றுபாருங்கள்..!! படைப்பாற்றலை கையிலெடுங்கள்..!! அது தரும் நிம்மதியை உணருங்கள்..முழுமையான மனிதராய் வாழுங்கள்!!
வாழ்த்துக்கள்!!

Friday, June 4, 2010

கண்ணன் ஏன் தோற்பதில்லை?

சென்ற பதிவில் பார்த்ததுபோல்..கண்ணனின் டெக்னிக் என்ன என்பதை ஆராய்ந்தோம்.
இப்போது..அவன் எப்படி வெற்றி வீரனாக திகழ்கிறான் என்பதை பார்ப்போம்.

http://moralstories.files.wordpress.com/2006/10/chaanuura-mushtika-vadha.jpg
இதை புரிந்துகொள்ள, முற்றிலும் வித்தியாசமான சிலவற்றை சொல்லப்போகிறேன்.
என்னை பொறுத்தவரை, வெல்ல விரும்பாதவனே வெல்கிறான்; வெல்ல நினைப்பவன் தோற்றுவிடுகிறான்!
அந்த கதைகள் எல்லாம், நான் புரிந்துகொண்ட அளவில், இதைத்தான் சொல்கின்றன.

வெல்லும் ஆசைக்குள், தோல்வி ஒளிந்து கொண்டிருக்கிறது, அதன் அடியாழத்தில். இந்த கண்ணன் ஆசையற்றவன் ,
ஏற்கனவே வென்று விட்டான், இனி வெற்றி அவனுக்குத் தேவையில்லை என்பது பொருள்.

இதை வேறு கோணத்திலும் புரிந்துகொள்ளலாம். யாராவது ஒருவர் வாழ்வில் வெல்ல ஆசைப்பட்டு, அதற்காகப்
போராடுகிறபோது, அடியாழத்தில், ஏதோ இல்லை என்ற தவிப்பு இருக்கிறது; தாழ்வு மனப்பான்மையால் அவர்
தவித்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அடியாழத்தில் அந்த தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அதை வெற்றியால்
மூடி மறைக்கிறார் என்று அர்த்தம்.

இதற்கு மாறாக,  வெற்றிகளை விரும்பாத ஒருவர், தன்னுடைய மனத்தில் தாழ்வு மனப்பான்மையின் சிறு சாயல் கூட
இல்லாதவராய் இருப்பதால்..எதையும் வெற்றி கொள்ளும் ஆவல் அவரிடம் இல்லை.

ஒரு ஜென் குரு தன் நண்பர்களிடம் “நான் சாகும்வரை என்னை யாரும் வெல்ல முடியாது” என்று கூறினார்.
அவருடைய நண்பர்களில் ஒருவர் எழுந்து “ அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள். நாங்களும் வாழ்க்கையில்
வெற்றி பெற விரும்புகிறோம். எங்களை யாரும் வெல்லக் கூடாது” என்றார்.

அந்த குரு சிரிக்க ஆரம்பித்தார். “அப்படியானால் அந்த ரகசியம் உங்களுக்கு விளங்காது. நான் சொல்லிமுடிப்பதற்குள் நீங்கள் குறுக்கிட்டுவிட்டீர்கள்.
முழுவதுமாய் கேளுங்கள். நான் சொன்னது என்னை வெல்ல யாராலும் முடியாது ஏனென்றால் நான் முழுமையாக தோற்றுவிட்டேன். எனக்கு தோல்விக்கான
அச்சமோ, வெற்றிக்கான ஆவலோ இல்லை, எனவே என்னை எவராலும் வெல்ல முடியாது” என்று சொன்னேன் என்றார்.

நம்முடைய அடிப்படை வெற்றிகான வெறியே தோல்விக்கு இட்டுசெல்கிறது. எப்படியும் வாழவேண்டும் என்கிற ஆவலே உங்களை கல்லரைக்கு தள்ளிவிடுகிறது.
இன்றைய சமூகத்தில் ஆரோக்கியத்திற்கான அதிகப்படியான அக்கறையே நோய்களில் தள்ளிவிடுகிறது. இயற்கை வித்தியாசமானது. எதன்மீது மிகவும் அன்பு செலுத்துகிறோமொ
அதை சீக்கிரமே நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது.

கண்ணனுக்கு எல்லாமே விளையாட்டு தான். குழந்தைகள் விளையாட்டிற்காகவே விளையாடுகின்றன. அவைகள் அதில் உள்ள வெற்றிக்காகவோ,
பெருமைக்காகவோ விளையாடவில்லை. அப்படி விளையாட அவர்கள் ஒன்றும் நம்மை போல் பைத்தியக்காரர்கள் இல்லை. முக்கியமாக கண்ணன்
பைத்தியக்காரனில்லை என்றே நினைக்கிறேன். சரிதானே?

Anyhow,இதுதான் என் கண்ணனின் விளையாட்டான வாழ்க்கையின் சாராம்சத்தை கொஞ்சமாய் ருசித்துபார்த்துவிட்டோம். அது என்னவென்றால்,
வாழ்க்கையை அதற்காக மட்டுமே வாழ்வது, லட்சிய வெறி, பண வெறி, காம வெறி, காதல் வெறி(இப்படியும் சிலருண்டு), பதவி வெறி என்கிற
எந்த மடத்தனமும் இல்லாமல், வாழ்க்கையை அதன்வழியிலேயே ஏற்றுகொள்வதே வாழ்வதாகும்.
வெற்றியை பற்றி கவலையே படாதீர்கள், வென்றுவிடுவீர்கள்..!!
வாழ்த்துக்கள்!!

டிஸ்கி:
பதிவுலகில் சண்டைகளும், சமாதானங்களும் சகஜமான ஒன்று தான். ஆனால் அடிப்படையான ஒரே விஷயமே இரண்டு வருடங்களாக ஒரு சண்டைக்கு
காரணாமாக அமைந்துவிட்டது. அது ”இமேஜ்”. நமக்கு தரும் பட்டமே நமக்கு வைக்கப்படும் ஆப்பு என்பதை பதிவர்கள் உணரவேண்டும். அதே போல்
நாம் நம் திருப்திக்காக எழுவது மட்டுமே சரியான வழியே தவிர..மற்றவருக்கோ, கடை பரபரப்பாக இருக்கவேண்டும் என்றோ எழுதினால் சிக்கல்தான். இது என் பணிவான அட்வைஸ்..!!

இமேஜை விடுங்கள். நீங்கள் நீங்களாக மட்டுமே எழுதுங்கள். வாழ்த்துக்கள்!!

Wednesday, May 26, 2010

எப்படி குட்டி கண்ணன் அசுரர்களை வென்றான்?

தலைப்பில் உள்ள கேள்வியை படிக்கும்போதே இரண்டு மாபெரும் முரண்கள்  விளங்கும்.




1. குட்டி கண்ணன் , கண்ணன் வாலிபனாகவோ, 30 வயதுக்கு மேற்பட்டவனோஇல்லை..குட்டி..அதாவது குழந்தை கண்ணன்.

ஆச்சரியம்...ஒரு குழந்தை அசுரர்களை ஜெயிக்கிறது!!!

2. அசுரர்கள் , மாபெரும் வீரர்கள், கோபக்காரர்கள், பலம் கொண்டு தாக்குபவர்கள்.
அதைவிட ஆச்சரியம்..இவ்வளவு பெரிய வீரர்கள் குழந்தையிடம் தோற்கிறார்கள்!!

