Friday, December 16, 2011

சுய முன்னேற்ற குப்பைகள்..


த்தனையோ வருடங்களாக நானும் சுயமுன்னேற்ற நூல்களை படித்தவன் தான். ஆனால்..இதற்கு மேலும் என்னால் இந்த குப்பைகளை
சகித்துகொள்ள முடியாது.

காரணம். சுய முன்னேற்றம் என்பதே ஒரு தவறான வார்த்தை. நாம் நம்மை மதிக்காததால் வெளியான வார்த்தை. நாம் நம்மை இன்னும் முழுதாய்
தெரிந்துகொள்ளாததால் வெளியான வார்த்தை இது. இந்த வார்த்தையின் நிஜமான சமுதாய அர்த்தம் : "பிறரோடு ஒப்பிட்டு பார்த்து வருத்தப்படு" என்பதே.

இதற்கு மேலும் பொருத்துக்கொள்ள முடியாது. நீங்கள் இனியும் இந்த சுயமுன்னேற்ற குப்பைகளில் சிக்கி சின்னாபின்ன படாதீர்கள். அது நரகம்... வெளியே வரவே முடியாத நரகம்.
எப்போது நீங்கள் ஒப்பிட ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் உங்களை அவமானப்படுத்திகொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் தாழ்வு மனப்பான்மையை நீங்கள் ஒப்புகொண்டுவிட்டீர்கள்
என்றே அர்த்தம். என்னுடைய தாழ்வு மனப்பான்மை சம்பந்தமான பதிவுகளின் அடிப்படை சாரமே.. தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு மாயை. அது
பிறரால் உங்களுக்கு உருவாக்கப்பட்டதே ஒழிய..நீங்கள் உங்களையே வெறுப்பது முடியாத காரியம். ஆனால் நாம் எப்படியோ அதனோடு ஒத்துபோய்விட்டோம். ஒரு தேவையே இல்லாத மனநிலையோடு
நாம் ஒத்துப்போய்விட்டோம். அதனால் நாம் இழந்தது,

நிதானத்தை,
எப்படி இழந்தீர்கள்? ஓடும் கூட்டத்தோடு ஓடவே உங்களுக்கு நேரம் சரியாக இருந்தது. ஓட ஓட தூரம் குறையவில்லை. ஆனால் வேகமெடுக்கவேண்டுமென்ற வெறியில் எத்தனையோ மனிதர்களின் கழுத்தில் மிதித்தீர்கள்..
அவர்களின் வேதனையிலும், கண்ணீரிலும் உங்கள் மாளிகைகள் வளர்ந்தன. நிதானித்திருந்தால்..நாம் மதிக்கவேண்டியது பணத்தை அல்ல, நல்ல மனிதர்களை என்று புரிந்திருக்கும்.

தெளிவை,
நம்முடைய குறிக்கோள்கள் எல்லாமே நம்மை நாமே மயக்கிகொள்ள பயன்படுத்தும் போதைவஸ்துக்கள் தான். அப்போதுதான் நாமும் செயல்பட்டுகொண்டே இருக்கிறோம் என்று நமக்கு ஒரு திருப்தி இருக்கும்.
இந்த விஷயத்தை எங்காவது பார்த்திருப்பீர்கள். அதாவது ஒரு வட்ட ஏணியில் ஒரு எலியை ஓடவிடுவார்கள்..அதன் முன்னால் இருக்கும் வெண்ணெய்கட்டிக்காக அது அப்படி ஓடும்..தன் முழு சக்தியையும் செலுத்தும்.
ஆனால் இறுதிவரை அதற்கு அது கிடைக்கப்போவதில்லை. அது வெறும் மாயை என்பது அதற்கு புரியப்போவதில்லை. நாமும் இப்படித்தான் சிக்கிகொண்டோம். நம் குறிக்கோள்கள் அத்தனையுமே அந்த மாய வெண்ணெய்கட்டிப்போல்..
ஒரு சிலரின் சுயநலத்திற்காக நீங்கள் அந்த எலிகளாய், வட்ட ஏணிகளுக்குள் ஓடி ஓடி உயிர்விடுவீர்கள். இது தேவையா? ஏணியை உடைத்துவிட்டு எழுந்துவாருங்கள்.

அமைதியை,
உலகத்திலேயே அமைதியான மனிதன் யார் தெரியுமா? தன்னை தானே எவன் எந்தவகையிலும் சித்திரவதை செய்துகொள்ளாது ஒருவன் இருந்தால், அவன் தான் இந்த உலகில் அமைதியான மனிதன்.
உங்களால், சொல்லமுடியுமா? நீங்கள் அமைதியான மனிதரென்று?

தன்னைத்தானே பார்த்து அறிந்துகொள்ளும் தன்மையை,
ஊரிலிருக்கும் சுயமுன்னேற்ற சொக்கர்களின் பேச்சில் மயங்கியே வாழ்வை ஓட்டிகொண்டிருந்தால், நீங்கள் எப்போது உங்களின் பேச்சை கேட்பது?

சுயமதிப்பை,
இரண்டாவது பேராவின் முதல் வரியை படியுங்களேன். ம்ம்.. இப்போது நம்மை நாம் மதித்திருந்தால், நம் திறமைகளை, நம் கற்பனைத்திறனை, நம் சக்தியை நாம் மதித்திருந்தால்,நாம் இப்படி அடுத்தவனின் கைப்பாவையாக ஆடவேண்டிய
சூழ்நிலை உருவாகி இருக்காது. இனியேனும் உங்களை நீங்கள் மதிக்க பழகுங்கள்.

