Friday, December 16, 2011

சுய முன்னேற்ற குப்பைகள்..


த்தனையோ வருடங்களாக நானும் சுயமுன்னேற்ற நூல்களை படித்தவன் தான். ஆனால்..இதற்கு மேலும் என்னால் இந்த குப்பைகளை
சகித்துகொள்ள முடியாது.

காரணம். சுய முன்னேற்றம் என்பதே ஒரு தவறான வார்த்தை. நாம் நம்மை மதிக்காததால் வெளியான வார்த்தை. நாம் நம்மை இன்னும் முழுதாய்
தெரிந்துகொள்ளாததால் வெளியான வார்த்தை இது. இந்த வார்த்தையின் நிஜமான சமுதாய அர்த்தம் : "பிறரோடு ஒப்பிட்டு பார்த்து வருத்தப்படு" என்பதே.

இதற்கு மேலும் பொருத்துக்கொள்ள முடியாது. நீங்கள் இனியும் இந்த சுயமுன்னேற்ற குப்பைகளில் சிக்கி சின்னாபின்ன படாதீர்கள். அது நரகம்... வெளியே வரவே முடியாத நரகம்.
எப்போது நீங்கள் ஒப்பிட ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் உங்களை அவமானப்படுத்திகொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் தாழ்வு மனப்பான்மையை நீங்கள் ஒப்புகொண்டுவிட்டீர்கள்
என்றே அர்த்தம். என்னுடைய தாழ்வு மனப்பான்மை சம்பந்தமான பதிவுகளின் அடிப்படை சாரமே.. தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு மாயை. அது
பிறரால் உங்களுக்கு உருவாக்கப்பட்டதே ஒழிய..நீங்கள் உங்களையே வெறுப்பது முடியாத காரியம். ஆனால் நாம் எப்படியோ அதனோடு ஒத்துபோய்விட்டோம். ஒரு தேவையே இல்லாத மனநிலையோடு
நாம் ஒத்துப்போய்விட்டோம். அதனால் நாம் இழந்தது,

நிதானத்தை,
எப்படி இழந்தீர்கள்? ஓடும் கூட்டத்தோடு ஓடவே உங்களுக்கு நேரம் சரியாக இருந்தது. ஓட ஓட தூரம் குறையவில்லை. ஆனால் வேகமெடுக்கவேண்டுமென்ற வெறியில் எத்தனையோ மனிதர்களின் கழுத்தில் மிதித்தீர்கள்..
அவர்களின் வேதனையிலும், கண்ணீரிலும் உங்கள் மாளிகைகள் வளர்ந்தன. நிதானித்திருந்தால்..நாம் மதிக்கவேண்டியது பணத்தை அல்ல, நல்ல மனிதர்களை என்று புரிந்திருக்கும்.

தெளிவை,
நம்முடைய குறிக்கோள்கள் எல்லாமே நம்மை நாமே மயக்கிகொள்ள பயன்படுத்தும் போதைவஸ்துக்கள் தான். அப்போதுதான் நாமும் செயல்பட்டுகொண்டே இருக்கிறோம் என்று நமக்கு ஒரு திருப்தி இருக்கும்.
இந்த விஷயத்தை எங்காவது பார்த்திருப்பீர்கள். அதாவது ஒரு வட்ட ஏணியில் ஒரு எலியை ஓடவிடுவார்கள்..அதன் முன்னால் இருக்கும் வெண்ணெய்கட்டிக்காக அது அப்படி ஓடும்..தன் முழு சக்தியையும் செலுத்தும்.
ஆனால் இறுதிவரை அதற்கு அது கிடைக்கப்போவதில்லை. அது வெறும் மாயை என்பது அதற்கு புரியப்போவதில்லை. நாமும் இப்படித்தான் சிக்கிகொண்டோம். நம் குறிக்கோள்கள் அத்தனையுமே அந்த மாய வெண்ணெய்கட்டிப்போல்..
ஒரு சிலரின் சுயநலத்திற்காக நீங்கள் அந்த எலிகளாய், வட்ட ஏணிகளுக்குள் ஓடி ஓடி உயிர்விடுவீர்கள். இது தேவையா? ஏணியை உடைத்துவிட்டு எழுந்துவாருங்கள்.

அமைதியை,
உலகத்திலேயே அமைதியான மனிதன் யார் தெரியுமா? தன்னை தானே எவன் எந்தவகையிலும் சித்திரவதை செய்துகொள்ளாது ஒருவன் இருந்தால், அவன் தான் இந்த உலகில் அமைதியான மனிதன்.
உங்களால், சொல்லமுடியுமா? நீங்கள் அமைதியான மனிதரென்று?

தன்னைத்தானே பார்த்து அறிந்துகொள்ளும் தன்மையை,
ஊரிலிருக்கும் சுயமுன்னேற்ற சொக்கர்களின் பேச்சில் மயங்கியே வாழ்வை ஓட்டிகொண்டிருந்தால், நீங்கள் எப்போது உங்களின் பேச்சை கேட்பது?

சுயமதிப்பை,
இரண்டாவது பேராவின் முதல் வரியை படியுங்களேன். ம்ம்.. இப்போது நம்மை நாம் மதித்திருந்தால், நம் திறமைகளை, நம் கற்பனைத்திறனை, நம் சக்தியை நாம் மதித்திருந்தால்,நாம் இப்படி அடுத்தவனின் கைப்பாவையாக ஆடவேண்டிய
சூழ்நிலை உருவாகி இருக்காது. இனியேனும் உங்களை நீங்கள் மதிக்க பழகுங்கள்.

அன்பை,
அன்புதான் நீங்கள்..நீங்கள் தான் அன்பு. அது தனியே வெளியிருந்து வருவது இல்லை. நீங்கள் முதலில் உங்களிடம், முதலில் உங்கள் உடலிடம் அன்பாய் இருங்கள்.. பிறகு உங்கள் உணர்வுகளுக்கு அன்பாய் இருங்கள். பிறகு பாருங்கள்..உங்களிடம் பொங்கும் அன்பை
அள்ளிப்பருக ஆயிரம் பேர் கூடிவிடுவர்..!!

மகிழ்ச்சியை,
அன்பென்று ஒன்று வந்துவிட்டால், மகிழ்ச்சி என்பதும் வந்தே தீரும். அது அன்பின் அடுத்த நிலை.

நட்புணர்வை,
மகிழ்ச்சியின் வழியில் பகிர்தல் துவங்கும். நீங்கள் மகிழ்ச்சியை, அன்பை, எதாவது ஒருவகையில் சகமனிதருக்கு கொடுக்கும்போது நட்புணர்வே அதன் முதல் சாத்தியம். பிறகென்ன..தினம் தினம்..நண்பர்கள்..
அமைதியான, தெளிவானதொரு வாழ்க்கை.

Tuesday, December 6, 2011

தியானமும் நானும்-2





தியானத்திற்கு எப்போதும் ஒரு அரிய சக்தி உண்டு. நாம் நிதானம் தவறாது காப்பதே அதன் சக்தி. என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் நம்மை அறிந்தபடியால், அமைதியாய், தெளிவாய், நிதானித்து
வாழ்க்கையை பார்க்கும் ஒரு மனிதனாய் தியானம் நம்மை மாற்றியமைத்துவிடுகிறது. என் வாழ்க்கையையே எடுத்துகொள்ளுங்கள்..எத்தனை கோடி முறை தற்கொலை எண்ணங்கள் வந்துபோயின,
எத்தனை முறை என் வீட்டை, மக்களை, உலகை வெறுத்திருக்கிறேன்..இப்போது அதை எல்லாம் நினைத்துபார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. இன்னும் கூட சில நேரங்களில் என் அகந்தை மேலெழும்
நேரம்..அதை உடனே தள்ளிநின்று பார்த்து சிரித்துவிடும் தெளிவு எனக்குள் வந்திருக்கிறது.. உடனே நான் எதோ பெரிதாய் கண்டுவிட்டேன்..ஆச்சா போச்சா என்று அகந்தையுரை எழுத வரவில்லை.