இது வெறும் புராணம்தானே.!! புராணங்களை உண்மை என்று ஏற்றுகொள்ளவேண்டிய அவசியமில்லை
என்று நாம் நினைக்கலாம். என்னை பொறுத்தவரை கண்ணன் இருந்தானா இல்லையா என்பதை விட
அவன் மூலமாக அந்த புராணத்தை எழுதிய மனிதர்கள் சொல்லவருவது என்பதே முக்கியம் என்றுபடுகிறது.
அதன் அடிப்படை மனோத்தத்துவம் புரிந்துவிட்டால் அந்த புராணம் மிகவும் நன்மைதரக் கூடியதாக இருக்கும்.

அப்படி யோசிக்கும் போது இங்கே நமக்கு தெரிந்த “வலியவன் எளியவனை வெல்வான்”என்பது இந்த விஷயத்தில்
ஒத்து போகும். ஆம், கண்ணன் எல்லாம் வல்ல கடவுள், அதனால் தன் சிறுவயதிலேயே அசுரர்களை அழிக்க
முடிந்தது என்று முடிவு கட்டிவிடலாம். அதற்கும் என் மனம் ஒத்துபோகவில்லை. இன்னும் யோசிக்கிறேன்.

இங்கே வேறு ஒருவகை தத்துவத்தை என்னால் பார்க்க முடிகிறது. கண்ணன் ராமனை போல அல்ல, ராமன் வாழ்க்கையை
ஒரு பெரிய வேலையாக, கடமையாக, தொழிலாக ஏற்றவன். கண்ணன் அப்படி அல்ல, அவனுக்கு எல்லாமே விளையாட்டு.
எதிரிகளை கொல்வதும், கோபியரின் மனதை வெல்வதும் என எல்லாமே அவனுக்கு விளையாட்டு.

எனவே, அசுரர்களை அழிப்பதை ஒரு விளையாட்டாக செய்திருக்கிறான் கண்ணன். ஆம், அவனுக்கு பெரிதாய் எந்த
சக்தியும் தேவைப்படவில்லை. அசுரர்களின் கோபமும், ஆத்திரமுமே அவர்களை அழித்துவிட்டது. கண்ணன் அதை
தூண்டிவிட்டால் மட்டும் போதும்.

என்னது...? அசுரர்களின் கோபமே அவர்களை கொன்றதா? என்று கேட்கலாம்.
ஆம்,உண்மை என்னவோ அதுதான்.

இதற்குமுன் நீங்கள் ஜூடோவை பற்றி அறிந்துகொண்டால் இது உங்களுக்கு புரியும். ஜூடோ என்பது ஒரு மல்யுத்த கலை.
கராத்தெ, குங்ஃபூ போல் அல்லாமல் இது சற்றே அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத கலை. இந்த கலையின் அடிப்படை விதியே,
கோபப்படுபவன் தோற்பான் அல்லது தாக்குகிறவன் தோற்பான் என்பதுதான். அப்படி எதிராளியை முதலில் தாக்கவிட்டு,
அவனின் தாக்குதலை முழுமையாக ஏற்றுகொள்ளும்போது அது நமக்கு இரண்டுமடங்கு பலத்தை தருகிறது. அதே போல் எதிராளியும்
விரைவில் சோர்ந்துபோய்விடுகிறான். இப்படியாக, எதிராளியை கோபப்படுத்தியே வெற்றிபெற்றுவிடலாம்.

அதற்காக, கண்ணன் ஜூடோ கற்றவன் என்று சொல்லவரவில்லை. அவனுடைய “டெக்னிக்” ஜூடோவை ஒத்ததாக இருக்கிறது
என்பதே இதன் பொருள்.

அதே போல் கண்ணன் அந்த சண்டையில் வெற்றிபெற வேண்டும் என்கிற நோக்கத்தோடும் வெறியோடும் இருந்திருந்தால் சில அசுரர்களிடம்
தோற்றிருப்பான். ஆனால் அவனுக்கு வெற்றி தோல்விகள் மீது பற்றில்லை, எனவே எல்லாரையும் தூக்கிப்போட்டு துவம்சம் செய்ய அவனால்
முடிந்தது. எப்படி? வெற்றி பெற நினைக்காமல் எப்படி வென்றான்?

அடுத்த பாகத்தில் பார்ப்போம்!!



(டிஸ்கி) : இது மதப்பிரச்சாரத்திற்கான பதிவு அல்ல. கண்ணனை புகழ்வது என் நோக்கமுமல்ல. அவனை கொண்டு அந்த காலத்து மனிதர்கள் நமக்கு என்ன சொல்லவருகிறார்கள் என்பதை ஆராய்வதே என் நோக்கம்..!!

Wednesday, May 5, 2010

ஒரு பெரிய்ய்ய்ய்ய விஷயம் - ஒரு குட்டி கதையில்!!

இந்த நாளை கொண்டாடுங்கள்!!




அந்த துறவிகள் கூடத்தில் புதிதாக சேர்ந்திருந்தார் அந்த இளம் துறவி.
மாலை நேரத்தில் அந்த ஆசிரமத்தில் இருக்கும் மூத்த துறவியிடம் சென்று ஆசிப்பெற்றுவிட்டு
தன் அறைக்கு திரும்பினார் துறவி. விடிகாலை தியானத்திற்காக சீக்கிரம் எழுந்தார் அந்த இளம் துறவி.
வெளியே வந்து பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்..அந்த மூத்த துறவி மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்தார்.
இந்த இளம்துறவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “என்னடா இந்த மனிதர் இப்படி குதிக்கிறார்..ஆடுகிறார்..பாடுகிறார்?..ஒருவேளை இவருக்கு
பைத்தியமோ” என்று நினைத்துகொண்டார்.

பிறகு அடுத்த கட்ட வேலைகள் வந்து சேர..இந்த விஷயத்தை மறந்து போனார்.
இரவு படுக்க போகும் போதும் இதே போல மூத்த துறவி குதித்தாடி கொண்டே தன் அறைக்கு செல்வதை இந்த இளம்துறவி பார்த்துவிட்டார்.

“என்ன இந்த மனிதர் இப்படி செய்கிறாரே..குழந்தைதனமாக அல்லவா இருக்கிறது” என்று நினைத்தபடியே தூங்கிப்போனார்.

அடுத்த நாள் காலையும் அதே போல் மூத்த துறவி குதியாட்டம் போட..
இந்த இளம்துறவிக்கு ஆர்வம் தாங்கவில்லை.. நேரடியாக கேட்டே விடுவது என்று முடிவு செய்து அவரை நெருங்கினார்.

மூத்த துறவி இவரை பார்த்து புன்னகைக்க..
இவர் தன் சந்தேகத்தை கேட்டார் : “அய்யா, கடந்த இரண்டு நாட்களாக நானும் கவனித்து வருகிறேன்..நீங்கள் தினசரி காலையும்
இரவு தூங்க செல்வதற்கு முன்னும் இப்படி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறீர்கள்..இது ஏன்? அப்படி என்ன விஷயத்தை சாதித்ததால்
இந்த மகிழ்ச்சி? எனக்கும் சொல்லுங்களேன் “ என கேட்கிறார்.

அந்த கேள்வி மூத்த துறவியை இன்னும் சிரிப்பு மூட்டியது. விழுந்து விழுந்து சிரித்தார்.
இப்போது அந்த இளம்துறவியை பார்த்து கேட்டார் : “எதாவது சாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா என்ன?”என்று.