அன்பை,
அன்புதான் நீங்கள்..நீங்கள் தான் அன்பு. அது தனியே வெளியிருந்து வருவது இல்லை. நீங்கள் முதலில் உங்களிடம், முதலில் உங்கள் உடலிடம் அன்பாய் இருங்கள்.. பிறகு உங்கள் உணர்வுகளுக்கு அன்பாய் இருங்கள். பிறகு பாருங்கள்..உங்களிடம் பொங்கும் அன்பை
அள்ளிப்பருக ஆயிரம் பேர் கூடிவிடுவர்..!!

மகிழ்ச்சியை,
அன்பென்று ஒன்று வந்துவிட்டால், மகிழ்ச்சி என்பதும் வந்தே தீரும். அது அன்பின் அடுத்த நிலை.

நட்புணர்வை,
மகிழ்ச்சியின் வழியில் பகிர்தல் துவங்கும். நீங்கள் மகிழ்ச்சியை, அன்பை, எதாவது ஒருவகையில் சகமனிதருக்கு கொடுக்கும்போது நட்புணர்வே அதன் முதல் சாத்தியம். பிறகென்ன..தினம் தினம்..நண்பர்கள்..
அமைதியான, தெளிவானதொரு வாழ்க்கை.

Tuesday, December 6, 2011

தியானமும் நானும்-2





தியானத்திற்கு எப்போதும் ஒரு அரிய சக்தி உண்டு. நாம் நிதானம் தவறாது காப்பதே அதன் சக்தி. என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் நம்மை அறிந்தபடியால், அமைதியாய், தெளிவாய், நிதானித்து
வாழ்க்கையை பார்க்கும் ஒரு மனிதனாய் தியானம் நம்மை மாற்றியமைத்துவிடுகிறது. என் வாழ்க்கையையே எடுத்துகொள்ளுங்கள்..எத்தனை கோடி முறை தற்கொலை எண்ணங்கள் வந்துபோயின,
எத்தனை முறை என் வீட்டை, மக்களை, உலகை வெறுத்திருக்கிறேன்..இப்போது அதை எல்லாம் நினைத்துபார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. இன்னும் கூட சில நேரங்களில் என் அகந்தை மேலெழும்
நேரம்..அதை உடனே தள்ளிநின்று பார்த்து சிரித்துவிடும் தெளிவு எனக்குள் வந்திருக்கிறது.. உடனே நான் எதோ பெரிதாய் கண்டுவிட்டேன்..ஆச்சா போச்சா என்று அகந்தையுரை எழுத வரவில்லை.

ஒரு அற்ப ஜீவராசி என்னாலேயே இவ்வளவு தெளிவாய், பொருமையாய், அழகாய் வாழ்க்கையை அப்படியே ஏற்றுகொண்டு வாழமுடிகிறதென்றால், உங்களால், உங்களுக்காகவும், உங்களை சார்ந்திருப்பவர்களுக்காகவும்
உழைக்கும் மக்களாகிய உங்களால் எவ்வளவோ தெளிவாய் வாழ முடியும். அப்படி வாழும்போது வாழ்க்கை ரம்மியமாய், அழகாய், ஒரு கலைநயமிக்கதாய் இருக்குமே.. ஒரு ஆடலோடும், பாடலோடும்
ஒரு துள்ளலோடும், ஒரு குதுகலத்தோடும் ஏன் வாழ்க்கையை வாழக்கூடாது?

தம்பி..எல்லாம் சரிதான்..இந்த துள்ளலும், குதூகலம், ஆடல், பாடல் எல்லாம் எப்படிப்பா இந்த அவசர உலகில் சாத்தியம்?

சாத்தியம், ஒரே ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொண்டால்...

அது என்ன?

 உலகம் அவசரமாய் இல்லை..மனிதர்கள் நமக்குத்தான் அவசரம். உலகம் அவசரமானது என்பது பச்சைப்பொய்..அப்படி இருந்தால்,
இந்நேரம் மனித இனமே இல்லாமல் போய், அடுத்த கட்ட evolution துவங்கி இருக்கும்.... இந்த பூமி சூரியனை சுற்றுகிறதே..அவசரமாகவா சுற்றுகிறது? இல்லை..ஒருமுறை தன்னைத்தானே சுற்றிவர
24 மணிநேரங்கள் எடுத்துகொள்கிறது. இதனால் பூமி சோம்பேறி என்று அர்த்தமல்ல. அதற்குள் ஒரு நிதானமிருக்கிறது. அது அதனளவில் தெளிவாய்தான் இருக்கிறது. பூமியும் நமது கார்ப்பரேட் கந்தசாமிகள் போல்
இன்னும் வேகமாய், இன்னும் வேகமாய் என்று சுழல ஆரம்பித்தால் நம் கதி அதோகதிதான். பாருங்கள், அது சூரியனை சுற்றிவர ஒரு வருட காலம் தேவைப்படுகிறது. இப்படி பூமிக்கு இருக்கும் நிதானமும்
தெளிவும், உங்கள் வழியில் சொல்வதானால், உங்கள் உலகத்திற்கு இருக்கும் தெளிவும், நிதானமும், அதன் பிள்ளைகளான நமக்கு இல்லையே..?!

ஏன் இந்த பைத்தியம்பிடித்தது போன்ற ஓட்டம்? அவசரமே படாத பூமியில், அவசர அவசரமாய் வாழ்ந்து அவசரமாய் செத்துப்போகும் அவலம் ஏன்?  கொஞ்சம் யோசித்தால், இதற்கு நீங்கள் தான் முழுப்பொறுப்பு
என்று புரியும்.. ஆனால் எப்படி?

அடுத்த பதிவில் சிந்திப்போம்..!!