ஒரு அற்ப ஜீவராசி என்னாலேயே இவ்வளவு தெளிவாய், பொருமையாய், அழகாய் வாழ்க்கையை அப்படியே ஏற்றுகொண்டு வாழமுடிகிறதென்றால், உங்களால், உங்களுக்காகவும், உங்களை சார்ந்திருப்பவர்களுக்காகவும்
உழைக்கும் மக்களாகிய உங்களால் எவ்வளவோ தெளிவாய் வாழ முடியும். அப்படி வாழும்போது வாழ்க்கை ரம்மியமாய், அழகாய், ஒரு கலைநயமிக்கதாய் இருக்குமே.. ஒரு ஆடலோடும், பாடலோடும்
ஒரு துள்ளலோடும், ஒரு குதுகலத்தோடும் ஏன் வாழ்க்கையை வாழக்கூடாது?

தம்பி..எல்லாம் சரிதான்..இந்த துள்ளலும், குதூகலம், ஆடல், பாடல் எல்லாம் எப்படிப்பா இந்த அவசர உலகில் சாத்தியம்?

சாத்தியம், ஒரே ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொண்டால்...

அது என்ன?

 உலகம் அவசரமாய் இல்லை..மனிதர்கள் நமக்குத்தான் அவசரம். உலகம் அவசரமானது என்பது பச்சைப்பொய்..அப்படி இருந்தால்,
இந்நேரம் மனித இனமே இல்லாமல் போய், அடுத்த கட்ட evolution துவங்கி இருக்கும்.... இந்த பூமி சூரியனை சுற்றுகிறதே..அவசரமாகவா சுற்றுகிறது? இல்லை..ஒருமுறை தன்னைத்தானே சுற்றிவர
24 மணிநேரங்கள் எடுத்துகொள்கிறது. இதனால் பூமி சோம்பேறி என்று அர்த்தமல்ல. அதற்குள் ஒரு நிதானமிருக்கிறது. அது அதனளவில் தெளிவாய்தான் இருக்கிறது. பூமியும் நமது கார்ப்பரேட் கந்தசாமிகள் போல்
இன்னும் வேகமாய், இன்னும் வேகமாய் என்று சுழல ஆரம்பித்தால் நம் கதி அதோகதிதான். பாருங்கள், அது சூரியனை சுற்றிவர ஒரு வருட காலம் தேவைப்படுகிறது. இப்படி பூமிக்கு இருக்கும் நிதானமும்
தெளிவும், உங்கள் வழியில் சொல்வதானால், உங்கள் உலகத்திற்கு இருக்கும் தெளிவும், நிதானமும், அதன் பிள்ளைகளான நமக்கு இல்லையே..?!

ஏன் இந்த பைத்தியம்பிடித்தது போன்ற ஓட்டம்? அவசரமே படாத பூமியில், அவசர அவசரமாய் வாழ்ந்து அவசரமாய் செத்துப்போகும் அவலம் ஏன்?  கொஞ்சம் யோசித்தால், இதற்கு நீங்கள் தான் முழுப்பொறுப்பு
என்று புரியும்.. ஆனால் எப்படி?

அடுத்த பதிவில் சிந்திப்போம்..!!

Saturday, November 19, 2011

நாமும், நமது வாழ்க்கையும்..!!








வாழ்க்கை..சிலர் என்னிடம் என்னடா வாழ்க்கை இது ? என்கிறார்கள்.
சிலர் என்னவொரு வாழ்க்கை அடடா!! என்கிறார்கள்.

இப்போது இவர்களில் யாரை நான் நம்புவது.? வாழ்க்கை கொடுமையும்
கசப்புமானதா? அல்லது இனிமையும் நிறைவுமானாதா? இப்படி
வாழ்க்கை எதன் பக்கம் என்று எண்ணிகொண்டிருந்த போது..

பட்டென மனதில் பட்டது ஒரு பொறி..வாழ்க்கை வெறுமனே வாழ்க்கை
மட்டுமே.. நம் மனத்தை கொண்டு அதை நல்லது என்றும் புகழ்ந்து பாடலாம்
..மோசம்..சுத்த மோசம் என்று ஏசவும் செய்யலாம்.

ஆனால்..போற்றுவார் போற்றட்டும்..தூற்றுவார் தூற்றட்டும் என்று
வாழ்க்கை அதன் வழியை பார்த்து வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

இன்னும் தெளிவாய் சொல்லவேண்டுமென்றால்.. பொதுவாக நம்மில் பலர்
கல்லை இடித்துவிட்டு, ”என் காலில் கல் இடித்துவிட்டது” என்று சொல்லும் ஆட்கள் தான்.
வெகு வெகு சிலரால் மட்டும்.. “தெரியாமல் நானே போய் இடித்துகொண்டேன்” என்று
நிதானித்து சொல்ல முடியும்.

ஆனால் கல் உங்களை இடிப்பதற்காகத்தான் அங்கே இருந்தாதா?
இல்லை கல்லில் இடிப்படுவதுதான்
உங்கள் நோக்கமா? இரண்டுமே இல்லை.
கல்லில் கால் மோதி கொண்டு வலியெடுக்கிறது. அதற்கு நம் மனதின்
விளக்கமே இடித்துவிட்டது என்பதும்..இடித்துகொண்டேன் என்பதும்.

நான் சொல்லவருவது மூன்றாவது வழி. வெறுமனே கால் கல்லில் இடித்துவிட்டது. அவ்வளவே..!!
Fact. Thats all. அதை நான் இடித்துகொண்டேன் என்றாலும், அது இடித்துவிட்டது என்றாலும்..
கல்லில் கால் மோதிகொண்டது என்பது மட்டுமே Fact.

வாழ்க்கையும் அப்படித்தான்.. உங்களை குஷிப்படுத்தவும் அது இங்கே இல்லை..உங்களை அழவைக்கவும்
அது இங்கே இல்லை. நீங்களே குஷியாகிகொள்கிறீர்கள்..நீங்களே வருத்தப்படவும் செய்கிறீர்கள்..மற்றபடி..
ரங்கராஜனுக்கோ, ஒபாமாவுக்கோ, பில்கேட்ஸுக்கோ, என் தெருவோர பிச்சைக்காரருக்கோ அது எந்த வகையிலும்
Commit ஆகவில்லை..ஆகப்போவதும் இல்லை.

நாளை காலை மனித இனமே இல்லாமல் போய்விட்டாலும்.. சூரியன் உதிக்கத்தான் போகிறது, நதிகள் ஓடத்தான்
போகிறது..கடலலைகள் கரைத்தொட்டு விளையாடத்தான் போகின்றன..நாம் ஒரு (.) புள்ளி அளவுக்குக்கூட இந்த பூமிக்கோ,
சூரியக்குடும்பத்திற்கோ முக்கியமானவர்கள் அல்ல. நாமும் ஒரு Accidental உயிரனங்கள் தான்.

அதனால், வாழ்க்கை அப்படி, வாழ்க்கை இப்படி என்று ஓவராக அலட்டிகொள்ளாமல், வந்த வாழ்க்கை நிறைவாய், அன்பாய்,இந்த
கட்டுரையை படித்துமுடிக்கும்வரை + அதற்கு மேலும் நம்மை உயிரோடு வைத்திருக்கும் இயற்கைக்கு நன்றி சொல்லி நலமாய் வாழுங்கள்..!!

Monday, October 10, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு - 4


இன்று நான் பார்க்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமையை என்னால் கவனிக்க முடிகிறது. அதுதான் ”பிறரோடு தன்னை ஒப்பிட்டு வருந்துதல்”.

அவரை போல் தான் இல்லையே.. அந்த நடிகனைப்போல் எனக்கு கட்டுடல் இல்லையே..அந்த நடிகைப்போல் நான் சிகப்பாக, ஒல்லியாக இல்லையே.. அந்த எதிர்வீட்டுக்காரரைப் போல் தன்னால் ஒரு கார் வாங்க முடியவில்லையே..அந்த பெண்மணிபோல் உயர்ந்த பதவிகளில் இருந்துகொண்டு பிறரை ஆள நமக்கொரு வாய்ப்பில்லையே.. என் பிள்ளைகள் அவர்களைப்போல் அறிவுஜீவிகளாக இல்லையே..இப்படி எதற்கெடுத்தாலும் பிறரோடு நம்மை ஒப்புநோக்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது.

எப்படி வந்தது?