இவரும் ”ஆமாம், அதுதானே மகிழ்ச்சி”என்று சொல்ல..

மூத்த துறவி “அப்படி பார்த்தால் நான் இங்கே உன்னோடு பேசிக்கொண்டிருப்பதே சாதனை தான்” என்றார்.

இளம்துறவிக்கு இன்னும் புரியவில்லை. “எப்படி வெறுமனே பேசுவதே சாதனையாகும் ?” என்று கேட்டார்.

துறவி கொஞ்சம் நிதானித்து விளக்கினார் “ இன்று நீ என்னிடம் பேச, இந்த கேள்வியை கேட்க இறைவன் அல்லது இயற்கை உன்னை
இன்னும் உயிரோடு வைத்திருக்கிறதே..அது சாதனை தான். இன்று காலை நீ மரணத்தை வென்று விழிந்தெழுந்துவிட்டாய். இதோ
என் பேச்சை கவனிக்கும் இந்த கணம் நீ மரணமடையவில்லை..எனவே நீ மரணத்தை வென்று வாழ்கிறாய்....இப்படி உலகையே அச்சுறுத்தும்
மரணத்தை சர்வ சாதரணமாக வெற்றிகொள்வது சாதனை இல்லையா..இதற்கு நீ மகிழ்ச்சி கொள்ள வேண்டாமா?” என்று கேட்கிறார்.



இளம்துறவியின் கண்கள் பனித்தன. மகிழ்ச்சி அவரையும் தொற்றிகொள்ள..அவரும் எழுந்து நடனமாட துவங்கி விட்டார்.

.....

இந்த கதையை படித்து முடிக்கும் வரை எல்லாமே சரியாக நிகழ்ந்திருக்கிறது. உங்கள் கணினி சரியாக இயங்குகிறது. உங்களுக்கு கண் பார்வை
தெரிகிறது. நீங்கள் அழகாக மூச்சு விடுகிறீர்கள். சொல்லப்போனால் இன்னும் உயிரோடு தான் இருக்கிறீர்கள்..எனவே மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
சோதனைகளை எல்லாம் சாதனையாக்குங்கள்.

(பி.கு)இது முழுக்கதையும் எங்கிருந்தும் எடுக்கபடவில்லை. என் எண்ணங்களில் உதித்தது தான். :)

Friday, April 23, 2010

உங்களுக்கு கடவுள் மீதிருப்பது நம்பிக்கையா ? பயமா?

கடந்த சில வருடங்களாகவே என்னுள் எப்போதும் ஒரு ஊசலாட்டம்.
நம்பிக்கை, நம்பிக்கையின்மை(பயம்) இவைகளுக்கு இடையேயான ஊசலாட்டம் அது.

http://geesun.files.wordpress.com/2009/12/believe_small1.jpg

எல்லா ஊஞ்சல்களையும் போல இது மேலேயும் கொண்டு சென்றது. கீழேயும் தள்ள பார்த்தது.

என்ன செய்ய? எல்லா மனிதனுக்கும் இந்த ஊசலாட்டம் இருந்துகொண்டு தானே இருக்கிறது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
நானும் இந்த ஊசலில் ஆடி ஓய்ந்த போது ஒரு சின்ன விஷயம் மூளையில் பளிச்சிட்டது. அதுதான், நம்பிக்கை, பயம் இரண்டுமே
ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல். அவைகள் ஒன்றை ஒன்று சார்ந்தும், சாராமலும் இயங்கும்
ஒரு விசித்திர இயந்திரமாய் தெரிந்தது.

ஒரு இருட்டறையில் நுழையும்போது, அங்கே எதுவும் இருக்காது என்கிற நம் மனதின் நம்பிக்கையே, எதாவது இருக்குமோ என்கிற பயமாய்
மாறிவிடுகிறது. இது எப்போதும் நிகழ்வதே. நம்பிக்கையே நாம் செய்யும் எந்த செயலுக்கும் அடிப்படை. பயமே நாம் தவிர்க்கும் எந்த செயலுக்கும்
அடிப்படை. இப்படி நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஆதார சுருதியாக விரும்பும் இந்த இருவரின் கையில் நாம் பொம்மைகளாக இருக்கிறோம்.

http://ui05.gamespot.com/260/fear_2.jpg

நம்பிக்கையால் தூண்டப்படுவதும், அதனால் சில செயல்கள் செய்வதும், அது தோற்றபின் அந்த செயலில் பயம்கொள்வதும்
எப்போதும் நடக்கிறது. எப்போதும் நாம் முழுமையாக வெற்றியடையும் என்கிற நம்பிக்கை உடைய விஷயங்களை மட்டுமே முன்னுரிமை தருகிறோம்.
தோல்வி சார்ந்த விஷயங்களை நாம் எப்போதும் கண்டு அஞ்சுகிறோம். இந்த அச்சம் தேவையற்றது என்கிறேன்.



குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருக்கிறீர்களா? அவைகள் எப்போதும் வெற்றிக்காக விளையாடுவதில்லை.
அந்த விளையாட்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே அவைகள் விளையாடுகின்றன. வெற்றிக்கான வெறியும் இல்லை. தோல்விக்கான
பயமும் இல்லை.
கால்பந்து வீரர் பீலே ஒரு பேட்டியின் சொன்னார் :
“நான் விளையாடவே ஆசைப்படுகிறேன். ஆனால் என்னையும் அறியாமல் ஜெயித்துவிடுகிறேன்” என்று.

வாழ்க்கை நம்பிக்கையை சார்ந்ததும் அல்ல, பயத்தை சார்ந்ததும் அல்ல. அது வாழ்க்கையை முழுமையாக ஏற்றுகொள்வதிலேயே இருக்கிறது.

ஒரு அருவியில் குளிப்பதை போல், ஒரு தென்றலை அனுபவிப்பதை போல, ஒரு குழந்தையோடு கொஞ்சி மகிழ்வதை போல..
அது எப்போதும் நம்பிக்கைக்கும், பயங்களுக்கும் அப்பாற்பட்டதாய்...அன்பு மயமானதாய், ஆனந்தமானதாய் இருக்கிறது.

நம்பிக்கை, பயம் இந்த இரண்டையுமே கடந்து விட்டால் கடவுளும் உங்கள் கைப்பிடித்து நடப்பார் :)

மறக்காம ஓட்டும் கமெண்டும் பண்ணிடுங்க..!!

நன்றி,
ரங்கன்

Wednesday, April 7, 2010

வார்த்தைகளினூடே கவனித்தல்!!

கடந்த சில வருடங்களுக்கு முன்,


ஒரு பள்ளி பாராட்டு விழாவில் கலந்துகொள்ள என் அப்பாவும் நானும் சென்றிருந்தோம்.
அங்கே மேடையில் பள்ளி சார்பான பெரியோர்கள், ஆசிரியர்கள் அமர்ந்திருந்தார்கள்.
அப்பாவின் அருகில் அமர்ந்தபடி அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்தேன்.
அப்போது அப்பா ஒரு சிலர் பேசும் போது “இவர் பொய் சொல்கிறார், இவர் உண்மையாக பேசுகிறார்” என்று
அவ்வப்போது என்னிடம் சொல்வார்.

அன்று இரவு அப்பாவிடம் ”அப்பா , எப்படி அவர்கள் பொய் சொல்கிறார், உண்மையை சொல்கிறார்னு
உங்களுக்கு தெரியும்?” என்று கேட்டேன். அவர் “அதில் விஷயம் இருக்குப்பா, நீ ஒருத்தர் பேசும்போது
எப்படி கேட்பாய்? வரிசையான வார்த்தைகள் உன் காதில் விழும்..அதை உன் மனசு படிக்கும் போது அது பேச்சை கேட்பதாகிறது,
அதுவே..அந்த வார்த்தைகளுக்கு இடையே..பேச்சில் ஏற்ற இறக்கங்களை கவனித்தும்..அவர் கண்களை கவனித்தும்,
உடல் அசைவுகளை வைத்தும் அவர் உண்மையாக பேசுகிறாரா? அல்லது பொய்யுரைக்கிறான்னு சொல்லிட முடியும்”
என்று ஒரு விளக்கம் கொடுத்தார்.


அப்போது என் அறிவுக்கு அது புரியவில்லை. அவரும் அதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. ஆனால் அவர் சொன்ன விஷயம்
அதன் கருத்து, அந்த சாரம் மனதில் அப்படியே இருந்தது. என்றாவது இந்த கருத்தை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்து
அதை மனதிலேயே பத்திரமாய் வைத்திருந்தேன்.

சில வருடங்கள் கடந்தன..மீண்டும் பல்வேறு மனிதர்கள், மற்றும் நண்பர்களை சந்திக்க வேண்டி வந்தது.
அப்போது எனக்கு அப்பா சொன்னாரே அந்த ”வார்த்தைகளுக்கு இடையே கவனித்தல்” ஞாபகம் வந்தது.
அதை கொஞ்சம் கொஞ்சமாய் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன்.

சில மாதங்களிலேயே நல்ல பலன் கிடைத்தது. நண்பர்கள் பேசும்போது அவர்கள் வார்த்தைகளிடையே கவனித்தேன்.
வெகு சிலரே உணமையான பற்றோடும், பாசத்தோடும், அக்கறையோடும் பேசுகிறார்கள் என்பதும், மற்ற 75% பேர்
காரியம் ஆகவே பேச்சுகொடுக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

இதை அப்பாவிடம் சென்று சொன்னேன். அவர் புன்னகைத்தார். என் உறவினர் ஒருவரிடம் பேச சொன்னார்..
அவர் எப்படிப்பட்டவர் சொல் பார்ப்போம் என்றார். அந்த உறவினர் நல்ல மனிதர். எப்போதும் உற்சாகமாகவும், பரபரப்போடும் இருப்பவர்.
ஒப்புகொண்டேன். பேசினேன். அவரிடம் வந்தேன். ” அவர் பாவம் பா..எதோ மனவேதனையோடே எப்போதும் இருக்கிறார். அதை மறைக்கத்தான் இவ்வளவு
உற்சாகமாய் இருக்கிறார் ”
என்று சொன்னேன். புன்னகைத்தார். ம்ம்..சரியாக சொல்லிவிட்டாய்..என்று தட்டிகொடுத்தார்.

உனக்கு இது நிச்சயம் கைக்கொடுக்கும் என்றார்.

இந்த “வார்த்தைகளுக்கு இடையே கவனித்தல்” மூலம்நல்லவர்களின் அருகாமை அதிகரித்தது. இந்த பயிற்சி
பேசும்போது மட்டுமல்லாமல், புத்தகங்கள் படிக்கும் போதும், செய்திகள் கேட்கும் போதும்,
கவிதைகள் கட்டுரைகள் படிக்கும் போதும்,என எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது.

அதனால் தான் எப்போதும் என்னால் கிடைத்ததை எல்லாம் படிக்க முடிவதில்லை..தேடிப்பிடித்தே படிக்க ஆசைப்படுகிறேன்..!!

இப்படியாக தினசரி வாழ்வில் நல்லோரின் இணக்கத்தையும், நல்ல விஷயங்கள் மீதான இணக்கத்தையும்
அதிகரிக்க அப்பா சொல்லிதந்த “ வார்த்தைகளினூடே கவனித்தல்” எனக்கு பயன்பட்டு வருகிறது.

நீங்களும் முயற்சி செய்யுங்கள். என் வாழ்த்துக்கள்.

Sunday, April 4, 2010

ஏன் இதயம் உடைத்தாய் ...நொறுங்கவே??

http://i.ehow.com/images/a04/gs/7k/over-broken-heart-800X800.jpg

நடந்து வந்ததோ நதியோரம்,
நனையவில்லை என் பாதம்,
நனையாதது பாதம் மட்டுமே,
என் நெஞ்சமெல்லாம் ஏனோ ஈரம்..


நிற்கவில்லை அமரவில்லை வழியில்,
என்கால்கள் துடிக்கவில்லை வலியில்,
இன்னும் எவ்வளவு தூரம்
ஏனோ மழை வந்தததென் விழியில்.


தூரத்தில் தெரிகிறது பூந்தோட்டம்,
தலையாட்டும் பூக்களின் ஆட்டம்,
இதோ கார்மேகங்களில் கூட்டம்,
ஏனோ என்நெஞ்சில் இன்னும் வாட்டம்.


வந்துவிட்டேன் பயணிகள் நிழற்கூடம்,
ஒருவருமின்று இது தனிக்கூடம்,
கண்களும் இதயமும் நனைந்து
இங்கு அமர்ந்திருக்கிறேன் இது சவக்கூடம்.


காதலிக்கிறேன் என்றாள் அன்று
மறந்துவிடு என்றாள் அன்று
அப்பா மறுப்பார் என்று
தவிக்கவிட்டு அவனோடு சென்றாள் இன்று..!!

எனக்கும் காதல் வந்தது
என்னை வாட்டிவதைத்து சென்றது,
காதல் இன்னும் வாழ்கிறது
காதலியும் வாழ்கிறாள் புதிய கணவனோடு.

******** ******** ******** ******

(பி.கு): என் நண்பன் ”டேய்..நீ சென்ஸிட்டிவ்..இந்த படம் வேணாம்..சொன்னா கேளு”ன்னு சொல்ல சொல்ல கேட்காமல் ”விண்ணை தாண்டி வருவாயா” பார்த்ததன் விளைவு.. நல்ல திரைக்கதை...நல்ல படம்..நோ மோர் கமெண்ட்ஸ்..!!

(பாதி படத்துக்கே மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது வேறு கதை..!!)

Tuesday, March 23, 2010

ஒரு சோம்பல் முறிப்பும், ஒரு ஜென் கதையும்-2

ரொம்ப்ப்ப்பபப நாள் ஆச்சுங்க பதிவு போட்டு..என்ன செய்ய வேலை பென்ட கழட்டுது.
சரி.விஷயத்துக்கு வருவோம்.
என் செல்ல அம்மா பேரில் வந்திருக்குற “அவள் பெயர் தமிழரசி” படத்தை எல்லாரும் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். படம் நல்லாவே வந்திருக்கு. எனக்கும் பிடிச்ச படம் அது.