பள்ளியில் நீங்கள் படிக்கும்போது இந்த Comparision உங்களுக்கு போதிக்கப்படுகிறது. அதாவது நீங்கள் உங்களைவிட சிறப்பாக படிக்கும் மாணவரோடு எப்போதும் உங்களை ஒப்பிட்டுப்பார்த்துகொள்ள முதலில் உங்களுக்கு சொல்லித்தரப்படுகிறது. இப்படி செய்வதால், உங்களை நீங்களே காயப்படுத்திகொண்டு, அதாவது மாடு தன்னைத்தானே சவுக்கால் அடித்துகொண்டு வேகமாய் ஓடுவதுபோல்.. நீங்கள் உங்களை காயப்படுத்திகொண்டு மேலும் நன்றாய் படிக்க முயற்சி செய்கிறீர்கள். இப்படி கொஞ்சம் மேலே வந்ததும்..இன்னும் மேலே இருப்பவனோடு கம்பேர் செய்கிறீர்கள். பத்தாவது, பன்னிரெண்டாவது  வரும்போது.. காயங்களே உங்கள் உடம்பாய், கம்பேர் செய்வதொன்றே உங்கள் முழுநேர வேலையாகிவிடுகிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் மனம் கம்பேரிங் இயந்திரமாய் மாறிவிடுகிறது. உங்களை விட மெத்த படிப்பவன் 4 நண்பர்கள் வைத்திருந்தால், நீங்கள் 6 நண்பர்களை சேர்த்துகொள்வீர்கள். அவனை முந்தவே உங்கள் முழுநேரப்பொழுதும் செலவழிந்திருக்கும். இப்படி.. முப்பொழுதும் முழுமூச்சாய் போட்டி மனப்பான்மையில் வாழ நீங்கள் பழக்கப்பட்டுவிட்டீர்கள்.

இப்போது கல்லூரி வந்ததும், காதல் மலர்கிறது. அவன் அவளை காதலிக்கிறானே..நம்மை ஒருத்தியும் பார்ப்பதில்லையே..இவளுக்கு இவ்வளவு ஆண் நண்பர்கள் இருக்கிறார்களே..நம்மை ஒருவன்க்கூட பார்ப்பதில்லையே.. அவள் அவ்வளவு அழகாய் இருக்கிறாளே நாமில்லையே.. என்று..மீண்டும் மீண்டும் கம்பேரிங் குழியில் விழுகிறோம். தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறோம்.

சரி.. பிறகு திருமணம்.. அங்கேயும் நகை, சீர்செய்வது, என்று மீண்டும் ஒரு கூட்டம் நம்மை கம்பேர் செய்து கேலி செய்கிறது. அல்லது மெச்சுகிறது. அடுத்து குழந்தை பேறு. அங்கேயும், அவள் உடனே பெற்றுவிட்டாள், நீ ஏன் இன்னும் இழுத்தடிக்கிறாய் என்று கம்பேர் செய்கிறது. அடுத்து நம் பிள்ளை படிப்பு முதல், நம் செல்வ செழிப்புகள் வரை அந்த கூட்டம் நம்மையும், நாம் அந்த கூட்டத்தையும் பார்த்து கம்பேர் செய்தபடியே வாழ்க்கையை வீணடிக்கிறோம்.

ஒருநாளாவது, அந்த இளைஞன் 20லேயே இறந்துவிட்டாரே.. நாம் இன்னும் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று யாரும் கம்பேர் செய்ததில்லை. ஏன்? அதையும் முயன்று பாருங்களேன்.. நாட்டில் ஜனத்தொகையாவது குறையும்.

சரி இதற்கு தீர்வு என்ன?

முதலில் கம்பேரிஸனால் பொருள் சேருமே தவிர நிம்மதி சேராது என்பதை தெளிவாய் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் உழைத்து சேர்த்ததுதான் பொருளே தவிர, பிறரை பார்த்து, நீங்கள் சேர்த்தது உங்கள் பொருள் இல்லை அது அவர்களின் பொருள்.. காரணம் அவர்கள்தானே உங்களை வாங்க ஊக்கப்படுத்தியது. எனவே மனநிம்மதி என்பது பொருள் சேர்ப்பதில் இல்லை..நல்ல எண்ணங்களை, நல்ல சுபாவங்களை, நல்ல மனிதர்களை சேர்ப்பதில்தான் இருக்கிறது...இதை புரிந்துகொண்டாலே..இதை வாழ்வில் கொண்டுவர துவங்கினாலே போதும்..வாழ்வு நிறைவு பெறும்..!!

Friday, August 26, 2011

உனக்குள் ஒரு சப்தம்


அடிப்படையில் மனிதர்கள் இரண்டுவகை

ஒன்று: பிறரின் சப்தங்களுக்காக வாழ்பவர்கள்,

இரண்டு:தன்னுள் எழும் சப்தங்களைகொண்டு வாழ்பவர்கள்.

பிறரின் சப்தங்களுக்காக என்றால், அதாவது, நீங்கள் திறமைசாலி, நீங்கள் பெரிய மேதை, நீங்கள் எங்கள் நிறுவனித்தின் தூண், நிலைத்தாங்கி, இடிதாங்கி..இப்படி பிறரின் புகழ்ச்சிக்கும், பாராட்டுக்கும், பாராட்டு தரும் மயக்கத்திற்குமே ஏங்கி ஏங்கி, தன்னுடைய உழைப்பை வாரி இரைக்கும் நபர்கள், இவர்களால் உலகில், உலகுக்காக சிறப்பாய் வாழமுடியுமே தவிர, தன்னுள் ஆழ்ந்து சென்று தனக்கானதை தேடி செய்ய இயலாது.
இவர்களால் ஒரு நாளும் ஓய்வாய் அமர்தல் முடியாது. காரணம், இவர்கள் இயந்திரமானவர்கள். நான் பழி சொல்லவில்லை. அவர்களை அறியாமல் அவர்களை அவர்களே அப்படி செய்துகொண்டார்கள். I feel sorry for those people. அப்படி மெல்ல மெல்ல தன்னை இயந்திரமாய் மாற்றிகொண்டு, எதோ ஒரு மனிதனின் என்றோ கண்ட கனவை நினைவாக போராடிகொண்டிருக்கிறார்கள். இப்போது நாம் வாழ்க்கை இயந்திரதனமாய்
மாறிவிட்டதாய் புலம்புவதற்கு காரணம் இவர்களை போன்றோர் தான். இவர்களால் தான் வாழ்க்கை ஒரு வெறித்தன்மையும், போட்டித்தனும், போலித்தனமுமாய் மாறி நிற்கிறது. நான் சொல்வதை செய், இல்லையேல் ஓடிவிடு என்பது இவர்கள் கொளகை. இயந்திரத்தனமான, அன்பில்லாத, நிம்மதியில்லாத இவர்களின் தலைமையின் கீழ் 98% சதவிகத உலகம் சிக்கி சின்னப்பட்டுகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா? இவர்களிடம் இருந்து உலகை யார் காப்பாற்றுவது என்கிறீர்களா?