நேற்று ஒரு ஜென் கதை ஒன்னு படிச்சேன்.அதன் ஆழமும் கருத்தும் ரொம்ப நல்லா இருந்தது.
அதை உங்களோட பகிர்ந்துக்க விரும்பறேன்.


http://webwarriortools.com/images/ebooks/email-zen.jpg


: ஒரு கோப்பை தேநீர் :
அந்த இளவரசர்கள் நாலு பேருக்கும் அந்த துறவியை சந்திக்க அவர் குடிலுக்கு வந்திருக்கிறார்கள்.
அந்த துறவி அவர்களை வரவேற்று அமர செய்தார். அவர் வந்த விஷயம் என்னவென்று கேட்டார்.
அந்த இளவரசர்கள் சொன்னார்கள் : வாழ்க்கை என்பது என்ன ? இத்தனை துன்பங்களும் வாழ்க்கையின் அங்கமாகி போனதன் சூட்சுமம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுகிறோம் ..
என்றனர்.
துறவி புன்னகை பூத்தார். சரி சற்று பொறுங்கள். டீ சாப்பிட்டுவிட்டு இதை பற்றி யோசிக்கலாம் என்று சொன்னார். இவர்களும் ஆமோதித்தனர்.

சில நிமிடங்கள் கழித்து ஒரு தட்டில் சில கோப்பைகளுடன் ஒரு கூஜாவில் டீயை ஊற்றி எடுத்து
வந்தார் துறவி. தட்டை அவர்கள் முன் வைத்தார். அவரவர்களுக்கு வேண்டிய கோப்பையை தேர்ந்தெடுத்துக்கொள்ள சொன்னார்.

அந்த தட்டில் இருந்ததோ நான்கு வகையான கோப்பைகள். ஒன்று- சுத்தமான தங்கத்தாலும்,
மற்றொன்று- சுத்தமான வெள்ளியாலும், மூன்றாவது- சுத்தமான செம்பாலும், நான்காவது- களிமண் கோப்பையாகவும் இருந்தது.

இளவரசர்கள் குழம்பினர். ஒருவரை ஒருவர் முறைக்கவே ஆரம்பித்துவிட்டனர். என்ன செய்ய..எல்லாருக்கும் தங்க கோப்பை மீதே ஆசை. இப்படியே சில நிமிடங்கள் மவுன போராட்டம் தொடர்ந்தது.
இதை பார்த்துகொண்டிருந்த துறவி சொன்னார். “இளவரசர்களே! இதோ இதுதான் வாழ்க்கை ”என்று
அந்த சூடான நறுமணம் மிக்க டீயை காட்டினார். ”நீங்கள் கோப்பைக்கு ஆசைப்பட்டு டீயை வீண்டிக்கிறீர்களே..? இது எந்த வகையில் நியாயம்? என்னதான் தங்ககோப்பையில் குடித்தாலும் இதே டீயை தான் குடிக்க போகிறீர்கள். களிமண் கோப்பையிலும் இதே டீதான் கிடைக்க போகிறது!
எனவே கோப்பை எது என்பது விஷயமல்ல..டீயை சுவைப்பதே முக்கியம்” என்றார்.
அவர்களுக்கு அப்போது தான் புரிந்தது : “பணம், அந்தஸ்து, கவுரவம் என்ற கோப்பைகள் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அனுபவித்து மகிழவேண்டியது இந்த வாழ்க்கை என்கிற டீயை தானே வேறொன்றுமில்லை..” என்பது.


Friends, இனிமேலும் டீயை வீணடிக்காதீர்கள் ஏனெனில் கோப்பை எப்போது வேண்டுமானால்
மாறலாம், ஆனால் நமக்கு எப்போதும் கிடைப்பது ஒரே ஒரு சுவையான வாழ்க்கைதான்..!!

by,
Rangan

Monday, March 1, 2010

நூறு பதிவுகளை கடந்தபின்!!

http://jamesfrankel.musiced.net/files/2007/03/number_100_1.png
எல்லாருக்கும் பழக்கமான எண், எண்ணிக்கை 100.

சரி..ஏன் நூறு?
10*10= 100
எண்களில் முதல் மூண்றெழுத்து எண் 100.
இரண்டு 2 எழுத்து எண்களின் பெருக்கல் தொகை நூறு..
இப்படி நூறு பல வகைகளில் கணிதத்தில் ஒரு முக்கியமான எண்ணாக இருக்கிறது.

கணிதத்தின் அடிப்படையில் தான் உலகமே இருக்கிறது..நம் சமூகமும்..!!

அதனால் தான் நூறு வயதை எட்டியவர்களை கண்டு வியக்கிறோம்..நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்

சச்சின் டெண்டுல்கர் நூறு ஓட்டங்கள் எடுத்தால் கைதட்டு ஆர்ப்பரிக்கிறோம்..
பரிட்சையில் நூறு மார்க்குகளை உச்ச தகுதியாக வைத்திருக்கிறோம்..!!

ஒவ்வொரு நூற்றாண்டிலும் மாபெரும் முன்னேற்றத்தை மனித இனம் எடுத்து வைக்கிறது.!!

இப்படி எல்லா வகையிலும் நம் வாழ்வில் இணைபிரியாது வரும் நூறு என் வாழ்விலும் ஒரு
முக்கிய பங்கை தந்திருக்கிறது..!!

இதோ என் நூறு பதிவுகளை முடித்து நூற்றியோராவது பதிவை வெற்றிகரமாய் பதிவு செய்திருக்கிறேன்..!!
உண்மை தான் ..பதிவுகளை பொருத்த மட்டில் எண்ணிக்கை பெரிதில்லை..விஷயமே பெரிது..!!
நானும் என்னால் முடிந்த சிறந்த பதிவுகளை தந்திருக்கிறேன் என்பதில் எந்த ஐயமும் இல்லை..!!
அதை நிரூபிக்கும் விதமாக என் பதிவுகள் பலவற்றை தன்னகத்தே ஏற்றுகொண்டு ஆதரவளித்த ஆனந்த விகடனுக்கு இங்கே நன்றி சொல்ல
கடமைப் பட்டிருக்கிறேன்..!!

நூறு பதிவுகள் எழுதியும் வலைச்சரத்தில் எழுதாத ஒரே பதிவர் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்...!!
அது என் அடுத்த நூறு பதிவுகளுக்குள் நடந்துவிடும் என்று நம்புகிறேன்..!!


இத்தனைக்கும் காரணமாய், ஆதரவாய், அன்பாய் நட்பாய் அமைந்த என் மாமன் நாமக்கல் சிபிக்கும் மற்ற உலக தமிழ் பதிவர்கள்
அத்தனை பேருக்கும் என் நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்து கொண்டு..
இன்னும் நல்ல பல பதிவுகள் தருவேன் என்ற உறுதியும் அளிக்கிறேன்..!!

நன்றி நண்பர்களே !! ..என்னை கைப்பிடித்து , அரவணைத்து , ஆசுவாசப்படுத்தி , ஆறுதல்தந்து , அன்பை சுரந்தமைக்காக..!!

பி.கு :

நூறு பதிவுகளை கடந்த பின் நான் ஒரு பதிவராக கண்டுகொண்டது ஒரே விஷயம் தான்.
” பரிந்துரைக்கபடவேண்டும் என்றோ,ஹிட்டுக்காகவோ, எண்ணிக்கைக்காவோ, விகடனில் வெளியாகும் என்றோ என்றைக்கும் எழுதாதே..!!
உனக்கு ஒரு பதிவு எழுதி முடித்ததும் ஒரு மனமகிழ்ச்சி உண்டாகிறதா பார்..அதையே பதிவும் இடு..அது தான் நீ...அதை படிக்க தான் இந்த உலகம் காத்துகிடக்கிறது..மற்றவையில் எதுவும் இல்லை!!

என்றென்றும் புன்னகை!!

http://www.granitestatechild.com/images/smiling-girl.jpg

இன்று காலை ஏ.டி.எம் போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன்..
அப்போது ஒரு பூக்காரர் திடீரென்று கையில் பூவோடு ஓடி வர..
வேகம் குறைத்து அவரை கவனித்தேன்..

ஒரு இளம்பெண் பச்சை சுடிதாரில் தோள்களில் கைப்பையோடு, இடது கையில் செல்லுடன்
நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அந்த பூக்காரர் அந்த பெண்ணிடம் பூவை கொடுத்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்.
நான் அந்த பூவையும், பெண்ணையும், அந்த கண்களையும் ஒரு கணம் ரசிக்கத்தான் செய்தேன்.
ஜீவ்ஸின் கேமரா என்னிடம் இருந்திருந்தால் க்ளிக்கி இருப்பேன். அடுத்த கணம் அவரை பார்த்து
புன்னகைக்க அவரும் புன்னகைத்தார். இது அன்பா, ரசனையா, மகிழ்ச்சியா?

பெண்ணே அழகுதான்..பூ அழகுதான்.
பெண்கள் தலையில் பூச்சுடுவது அழகுதான்.., ஆனால் இன்று ஒரு மாறுதலாய் ஒரு பெண் கையில் புத்தம்புது
பூவோடு நடந்து செல்வதை பார்த்ததும் நின்று ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ரசித்தேன், புன்னகைத்தேன்,
நன்றிகளை பெற்றுகொண்டேன்..!!

அதன் தொடர்ச்சியாக என் அம்மாவை பள்ளியில் ட்ராப் பண்ணிவிட்டு வண்டியை திருப்பும் சமயம் ஒரு குட்டி பெண்
சரியாக முன் டயரை கடக்க உடனே ப்ரேக் அடித்து நிறுத்தினேன். அந்த குட்டிப்பெண் என்னை பயத்தோடு பார்த்தாள்.
அந்த கண்களின் அழகை கண்டதும் மீண்டு(ம்) வந்தது புன்னகை. என் புன்னகையை பார்த்து அவளுக்கும் நம்பிக்கை வர,
அவளும் புன்னகைக்க.. கொல்லிமலை அருவியில் கண்மூடி குளிக்கும்போது ஒரு உணர்வு உள்ளத்தில் பரவுமே..
அதே உணர்வு என்னுள் பரவி விரவி நின்றது.

அதன் பிறகு எப்போது வீடு வந்தேன்..எப்போது இந்த பதிவை எழுதினேன் என்று தெரியவில்லை..
என்னை அறியாமலே என் புன்னகையும் மகிழ்ச்சியும் பிறரை ஆக்ரமித்து நிற்கும் அதிசயத்தை பார்த்து
நித்தமும் வியந்துகொண்டிருக்கிறேன்..!!

”One Pure Smile , a spiritual touch between two good hearts" - Buddha.

Saturday, February 20, 2010

புயல்களுடன் ஒரு வாழ்க்கை!!

ஒரு நாளுக்குள் எத்தனை பிரச்சனைகள்..எத்தனை புயல்கள்..
இவைகளில் இருந்து விடுபடவே முடியாதா?


http://www.freewebs.com/hoseo_environmental_club/Cyclones.jpg

இந்த கேள்விதான் நம் மாபெரும் வாழ்க்கையின் அடிப்படை கேள்வியாக இருக்கிறது.
முதலில் நாம் அதை உணர முயல்வோம்..பிறகு அதை குறை கூறலாம். கடலில் அலைகள்
வந்தும் போயும் இருப்பது போல, பிரச்சனை புயல்களும் உங்கள் வாழ்வில் வந்தும் போயுமே இருக்கிறது.
எந்த ஒரு புயலும் அதே இடத்தில் தங்குவதில்லை..ஒன்று மறைந்தும் அடுத்து வந்துகொண்டுமே இருக்கின்றன.

ஒரு புயல் ஓய்ந்த பின் நீங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறீர்கள், சந்தோஷத்தில் திளைக்கிறீர்கள்..ஆனந்தமாய் உணர்கிறீர்கள்..
அந்த கணங்களில் உங்களுக்குள் இருக்கும் பயம், தயக்கம், நடுக்கம் எல்லாம் மறந்து, மறைந்து போகிறது.
அன்பு ஊற்றெடுக்கிறது.

எப்போது நீங்கள் புயல்களை திறந்த மனதோடு வரவேற்கிறீர்களோ அப்போதே அவைகள் சக்தி இழந்துவிடுகின்றன.
அப்படி திறந்த மனதோடு இருக்க நீங்கள் முதலில் சில தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது..
அற்ப ஆசைகள், அலையும் மனது, குற்ற உணர்ச்சிகள் என பலவகையான உணர்ச்சிகளை நீங்கள் தடுத்து ஆராய்வது அவசியம்.
அப்படி ஆராயும் போதுதான்..”இந்த கயிறுகளையா பாம்பென்று பயந்தேன் !!” ..என்று நீங்கள் தெளிவடைவீர்கள்..
அப்போது அறிவு பிறக்கும்..தெளிவு உண்டாகிடும்.

எல்லா ஞானிகளுமே ஒரு வகையில் இதைத்தான் செய்தார்கள்..தன்னுடைய குழப்பங்களை, அற்ப ஆசைகளை, குற்ற உணர்ச்சிகளை
பிரித்து பிரித்து வகுத்து பார்த்தார்கள்..அப்படி பிரித்து பார்த்து பெற்றதை ஞானம் என்றார்கள்.அதை நமக்கும் சொன்னார்கள்.

எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்..அலைகள் இல்லாத கடல் எப்படி சாத்தியமில்லையோ அதே போல் பிரச்சனைபுயல்கள் இல்லாத
வாழ்க்கையும் சாத்தியமில்லை...ஞானிகளுக்கும் மிகப்பெரும் மனிதர்களுக்கும் கூட பிரச்சனைகள் இருந்தன..இருக்கும், அது தான் இயற்கை.

எப்போதும் புயல்களை ஒழிக்கவோ, அதில் இருந்து தப்பிக்கவோ முயற்சிக்க தேவையில்லை. அதனோடு இருங்கள். அவைகளோடு ஒரு கப் தேனீர் கூட அருந்துங்கள்.
உங்கள் மடியில் வைத்துகொள்ளுங்கள். பிரச்சனைகள் வெளியே இல்லை உங்களுக்குள் தான் என்பது அப்போது புரியும். நீங்கள் தான் இப்போது உலகத்தின் மையம்.
அதாவது உங்கள் பிரச்சனைக்குரிய உலகத்திற்கு.

நீங்கள் எங்கே சென்றாலும் உடன் ஒருவரை ரகசியமாய் அழைத்தே போகிறீர்கள்..அது தான் உங்கள் மனம். அது எப்போதும் பிரச்சனைகளை சுமந்தபடி உங்களோடே வருகிறது.
அதை விட்டு நீங்கள் தப்பிக்க முடியாது..ஆனால் அது சுமக்கும் பிரச்சனை என்கிற பாரத்தை குறைக்கலாம்.