இப்போது இரண்டாவது வகை ஆட்கள், அதாவது, தன்னுள் எழும் சப்தங்களுக்காக வாழ்பவர்கள்.
தன்னுள் எழும் சப்தம் என்றதும், உடனே, நம் மனதின் வெற்று கூச்சல்களையே, வெறித்தன கூச்சல்களையே நாம் நம்முடைய சப்தம் என்று நினைத்திகொண்டிருக்கும். இல்லை. இல்லவே இல்லை. அது மனம். இயந்திரத்தனமானவர்கள் உங்களுக்குள் ஏற்படுத்திய நோய் மனம். அது எப்போதும் இயந்திரத்தனமானவர்களுக்கு உதவுமே தவிர உங்களுக்கு உதவாது. நீங்கள் அந்த மனமும் கிடையாது. நீங்கள் ஆன்மா. பெயரில்லா, மதமில்லா, சாதியில்லா ஒரு பிரபஞ்ச குழந்தை. உங்கள் தாய் பிரபஞ்சம், தந்தை வானம். நீங்கள் யாரென்று தெரிந்துகொள்ள முயல்வதே உங்கள் சப்தங்களை நீங்கள் கேட்டு உணரும் கணம். உங்கள் ஆன்மாவின் சப்தம், உங்கள் இதயத்தின் மூலமே கேட்கும். ஆம். உங்களில் இதயம், ஆன்மாவின் உதடுகள். இதயத்தை கவனியுங்கள்.
உங்களை திருப்திபடுத்த இதயத்தால் தான் முடியும். அதனால்தான் காதலின் சின்னம் இதயம். அன்பின் சின்னம் இதயம். இதயத்தின் படி வாழ மாபெரும் தைரியம் வேண்டும். அதுவும் இதயத்திலேயே இருக்கிறது. அப்படி வாழ்ந்தவர்கள் தான் பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்து சென்றனர். அவர்களாலே உலகம் உய்கிறது.
அவர்களே, அந்த பிரபஞ்ச குழந்தைகளே, புத்தனாய், இயேசுவாய், கிருஷ்ணராய், ஐன்ஸ்டீனாய், ரமணராய், ஷெல்டனாய், ஷேக்ஸ்பியராய், பாரதியாய், பட்டினத்தாராய், விவேகானந்தராய், இப்படி நம்மால் பைத்தியமாய் பார்க்கப்பட்ட பலராய் நம்மிடையே வந்து, நம் இயந்திரத்தனத்திலிருந்து இதயத்தில் வாழ நமக்கு வழி செய்தவர்கள். இன்னும் காலமிருக்கிறது. நீங்கள் இதயம் திறந்து நிறைவாய் வாழப்போகிறீர்களா? இல்லை  ஆட்டுகூட்டத்தில் ஆடாய், வாழாத வாழ்க்கைக்காக அழுதபடி இறக்கப்போகிறீர்களா? இல்லை சிங்கமாய், கம்பீரமாய், தனித்தன்மையோடு வாழ்ந்தோம் என்கிற நிறைவோடு புன்னகையோடு வாழ்வை முடிக்கப்போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்..

நன்றி..!!

Saturday, August 6, 2011

எப்போ ம்மா வருவீங்க?





நேரம்: 7.08 மணி

இதோ.. வேகமாய்.இன்னும் வேகமாய்.. அடுத்த கணமே என் தங்கத்தை அடைந்துவிடக்கூடாதா?
இன்னும் எதற்கு அவளுக்கும் எனக்கும் 7 நிமிட இடைவெளி.. அன்பில் காலம் கரைவதில்லை..கூடுகிறது..
கணமொன்று கடக்கையில் யுகம்கடந்த வலி..ச்சே..மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்லாதா?
இல்லை இந்த ஆட்டோகாரன் மெதுவாக செல்கிறானா? வேகமாகத்தான் திருகுகிறான்.. இத்தனை பேர் சாலையில்
என்ன செய்கிறார்கள்.. ச்சே.. அசமஞ்சங்கள்..நகரவே நாள் செய்கின்றன. எருமைகள்...
சீக்கிரம் போங்க ..ப்ளீஸ் .. மீண்டும் ஆட்டோகாரனுக்கு கெஞ்சலாய் உத்தரவிட்டேன்.

போறேன்மா..போறேன்..ன்னு கொஞ்சம் உறுமலாய் சொல்லிவைத்தான்.

அட..சொல்ல மறந்துவிட்டேனே..நான் அஞ்சலி.. என் வீட்டிற்குதான் இவ்வளவு வேகமாய் போய்கிட்டு இருக்கேன்..
காரணம்.. என் மகள் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி இருக்கா..!! சந்தோஷமாய் இருக்கா? எனக்கும்தான்..ஆனால்..

நேரம் 6.45 மணி
ஹையா..ஹையா..யய்யய்..ஹையா.. !! கூச்சலுடன் வீட்டிற்குள் ஓடிவந்தாள் இந்திரா.

வந்துடுச்சு பிஸாஸு.. இன்னைக்கு என்ன கிழிச்சிதோ? புகைந்தபடி வெளிவந்தாள் கற்பகம் பாட்டி.

குழந்தையை ஏன் திட்ற..எதுவா இருந்தாலும் என்னை நேரா சொல்லிட்டு போ.. மாடிப்படியிலிருந்து கூவினாள் லட்சுமி.

பாட்டி பாட்டி.. இன்னைக்கு நான் ஸ்கூல்ல..

வந்தது லேட்டு.. இதுல கதைவேற அளக்கறியா.. ஃபங்ஷன் முடிச்சமா..புள்ளைய அனுப்பினமான்னு இல்ல..
இவ்வளவு நேரமா பண்ணுவனுங்க.. என்ன ஸ்கூலோ..?!

உங்கம்மா இருக்காளே.. அவளை அப்படியே உரிச்சி வெச்சிருக்க.. அதே துள்ளல், அதே திமிரு.. அதே அடம்..

பொக்கென்று போனது இந்திராவிற்கு.

அப்பா எங்க பாட்டி..? என்று சோகமாய் கேட்டாள்.

அவன் உள்ளதான் இருக்கான்.. ஏன் அவனை வேறு வம்பிழுக்கணுமா நீ.?
என்னை படுத்தும் இம்சை போதாதா? என்றவண்ணம் அவளுக்கு கவுன் மாட்டிவிட்டாள்.

பேக்கை தன்னோடு தூக்கிகொண்டு..அறைக்குள் நுழைந்தாள்.
சர்ரென்று ஒரு பேனா அவள் கன்னம் உரசி வெளியே விழுந்தது.

எங்க.ஒரு பேனா கூட இல்லை.. ச்சை..வீடா இது.. ஒரு நம்பர் நோட் பண்ண பேனா கூட இல்லை...
இருய்யா இருய்யா..இரு லேப்-ல ஸ்டோர் பண்ணிக்கிறேன்.. |
என்கிட்ட மட்டும் எல்லாம் சொல்லு..என்று செல்லில் எவனையோ எகிறிகொண்டிருந்தான் பாலு.

அப்..பாஆஆஆ..

திரும்பி பார்த்தான் பாலு. செல் தவறி கீழே விழுந்தது.. இணைப்பு துண்டிக்கப்பட்டது.. செல்போன் அணைந்தது.

கோபம் குழந்தைமேல் பாய்ந்தது.

ஏய்..எந்த நேரத்துல கூப்பிடறதுன்னு தெரியாது.. ச்சை.. பிஸாஸே..போ..போ வெளியே என்று அலறியபடி
செல்போனை பொறுக்க போனான்.

..குழந்தை மிரண்டே போனது..6 வயது பெண் என்னதான் செய்வாள்.. மலங்க மலங்க விழித்தாள்..
கலங்கி போனாள்.. துக்கம் தொண்டைக்குள் தள்ள..

மெதுவாய் நடந்தாள்.. லேண்ட் லைனில் அம்மாவின் ஆபிஸ்க்கு அழைத்தாள்..

அலோ..எம்.கே. அஸோஸியேட்ஸ்..

அம்மா இருக்காங்களா? அம்மாட்ட பேசணும்..

எந்த அம்மா.. இங்க நிறைய பேர் இருக்காங்களே குழந்த.. பேர் சொல்லு மா..

அம்மா பேர் அஞ்சலி.. என்றாள்.

அஞ்சலி மேடம்.. உங்களுக்கு போன்..

ஹல்லோ..

ம்மா.. ம்மா..

சொல்லும்மா..

மா..குரல் உடைந்தது.. அழ துவங்கினாள்..

மா..ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் மா...கதறி அழுதாள்..

அழுகையில் நடுவே..

எப்போ ம்மா வருவீங்க..?

அழுகை தொடர்ந்தது

தொடர்பு துண்டிக்கப்பட்டது.

Wednesday, August 3, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு- 3

 

தவறு செய்ய கத்துக்கோங்க:

தவறுகள்- மனிதனின் பாடசாலை. இயற்கையின் ஆய்வுக்கூடம், நம்மை கூர்செய்யும் காயங்கள்..

தவறி தத்தளித்து தடுமாறி, அடிபட்டு, சிராய்ப்புகளோடு, சின்ன சுளுக்குகளோடு இப்படி நம் இன்றைய நிலையை எட்ட நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்த்திலும் மேற்சொன்னவற்றை அனுபவித்திருப்போம்.