அப்படி பாரமில்லாத மனதோடு எங்கு சென்றாலும் உங்களுக்கு ஒரு பிரபஞ்ச ரகசியம் விளங்கும் : “புயல்கள் எப்போதும் இருக்கின்றன..நம்மை உயர்த்துவதற்காக”

Tuesday, February 9, 2010

அவளுக்கான என் காதல் கவிதைகள்


நன்றிகள் சில..
நெஞ்சுக்குள் பல...
சொல்லுக்குள் சேராத வார்த்தைகள் அழ..
நீ சொல்லில் சொல்லி சென்றாய்...
நான் தேடி நின்றேன்..
நாம் காதலை
காணாத கண்ணீர் கண்களோடு...!!

** ** ** **
தேடியதில்சேர்த்த கடைசி பொக்கிஷம் நீ..
கடத்தி போகவில்லை..களவாடி போகவில்லை..
பறித்து செல்லவில்லை..
பதறி தொலைக்கவில்லை..
தானே கரைந்தது காற்றில்..
என் நெஞ்சம் மீண்டும்
தேட தொடங்கியது..
வாழ்க்கை இவ்வளவுதான்..
வாழ்வதும் எவ்வளவுதான்..
தேடி பார்க்க துணிந்த நெஞ்சுக்கு..
தேரும் சிரு துரும்பு..
எரும்பும் பெரும்தேராம்..!!

** ** ** **
சிரிக்காத கணங்களிலும் உனக்கான என் உதட்டோர புன்னகை..
அழாத நேரங்களிலும் நீ இல்லாத துக்கத்தில் கண்களில் கண்ணீர்..

சிரிக்கும் நேரத்திலும் நீ என்னிடம் சொல்லாத பொய்களுக்காக பொய் கோபம்...
எங்கு முடியும் என்று எவருக்கும் தெரியாத இந்த காதற் பயணத்தில்..

நீ இறங்கிவிட்டாய்..உன் ஊரை பார்க்க..
நான் எங்குசெல்வேன்..
உன் பேரே என் ஊராய் ஆன போது..???

** ** ** **

தமிழரசிக்காக கிறுக்கிய கவிதைகள் இவை..!! :)

Friday, February 5, 2010

திமிங்கலத்தை தின்பது எப்படி?-2



கடந்த பதிவில் Procrastination பற்றி பார்த்தோம்..

இப்போது நீங்கள் திமிங்கலத்தை தின்ன தயாரியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் மலைத்து போகும் அந்த மிகப்பெரிய வேலையை திமிங்கலத்தை தின்ன வரிசையான செய்முறை விளக்கம்
இதோ..


1.நம் வாய் எவ்வளவு கிராம் கொள்ளளவு கொண்டது என்பதை கணக்கெடுத்து கொள்ளுங்கள்.(VOLUME)
(முப்பது கிராம் அளவு என்கிறது அறிவியல்)

2. பின்பு திமிங்கலத்தை துண்டுதுண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.(PARTITIONING)

3. வெட்டிய துண்டுகளை மீண்டும் 30 கிராம் அளவுகொண்ட துண்டுகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.(CONTENT BASED PARTITIONS)

4. வெட்டிய துண்டுகளை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்துவிடுங்கள்.(PRESERVATION)

5. ஒவ்வொரு துண்டுகளாக போகவர எடுத்து சாப்பிட்டுகொண்டே வரவேண்டும்.(CONTINOUS PROCESS)

6. விடாது , தொடர்ந்து இதையே செய்து வரவேண்டும்.(MAINTANANCE OF CONTINUUM)



ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்..திமிங்கலத்தை முழுவதுமாய் சாப்பிட்டு முடித்திருப்போம்.

சரி இதன் சூட்சமம் என்ன..இதை நம் வாழ்க்கை முறையில் , நேர மேலாண்மையில் பயில்வது எப்படி?

திமிங்கலத்தை போய் யார் சாப்பிடுவார்கள் அதுவும் பச்சையாக? என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
பெரிய விஷயத்தை எப்படி சிறு பகுதிகளாக்கி முடிப்பதற்கான உதாரணம்தான் இது என்று சரியாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.


நீங்கள் புதிதாக ஒரு மொழியை கற்க விரும்புகிறீர்கள்..என்றால் எடுத்த எடுப்பில் அதன் இலக்கிய நூல்களை புரட்டினால் என்ன ஆகும்?

எதுவும் புரியாது. என்னடா இது மொழி பிரச்சனை என்று மலைத்து போவீர்கள்.

அதே அந்த மொழி சம்பந்தமான ஒரு அகராதி(டிக்‌ஷனரி)யை வாங்கி அதன் வார்த்தைகளையும் அர்த்தங்களையும் புரிந்துகொண்டு..

தினமும் பத்து அல்லது பதினைந்து வார்த்தைகளை விடாமல் படித்து வந்தால்..ஒரு நாள் நீங்களும் அந்த மொழியில் புலமை பெற்றவர் ஆவீர்கள்.!!

முடிக்கலாம், முடிக்க முயற்சி செய்வோம் என்கிற எண்ணங்களுக்கும் இந்த விஷயத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.

முடிக்கலாம் என்று சொல்லும்போதும், முடிக்க முயற்சி செய்யலாம் என்று சொல்கிற போதும், ஒரு மலைப்பும் களைப்பும் வருகிறது..

ஆனால் இந்த முறையில் அப்படி பட்ட களைப்பே வர வாய்ப்பு இல்லை..காரணம்.

1. எந்தப் பெரிய வேலையையும், சிறிய பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுதல்.

2. பிரித்துக்கொண்ட சிறிய பகுதியை, தினம் தினம் விடாது முடித்துவிடுதல்.

3. மொத்த விஷயமும் முடியும்வரை கவனம், ஆர்வம் பிசகாமல் தொடர்ந்து செய்தல்.

இதன் பெரிய பலன், தங்கு தடையின்றி வேலை நடைபெறும். மலைப்பு விலகும். தினசரி வாழ்க்கையின் சுவாரசியம் கூடும்..வெற்றி நம் முன்னே விரியும்.

Tuesday, February 2, 2010

திமிங்கலத்தை தின்பது எப்படி?-1

http://www.edupics.com/en-coloring-pictures-pages-photo-man-and-whale-p9852.jpg
என் நண்பர் ஒருவர்..வெகு நாட்களுக்கு முன்..

நான் ஒரு நாவல் எழுதப் போகிறேன்..அது மிகவும் புதுமையானதாகவும்,
பலரால் பாராட்ட கூடியதாகவும் இருக்கும் என்று அடிக்கடி (கடந்த 2 வருடங்களாக) என்னிடம்
சொல்லி வந்தார்..வருகிறார் :).

ஆனால் கொடுமை என்னவென்றால் அவர் இன்னும் அந்த நாவலை துவங்க பிள்ளையார் சுழி கூட
போடவில்லை..!!

காரணம்..அது பெரிய வேலை..அதற்கு நல்ல மனநிலையும், அதிக ஆர்வமும், அதிக நேரமும் பிடிக்கும்.
அவரால் சின்ன சின்ன விஷயங்களில் காட்ட முடிகிற ஆர்வத்தை அதில் காட்ட முடிவதில்லை..

இப்போது அவரை குறை சொல்ல வரவில்லை..அவரை போலத்தான் நாமும்..
சில வேலைகள் நம்மை மலைக்க வைக்கிறது..
இது நம்மால் ஆகுமா? என்று நம் தன்னம்பிக்கையை சந்தேகப்பட வைக்கிறது..