ஏன் தவறு செய்ய கத்துக்கணும்? தவறு என்பது ஒரு ட்ரையல் தான். ஒரு விஷயம் சரியாக வருமா வராதா என்கிற சந்தேகம்
ஆனாலும் முயற்சி செய்து பார்த்துவிடுகிற தைரியம். இவை இரண்டும் சேரும் போது 50% வெற்றி 50% தோல்வி என்றாகிறது. இப்படி 50% வெற்றிகளில் வேலை எளிதாகிறது. 50% தோல்விகளில் நமக்கு மேலும் சில பாடங்களும் நம் அறிவிற்கு இன்னும் சில பாடங்களும் கற்பிக்கப்படுகிறது.

 

அப்போ எப்பவும் அவமானப்பட்டுதான் கத்துக்க முடியுமா? ஆமாம்.. தவறுகளை வரவேற்காத மனமே அவமானத்தில் கூனிகுறுகுகிறது. அப்படியில்லாமல் “இப்போது நான் செய்யும் இச்செயல் தவறாய் போனாலும் அதன்மூலம் நான் கற்றுகொள்ள தயார்” என்னும் மனநிலையோடு வேலைகளை துவங்கினால்…அந்த வேலை செல்லாது போனாலும் அதன் பாடம் நமக்கு மனதில் வாழ்நாள் முழுதும் தங்கும்.

என்னடா இது இப்படி சொல்றானேன்னு பாக்காதீங்க.. எல்லா அவமானங்களையும் படிக்கட்டுகளாக, ஏணிப்படிகளாக பாருங்கள். அவமானங்கள் தாங்கும் மனமே பல உவமானங்கள் தேடிப்பெரும். எனவே தைரியமா தவறு பண்ணுங்க.. கத்துக்கோங்க.. மெச்சூராகுங்க..!!

 

வாழ்த்துக்கள்.. Happy Mistakes..!!

Wednesday, July 6, 2011

காதலிக்க நேரமில்லை...!



நீ தொட்டுசென்ற பிறகுதான்
துவங்குகிறது என் நாள்..

நீ சுவைத்த மிச்சமே
தேனீராய் கிடைக்கிற்து தினமும்..

நீ உப்பை சரிப்பார்த்தபின்தான் 
நான் சாப்பிடவே அமர்கிறேன்..

தண்ணீர் பாட்டிலின் வாயில்
உந்தன் உதடுகளின் தடம் தினந்தோறும்..

நீ மிச்சம்வைத்த உணவை
மிச்சமில்லாமல் முடிக்கிறேன் மதியம்..

நீ ஓட்டிப்பார்த்ததால் மென்மைகண்டன
என் பைக்கின் கைப்பிடிகள்..

நீ அனுப்பியதாய் சொல்லிதான்
தொட்டுபோகிறது மாலைக்காற்று..

நீ போட்ட கோலமதனால்
தள்ளியே நிறுத்திகிறேன் வாகனத்தை..

வந்தவனை அள்ளிகொண்டு
வாஞ்சையாய் காபி தர..

உனக்கு என்று கேட்டதும்
உனக்குதான் முதலில் என்கிறாய்..

நான் என்னடி செய்தேன் 
என்றே உன்னை கேட்க..

நீ புத்தன் நான் யசோதரை
உன் சேவை என் தேவை..
உன் காதல் என் கூலி..
என்றாயே பார்க்கலாம்..

இப்படி நீயே எங்கும்
என்னை சூழ
காதலின் கடலின் 
நான் மூழ்கியே வாழ


இனி காதலிக்க தனியாய் 
ஏது நேரம்..

காதலிக்கே மொத்தமாய் வாழும் போது..!!

Saturday, June 18, 2011

காதலிப்பவனா நீ..? கொஞ்சம் இங்கே கவனி..!!





உடல்தேடும் பெண்ணோடு
ஒருபோதும் ஒட்டாதே..
பொருள்தேடும் பெண்ணோடு
பொடியேனும் சேராதே..
மணம்தேடும் பெண்ணோடு
மணித்துளியும் செல்லாதே..

சொல்லாலும் செயலாலும்
சொல்லாத செயலாலும்
சொல்லொனா துயரம் சேரும்
நான் சொல்லியும் இவரோடு 
சேர்ந்தால்..

வாழ்க்கை என்னவென
வழியெங்கும் தேடிடும் நீ
வீணாய் தொலைப்பாய் அஃதை..
வீண் வீணை இடைதனில்
மயங்கி சேர்ந்தால்..

மண்ணோடு மண்ணாய்
தூசோடு தூசாய் 
காற்றில் கரைந்தே போவாய்
வீண் கரியாய் எரிந்து சாவாய்..

உன்னை ஒட்டி ஒட்டி
உன்னை உறிஞ்சிட கண்டால்
இடப்பாகம் போனாலும் போ - என
உடன்வாழாதே உடனே வா..!!

உயிர்தேடி உயிர்தேடி
தன் உளம்காட்ட துடிக்கின்ற
உத்தமப் பெண்ணோடு சேர்..
இல்லேல் துணிந்து நீ
துறவறம் பூண்...

அன்பும் காதலும்
ஆழியாய் இன்பமும்
மண்ணில் பூத்திடும் பார்..
உளகாதலியவளை நீ சேர்..

உன்னில் தன்னை ஊற்றிட
விண்ணில் உன்னை சேர்த்திட
உனக்காக தன்னை தந்தால்
அவள் துகில்துவை 
துகில்துவை
தப்பேதும் இல்லை...

தாய்க்கு நிகராய் உன்னை
தரணிக்கு ஏற்ற துடிக்கும்
இன்னொரு தாயாவாள் உனக்கு 
இவளே உன் விடியற்கிழக்கு..!!
,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,
,,,,,
,,,
,

Friday, June 3, 2011

எழுந்திரு, விழித்துக்கொள்.. கொண்டாடு!!




கண்ணை திறந்துகொண்டிருந்தால் மட்டும் ஒருவர் தூங்கவில்லை என்று அர்த்தமில்லை- பழமொழி

காலையில் வாக்கிங் போகிறீர்கள்.

மெதுவாக பாதங்கள் தரையில் படுகிறது. காற்று மெல்ல மேனியெங்கும் வீசுகிறது.
இன்றைய நாளில் முதல் பூவாய் சூரியன் உங்களை பார்த்து புன்னகைக்கிறது. வாழ்வு இன்று உங்களை மீண்டும்
உயிர்த்தெழ வைத்திருக்கிறது. நேற்றைய குப்பைகள் களைந்து சுத்தமாய் பரிசுத்தமாய் இருக்கிறீர்கள். மனம் தெளிவாய்
இறைவன் கருவறையாய் தெளிந்து நிற்கிறது. பூக்கள் வரவேற்கிறது. மரங்கள் உங்கள் வரவை கொண்டாடுகிறது.
இப்படி தினமும் தினமும் உங்கள் வாழ்வு திருவிழாவாய் திகழ்கிறது.

ஆனால்..

அது உங்களுக்கு தெரிவதே இல்லை..ஹாஹாஹா!! காரணம்.. கண் திறந்தும் தூக்கத்திலேயே காலம் செல்வதால்.
இதோ இந்த பதிவை படிக்கும்போது கூட உங்களின் குறட்டை சத்தத்தை என்னால் கேட்கமுடிகிறது. என்ன செய்ய..
நீங்கள் தூக்கத்தில் இருக்கும் வரைதான் இந்த சமுதாயம்.. நீங்கள் தூங்கும்வரை தான் உங்கள் சின்ன சின்ன கவலைகள்.
நீங்கள் தூங்கும் வரை தான் உங்களுக்கு துக்கமான ஒரு வாழ்க்கை. நீங்கள் தூங்கும்வரை தான் உங்கள் வாழ்க்கை விதியின்
கையில்.


இப்போது விவேகானந்தர் சொன்னதை கொஞ்சம் மாற்றி சொல்கிறேன். எழுந்திருங்கள்.. போதும் உறக்கம். உங்கள் கனவுகளுக்காக
வாழ்க்கை இங்கில்லை. உங்கள் சுயத்தின் முடிவுக்கு மட்டுமே இயற்கை வளையும். உங்களின் மனமென்னும் ஓட்டைபாத்திரத்தின்
தாகத்திற்கு வாழ்வு வளையாது. வளைக்க முயல்வதில் வீணாவது உங்கள் வாழ்க்கைதான்.