அப்படியே தள்ளிவைத்து விட்டு வேறு சிறு வேலைகளில் மூழ்கி விடுகிறோம்..
பிறகு ஒரு நாள் அதே வேலை..பல சிக்கல்களையும் கூட்டிகொண்டு நம்மிடம் வந்து
நிற்கும் போது மீண்டும் மலைத்துபோகிறோம்..

ஏன்.. என்ன காரணம்..ஏன் இந்த மலைப்பு..??


திருமண பந்திகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்..சிலர்.. பிடித்த பதார்த்தங்களை
ஆவலுடன் பார்த்தபடி மற்ற பதார்த்தங்களை சாப்பிட்டுவிடுவார்கள்.
பின்பு கடைசியாக தான் அவர்கள் அந்த பதார்த்தங்களை ருசித்து ருசித்து
சாப்பிடுவார்கள்..இது ஒரு வகையான மனப்பான்மை..


சிலர் சுலபான வேலைகளை எல்லாம் உடனே முடித்துவிடுவார்கள்.
ஆனால் பெரிய வேலைகளை, அதாவது அதிக நேரமும், கூடுதல் உழைப்பும்
தேவைப்படுகிற வேலைகளை ஆரம்பிக்கவே மாட்டார்கள். தள்ளி போட்டுகொண்டே
வருவார்கள்..

இந்த வகையான மனநிலைக்கு பெயர் Procrastination. இது ஆபத்தானது.

சரி..இதற்கும் திமிங்கலத்தை தின்பதற்கும் என்ன சம்பந்தம்..ஒரு வேளை அதை தின்றால்
Procrastination சரியாகிவிடுமா?

ம்ம்..ஆகலாம்..!! 98 % வாய்ப்பிருக்கிறது..!!

என்னது?!!!!....சரி நான் திமிங்கலத்துக்கு எங்கே போவேன்?

எங்கேயும் போக வேண்டாம்..நீங்கள் தள்ளி போடும் அந்த பெரிய வேலை தான் அந்த திமிங்கலம்.

அதை எளிமையாக முழுமையாக தின்ன நான் உங்களுக்கு சொல்லித்தர போகிறேன்.

தொடர்ச்சி வரும் வெள்ளியன்று..!!

Monday, January 25, 2010

சிகப்பாய் சில பூக்கள்!!


முதல் புன்னகை,
சின்ன அறிமுகம்,
நயமான பேச்சுக்கள்,
பூத்தன அவர்களிடையே
கண்ணியமாய் வெள்ளை பூக்கள்..;

தொடும் தூரத்தில் விரல்கள்,
தொட அஞ்சும் நெஞ்சம்,
கண் பார்த்த பேச்சு,
பூத்தன அவர்களிடையே
நட்பாய் மஞ்சள் பூக்கள்..;

பார்த்த கணம் புன்னகை,
பேச்சில் தொடும் அக்கறை,
பிரியும் போது மென்வருத்தம்,
பூத்தன அவர்களிடையே,
பாசமாய் நீலப் பூக்கள்..;

மறந்து விட்ட கர்ச்சீப்,
ரசித்து பார்த்த புத்தர் சிலை,
சருகான மல்லிப்பூ,
பூத்தன அவர்களிடையே,
நேசமாய் ஊதா பூக்கள்..;


மன்னித்துவிடு
நான் உன்னோடு அப்படி
பழகவில்லை;
இனிமே நான் சந்திக்க வேண்டாம்..

சில கணங்களில்
செத்து போயின
சிகப்பாய் சில பூக்கள்..!!

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன் - திரை விமர்சனம்

எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படம் இதுதான்.


http://4.bp.blogspot.com/_03G3R_dD0Cc/SzSjk1GO3VI/AAAAAAAAAgI/pcu83jxQsGE/s320/2.jpg

1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம். பி.ஆர். பந்துலு சிவாஜியுடன் முறைத்துக்கொண்டு எம்ஜிஆர் பக்கம் வந்து எடுத்த முதல் படம். அவரேதான் இயக்கம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.

கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.



எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதேங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்கவரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக்கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோதரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.

அவரல்லவோ சூப்பர்மான்? இப்போதைய நடிகர்கள் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.

அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீ ராகத்தான் செலவழித்திருக்கிறார்.

எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.

நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.

ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!

கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை”, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்”, “ஆடாமல் ஆடுகிறேன்”, “ஏன் என்ற கேள்வி”, “ஓடும் மேகங்களே”, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.

எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.

எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.

ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.

ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.

ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்ட படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று. இந்த படம் தான் அவரை கோடி மக்களின் தலைவனாக உருவாக்கியது.

நான் ஒரு வைத்தியன் ... இந்த சமுதாயத்திற்கு வைத்தியம் பார்ப்பது மட்டும் தான் என் தொழில்.

தோல்வியை எதிரணிக்கு பரிசளித்வன் நான் இது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படம் வெளியாகும் போது எம்.ஜி. ஆர் ரசிகர்கள் எப்படி இருந்தார்களோ... அதே நிலை தான் இப்போதும் பார்க்க முடிகிறது.

Tuesday, January 5, 2010

”சாலை பாதுகாப்பு வார”த்தை முன்னிட்டு ஒரு சிறுகதை..

http://www.irintech.com/x1/images/jean/hell_met_helmet.jpg
-”டேய்.. சொன்னா கேளுடா.. ஏண்டா இப்படி பண்ற.”

-”மா. சும்மா இரும்மா..பேசும்போது நொய் நொய்னு. பேசிட்டு இருக்கோம்ல.”

-”டேய்.. மனோ. வேண்டாம்.. இப்போ நிறுத்த போறியா இல்லியா?”

- “.. ம்ம்..ஆமாடா.. அம்மாதான்... சும்மா அட்வைஸ் பண்ணிகிட்டு.. டென்ஷன் ஆகுதுடா.”

- “..என்னவொ போடா..நீ சொன்னா கேக்க மாட்டா.. அப்படியே அப்பன் புத்தி..ம்ஹீம்.”

-“ஹேய்..ஒண்ணு குடேன்.. ப்ளீஸ்டா.. என் செல்லம்ல..”

- “இப்படியே எத்தனை நாளைக்கு கொஞ்சிட்டு இருக்க போற?
ஒழுங்கா கலியாணம் பண்ணிக்கிற வழிய பாரு.. மனோ.”

- “ஹேய்.. அம்மா கட்டிக்க சொல்றாங்கடா . கட்டிக்கவா?
தோடா..வெக்கமா.. ம்ம்... அப்புறம்..”

...கீங்..கீங்..கீங்...

அம்மா, “என்னடா போன் கட்டா?”

மனோ, “ஆமாம்மா..பேலன்ஸ் காலி.”

செல்போனை பார்த்தபடி மனோ பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருக..

..சில பல.. பலமான சத்தங்களுக்கு பின்.

.
.
.

”அம்மா.. என்ன மன்னிச்சுடு.. நீ சொன்னது சரிதான்.. வண்டி ஓட்டும் போது போன் பேசி இருக்க கூடாது.”

தன் பிணத்தின் முன்னால் கதறும் தாயின் பின்னால் நின்றபடி மனோ சொல்லிகொண்டான்.


(பி.கு)..

”சாலை பாதுகாப்பு வார” த்தை முன்னிட்டு இந்த சிறுகதை..!!


டிஸ்கி :

"வண்டியில் செல்லும்போது செல்லை தொடாதீர்கள்.
அழைப்பது எமனாகவும் இருக்கலாம்."