விழித்துகொள்ளுங்கள். உங்களுக்கு தாலாட்டு தேவை இல்லை. அலாரங்களே தேவை. தவறி தூங்கிவிடும் ஒவ்வொரு கணமும்
அடித்து எழுப்ப எப்போதும் உங்களோடு ஒரு அலாரத்தை வைத்துக்கொள்ளுங்கள். மனம் உங்களை எப்போதும் தூங்கவைக்கவே முயற்சிக்கும்.அப்பொதுதான் உங்கள் வீட்டில் திருடி.. தன்னை பணக்காரனாய் காட்டிகொள்ளமுடியும். போதும் உங்கள் திருடனை அனுமதித்தது. ஏற்கனவே
பாதி சொத்தை கொள்ளையடித்துவிட்டான். இன்னும் நீங்கள் படுக்கையில் புரண்டது போதும். விழித்துகொள்ளுங்கள். அவனை வெளியேற்றுங்கள்.


கொண்டாடுங்கள்..!! இங்கே போராட்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை..!! விழித்துக்கொள்ளாதவரை போரும் உண்டு..போராட்டமும் உண்டு.
விழித்துகொண்டபின் கொண்டாட்டம் தான். துக்கத்திற்குதான் நீங்கள் பெரிதும் முயற்சிகள் செய்யவேண்டும். மகிழ்ச்சி என்பது உங்கள்
அடிப்படை இயல்பு. பிறக்கும் போது நீங்கள் அழுதது துக்கத்தால் அல்ல..மகிழ்ச்சியால்.. ஆனந்தில் விட்ட கண்ணீர் அது. உன் தந்தையும் தாயும்
உங்களை முதலில் கண்டதும் அழுதார்களா என்ன? பூரித்துபோனார்கள்...மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். கொண்டாட்டமும் மகிழ்ச்சியுமே உங்கள்
சுயம். அதுவே வாழ்வை வாழச்சொல்லும் சக்தி.

தூக்கம் போதும்... வாழ்க்கை கணத்திற்கு கணம் நழுவுகிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு இல்லை. இன்றே கடைசி..இக்கணமே கடைசி..

வெற்று கனவுகளுக்காக அழுதது போதும்.. விழிப்பில் வாழுங்கள்.. எழுந்திருங்கள்..விழித்துகொள்ளுங்கள்..கொண்டாடுங்கள்..!!

Monday, May 30, 2011

சோகமாய்...ஒரு கவிதை...!!







இருப்பதில் இருப்பது
ஏதுமில்லை எனவே
இருப்பதா வேண்டாமா
யோசிக்கிறேன்..

பொறுமை என்னை
போவென விட்டபின்
பொருப்பதா போகவா
யோசிக்கிறேன்..

நன்மையும் தீமையும்
தீர்க்கமாய் தெரிந்தபின்
தீயில் தீய்ந்திட
யோசிக்கிறேன்..

சுட்ட பழங்கள் எல்லாம்
சுடாமல் போனபின்
சுடலையில் சுடப்பட
யாசிக்கிறேன்..

அண்டமும் பிண்டமும்
அவனே ஆனப்பின்
அணைவதா எரிவதா?
யோசிக்கிறேன்..

நேசங்கள் அத்தனையும்
வேஷங்கள் ஆனப்பின்
காற்றோடு கரைந்திட
யாசிக்கிறேன்..

மண்ணும் நீரும்
கொஞ்சம் காற்றும்
கலவையாய் கலந்து
கொடுத்த உடம்பை
கவனமாய் கழட்டிவிட்டு
கரைந்திட போகிறேன்..

சிரித்ததும் போதும்
சிரிக்க வைத்ததும் போதும்
அழுததும் போதும்
இந்த அன்பான மானுடத்தில்

வருந்துகிறேன் 
இங்கு வந்தமைக்கு
திரும்புகிறேன் 
என் தாய்வீட்டிற்கு!!



Monday, May 23, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு - 2


உன் தந்தை தாயை கொல்லாமல் நீ சுதந்திரம் அடைய முடியாது - புத்தர்

என்ன இப்படி சொல்லிட்டாரு.. பயப்படாதீங்க. இந்த கொலைக்கு வழக்கு கிடையாது.
கைது கிடையாது. போலீஸ் இல்லை. ஏன் குற்றவாளிக்கூட இல்லை. சொல்லப்போனால்
குற்றவாளியை திருந்த வைக்கத்தான் இப்படி புத்தர் சொன்னார்.

அப்படியா? அப்போ யார் அந்த குற்றவாளி..?






நீங்க தான். வேற யாரு.. ம்ம்..உண்மைதான். எல்லா தாயும் தந்தையும் உங்களை
குற்றவாளிகளாகவே வளர்க்கிறார்கள். எப்படி? சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் எவரும்
குற்றவாளிதானே.. எனவே உங்களை முடமாக்கி, சிறகுகளை அறுத்து, இந்த சமுதாய
சிறைக்குள் சரிவர பொருந்த வளர்க்கிறார்கள். அப்படி வளர்ப்பதால் நீங்கள் உங்கள் தனித்தன்மையை
கொன்றுவிடுகிறீர்கள். உங்கள் சுதந்திரத்தை அடமானம் வைத்துவிட்டீர்கள். உங்கள் உண்மை அன்பை
நீங்களே உதாசீனம் செய்துவிட்டீர்கள். உங்கள் சுயத்தை பாதுகாப்பு தேடும் கோழைத்தனத்திற்காக கொன்றுவீட்டீர்கள்.
எனவே நீங்கள் குற்றவாளிதான்.

சரி இந்த குற்றவாளி திருந்த முடியாதா? முடியும்.

எப்படி? என் தந்தை தாயை கொல்லணுமா?

கண்டிப்பா.
 ஆனா...வெளியில் இருக்கும் அவர்களை சொல்லவில்லை. உங்களுக்குள் இருக்கும் அவர்களின் குரல்களை கொல்லவேண்டும். அவைகள் தான் உங்களுக்குள் இருந்து உங்களையே அழிக்கும்
விஷம்.அவைகள் உங்கள் சிறுவயது முதலே உங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வளரவைக்கப்பட்டுள்ளது.
இப்போது உங்களின் வார்த்தைகளில் 85% அவர்களின் வார்த்தைகள் தான். உங்களின் எண்ணங்களின் 95% அவர்களின் எண்ணங்கள் தாம்.
இப்படி நீங்கள் வெறுமனே அவர்களின் நகலாக இருக்கிறீர்கள்.வெறும் தாளாய் இருந்த உங்கள் மனத்தில்
இப்போது முழுக்க முழுக்க அவர்களின் கிறுக்கல்கள். உங்களை நீங்கள் வெறும் தாளாய் கண்டெடுக்க முடியாதபடி மொத்தமாக
கிறுக்கி தள்ளி இருக்கிறார்கள்.

இளம் வயதில் உங்களை நீங்கள் உணர ஆரம்பிக்கும்போது, மெல்ல அந்த கிறுக்கல்கள் உங்களை உறுத்துகிறது.அது இன்றைய
சூழலுக்கு சம்பந்தமில்லாமல், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு கட்டளையாய் உங்களை துன்புறுத்துகிறது. என்ன செய்வீர்கள் பாவம்..
உங்கள் மனமே இரண்டாய் பிளந்து ஒன்று சூழ்நிலைக்கேற்ப செயல்பட துடிப்பதும், ஒன்று உங்கள் பெற்றோரின் கட்டளைகளுமாய்
குழம்பி நிற்கிறது. இதனால் இயலாமை பிறக்கிறது. தாழ்வு மனப்பான்மை துவங்குகிறது.

இப்படி சிறுக சிறுக சறுக்கி தாழ்வு மனப்பான்மையில் புதை சேற்றில் மாட்டிகொண்டீர்கள்.
போதும், இனிமேலும் நம்மை நாமே துன்புறுத்திகொள்ளுதல் ஆகாது. தாயும் தந்தையும் பாதைகள்.
ஆனால் கொஞ்சம் பேதைகள். அவர்கள் செய்வது என்னவென்று அவர்களுக்கே தெரியாத பேதைகள்.
சாவி கொடுத்த பொம்மைகளாய் சமுதாயத்திற்காக ஆடுகிறார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை.
அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவர்களும் உங்களை போல் அவர்களின் பெற்றோரின் குப்பைகளை
சுமந்து நிற்கிறார்கள். அவர்களை மன்னிப்போம், அடுத்து ஆகவேண்டியதை பார்ப்போம்.

முதலில், எங்கெங்கு அச்சம் எழுகிறதோ, அங்கங்கே போய் நில்லுங்கள். பெண்ணை கண்டால் பயமா?
பேச துணிச்சல் இல்லையா? உலகை கண்டால் நடுக்கமா? ஓடும் நதியில் நீந்த பயமா? எங்கும் எதிலும்
அச்சம் தெரிந்தாலும் அதை துணிந்தே செய்யுங்கள். தவறுகளின் கற்பவனே தன்னம்பிக்கைக்கு உறியவன்.
உங்கள் தவறுகளில் தேர்ச்சி பெருங்கள். கல்லடி பட்ட மரமே பழுக்கும். இது புதுமொழி.அடிபடுங்கள்.
அடிகள் படிகளாகட்டும். அவை உங்கள் சுயத்திற்கு உங்களை கொண்டு சேர்க்கட்டும். பெற்றோர்
பெற்றோராய் மட்டும் இருந்தால் போதும். வளர்த்தோராய் நமக்கு நாமே இருப்போம்.

அப்படி வளர்வதே வளர்ச்சி. இப்போதுதான் உங்கள் காலில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்கள் தோள்கள்தான்
உங்கள் சுமை சுமக்கிறது. உங்களின் பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கட்டும். இனி நீங்கள் வாழும்
வாழ்க்கை உங்களுக்கானதாய் இருக்கட்டும்.

Tuesday, May 17, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு...



பொதுவாகவே மேலைநாட்டு அறிஞர்களுக்கும், ஏன் நமது நாட்டு அறிஞர்கள் சிலருக்குமே ஒரு கருத்து உண்டு.
அதாவது இந்தியா ஒரு இறந்த நாடு என்று. அட..!! ஏன் இவர்கள் இப்படி சொல்கிறார்கள்?
காரணம் உண்டு. அது நாம் நமக்குள் சுமக்கும் அழுத்தமான ஆழமான தாழ்வுமனப்பான்மை. அது ஒரு நாடு
முழுக்க பரவி பரதிபலிப்பதால் இந்தியா தாழ்வுமனப்பான்மை கொண்ட மக்கள் நிறைந்த இறந்த நாடாக இருக்கிறது.

 அடிப்படைகள் புரிந்த எந்த விஷயமுமே
சீக்கரம் சரிசெய்யக்கூடியதாய் மாறிவிடும் இல்லையா.. சரி தாழ்வு மனப்பான்மைக்கான அடிப்படைகள் என்ன?

முதலில் பால்ய பருவம்:

நம் நாட்டில் குழந்தைகளை மிகவும் குழந்தைத்தனமாக வளர்க்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் வெறுமனே தாய் தந்தையரோடு மட்டும் வளராமல் அவர்களின் சொந்தகளோடும் வெளிவட்டார நட்புகளோடும்
இருக்க அனுமதிக்க வேண்டும். வெறுமனே தாய் தந்தையே உலகம் என்றிருந்தால் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைவது
மட்டுமில்லாமல், படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வமில்லாமல் இருக்கும். அதிகமான நட்புறவு கொண்ட குழந்தைகள்
வேகமாகவும், விவேகமாகவும் இருப்பார்கள். சுறுசுறுப்பும், எல்லாரிடமும் எளிதில் பழகும்விதமாகவும் இருப்பார்கள்.
இதனால் அவர்களின் தாழ்வு மனப்பான்மை அளவு குறைவாகவே இருக்கும்.

முதலில் நாம் குழந்தைகளின் அங்க அடையாளங்களை சுட்டிக்காட்டி அவர்களை குறைகூறுதல் கூடாது. அது முதல்கட்ட
தாழ்வு மனப்பான்மைக்கான அடிப்படை.

அடுத்து குழந்தைகளை யாரோடும் ஒப்பிட்டு பேசாதீர்கள். அது மிகவும் மோசமான வழக்கம். அப்படி பேசுவதால்
குழந்தைகள் மிகவும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எல்லா குழந்தையும் சச்சினாகவோ, விஸ்வநாதன் ஆனந்தாகவோ பிறப்பதில்லை.
பிறக்காது. எனவே, உங்கள் குழந்தைகளின் தனித்தன்மையை புரிந்துகொண்டு அவனை/அவளை வளர்ப்பதே சிறந்தது. பிறரின் ஜெராக்ஸ்
காப்பியாக உங்கள் குழந்தையை வளர்க்கும் பாவத்தை தவறியும் செய்துவிடாதீர்கள்.

மூன்றாவது முக்கியமான விஷயம். குழந்தைகளை அடிப்பது. இது மிகவும் மோசமான, மனிதத்தன்மையற்ற செயல்.
ஏன் குழந்தையை அடிக்கிறீர்கள். திருப்பி அடிக்கமாட்டான்/மாட்டாள் என்கிற தைரியம் தானே... இதே கோபத்தை உங்களைப்போன்ற
சக வயதினரிடமோ, அல்லது ஒரு இளைஞரிடமோ காட்டிப்பாருங்கள். பற்கள் நொறுங்கிவிடும். குழந்தைகளை அடித்துதான் வளர்க்கவேண்டும்
என்று எவரேனும் சொன்னால், அவர்கள் அறிவு இன்னும் வளரவே இல்லை என்றுதான் அர்த்தம். ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எப்போது
நாம் நம் குழந்தைகளின் நண்பனாக மாறுகிறோமோ அப்போதே அவர்கள் மாற ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அன்பை சொல்லிக்கொடுங்கள். அரவணைப்பை தாருங்கள். அவனை/அவளை அவனாக/அவளாக இருக்கவிடுங்கள். நீங்கள் பாதுக்காப்பை மட்டும்
தந்தால் போதும். இந்த சின்னஞ்சிறு பறவைகள் பாசமாய் கூட்டைத்தேடி வரும். தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் நண்பர்களாகட்டும்.

தாழ்வு மனப்பான்மை ஒழிந்து வாழ்வு மனப்பான்மை மலரட்டும்..

தொடரும்....

Monday, May 9, 2011

தியானமும் நானும்..!!




எவ்ளோ நாள் ஆச்சு.. அடடா.. என் வலைப்பக்கத்தை பார்க்க எனக்கே சங்கடமாய் இருக்கிறது.
இருந்தாலும்.. பிஸியாக இருந்த அளவுக்கு அது இப்போது ரெஸ்ட் எடுத்துகொண்டிருக்கிறது என்று ஒரு ஆறுதல்
சொல்லிகொள்கிறேன்..

நான் தியானம் பயில்கிறேன்.. ஆமாம்...உண்மைதான்..அட நிஜமாப்பா, ஆனால் பொதுவாக எல்லாரும் பயில்வது
போல் பத்மாசனம் போட்டு அமர்ந்து கண்ணை மூடி, முதுகை நிமிர்த்தி, மூச்சை இழுத்து இழுத்துவிட்டு, இப்படி
எதுவுமே செய்வது இல்லை. அதே போல் தியானம் செய்தே ஆகவேண்டும் என்று என்னை நானே கட்டாயப்படுத்திகொண்டதும்
இல்லை. எப்போது பசிக்கிறதோ அப்போது உண் என்பது போல எப்போது மனம் ஓய்வாய் அமைதியாய் இருக்க ஏங்குகிறதோ
அப்போதெல்லாம் தியானம் செய்ய தயாராகிவிடு என்பது எனது கொள்கை.

பொதுவாக எல்லாரும் மனம் அலைபாயும்போதும், கோபத்தில், ஆசையில், ஏக்கத்தில் கொதிக்கும்போதும் மட்டுமே தியானத்தை
நினைவுபடுத்தி மனதை கட்டுபடுத்தும் ஒரு முயற்சியாக அதை செய்கிறார்கள். ஆனால் மனதை கட்டுபடுத்தினால் மட்டும்
மனம் எதையும் சாதித்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது ஓடும் ரயிலை ட்ராக்கில் நின்றுகொண்டு
இரண்டு கையால் தடுக்க முடியும் என்று முயற்சிப்பதை போல.

ஒரு ரயிலை நிறுத்த அதன் அடிப்படை அம்சங்கள் தெரிந்திருக்க வேண்டும். எந்த லிவரை இழுத்தால் ரயில் வேகம் குறையும்,
எந்த லிவர் ப்ரேக்காக செயல்படுகிறது என்று முழுமையாக ஒரு ரயில் என்ஜினை புரிந்தவருக்கே ரயிலை நிறுத்துவது சாத்தியம்.

உன் மனதை பற்றி நீ சரியாக புரிந்துகொண்டால் அதை கொஞ்சம் கொஞ்சமாய் கவனித்து கவனித்து அதன் அடிப்படைகளை
புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொண்ட பின் அதை நிறுத்துவது, அதை உனக்கேற்றவாறு செயல்பட வைப்பது,
என அது சுலபமாக உன் கைக்குள் வந்துவிடும்.

மனம் ஓய்வை தேடும் நேரத்தில் அதை புரிந்துகொள்வது சுலபம். ஆனால், உனக்கு மனம் எப்போது ஓய்வை தேடுகிறது என்பதும்
தெரியாதே!!, இருக்கட்டும், எப்போதெல்லாம் உன் மனம் நிதானமாய் நிம்மதியாய் இருப்பதாய் உணர்கிறாயோ,
அதாவது உனக்கு பிடித்தவரோடு பேசும்போது, நடக்கும்போது, உனக்கு பிடித்த புத்தகம், பாடல், கவிதைகள் படிக்கும்போது
இப்படி பல்வேறு சமயங்களில் மனம் ஓய்வாய் இருக்கும். அந்த சமயங்களில் அதை கவனி.

வெறுமனே கவனி. நீ அதனிடம் பேச முயற்சி செய்யவே செய்யாதே. இது தவறான போக்கு. அப்படி பேசுவது அர்த்தமற்றது.
வெறுமனே கவனித்தல் போதுமானது. அப்படி கவனித்து வர வர அதன் அடிப்படைகள் புரிந்துவிடும்.

அப்போது அதை தாண்டி செல்வது சுலபமானது.

மனதை தாண்டி என்ன இருக்கிறது? எல்லாம் மனதை தாண்டிதான் இருக்கிறது. மனம் வெறும் காவலாளி. சொர்க்கத்தின் காவலாளி.
அவன் அவ்வளவு சீக்கிரன் உன்னை உள்ளே விடமாட்டான். அவனை தாண்டி நீ சென்றுவிடு. சென்றுவிட்டால், அப்போது புரியும்
அந்த சொர்க்கமே உன்னுடையது என்று.

நன்றி,
ரங்கன்.

Wednesday, April 13, 2011

மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடு, வாயை மூடு!!



என் வாழ்வில் பல திருமணங்களை பார்த்திருக்கிறேன், என் தங்கை திருமணம் உட்பட.
அவைகளில் உள்ள சில விஷயங்கள் எனக்கு முரணாகவும், முட்டாள்தனமாகவும் ஏன் கொஞ்சம்
கீழ்த்தரமானதாகவும் கூடப் படுகிறது.
அதில் முக்கியமான ஒன்று.. நான் மாப்பிள்ளை வீடு என்று பந்தா காட்டுவது. எதோ மைக்ரோஸாப்ட் ஓனரின்
ஒன்னுவிட்ட கஸின் போல சீனைப்போட்டுக் கொண்டு ஒருசில பெண்களும் ஆண்களும்
பெண்வீட்டுக்காரர்களை சீண்டுவதும், அதிகாரம் பண்ணுவதுமாய் இருப்பார்கள். பெண்வீட்டுகாரர்கள் மனதிற்குள்
பொருமினாலும் வெளியே சொல்லாமல் சிரித்தும், நாசூக்காக தவிர்த்தும் அவர்களை அனுசரித்துகொள்வர்.
இப்படி ஒரு ஆணை பெற்றேன் என்று பெருமை அடித்துகொள்வதை நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது.

சொல்லப்போனால் பெண்வீட்டுகாரர்கள் தான் பந்தா பண்ண வேண்டும். ஆணின் மொத்த பலமே.. பெண் தான்.
ஆண் தன்னை ஆண் என்று உறுதி செய்வதற்கும் ஒரு பெண்ணே தேவையாகிறாள். அவளின் அன்பும் அரவணைப்பும்
ஆணிற்கு மிகவும் முக்கியமானதாகவும், அவளின் புத்திசாலித்தனமும் நாசூக்கும் வாழ்க்கை சுமூகமாக செல்ல வழிவகுப்பதாகவும், தானே தாயான பின்னும் கணவனின் இரண்டாவது தாயாகவும் மாறும் பெருமையான பிறவியாக பெண் இருக்கிறாள்.

(உடனே பெண்ணியவாதின்னு நினைச்சுட்டீங்கன்னா உங்க தலைக்கு ஒரு செல்லக்குட்டு..நான் அவன் இல்லை :) )..

இப்படி ஒரு பெருமைக்குரிய பெண்ணை மணப்பெண்ணாய் ஒரு ஆணை நம்பி அனுப்புவதை நினைத்து பெருமையும்
பூரிப்பும் அடையவேண்டியது பெண்வீட்டார் தான். ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது..

அந்த பெண்ணை அவர்கள் படுத்தும் பாடு... மாப்பிள்ளையை எப்படி அனுசரித்து போவது? மாமியாரை எப்படி வழிக்கு கொண்டுவருவது?
மாமனார் எப்படி? என மாப்பிள்ளை குடும்பத்தாரை பற்றி பேசி பேசி அந்த பெண்ணின் மனதில் பெருமளவு பீதியை கிளப்பிவிட்டுகிறார்கள்..
சமையல் குறிப்பு முதல் அழகு குறிப்பு வரை.. வந்தார் போவாரெல்லாம் அட்வைஸ் மழை பொழிந்து தள்ளி..
அந்த பெண்ணை திக்குமுக்காட செய்துவிடுகிறார்கள். பாவம் அந்த ஜீவன்.. இவ்வளவு பெரிய தலைவலியா திருமண வாழ்க்கை என்று..
திருமணத்திற்கு முன்பே நோக ஆரம்பித்துவிடுகிறாள்.

அதுமட்டுமில்லாமல், கொடுக்கும் சீரில் அது இல்லை இது இல்லை என்றும்..நாங்கள் அது செய்தோம்..இவங்க இவ்வளவுதானா என்று கம்பேரிஸன் கண்மணிகள் வேறு ஒரு பக்கம்..


அடுத்த தொல்லை ஹோம குண்டம்.. வேர்த்து விருவிருத்து.. சீக்கிரம் கட்டிடுப்பா தாலியைன்னு கடுப்பா உட்கார்ந்திருப்பாங்க.
அடுத்து..போட்டோ செஷன்..
நாளைக்கே போட்டோ ஆகப்போகிறவர்கள் முதற்கொண்டு எல்லாரும் சுற்றி சுற்றி வந்து சுட்டுதள்ளுவார்கள்.
அத்தனை போட்டோவிலும் புன்னகைக்க வேண்டும். இல்லாவிடில் அதுக்கும் பிரச்சனை கிளப்பும் கூட்டம் இது.

இப்படியெல்லா வகையிலும் அவளை படுத்தி எடுத்ததில்லாமல் அந்த சடங்கு இந்த சடங்கு என அடுத்த இரண்டு மூன்று மணிநேரங்கள்
கூத்து நடக்கும்..

இதெல்லாம் எதற்கு செய்கிறோம் என்ற அர்த்தம் புரியாமல் சொல்லுதுங்க...செஞ்சி தொலைப்போம் என்று மாப்பிள்ளையும் பெண்ணும் பொம்மைகளாய்
வலம் வருகின்றனர்.

இப்படி பல்வேறு வகையில் பெண்ணை வதைத்தே திருமணங்கள் நடக்கின்றன.


வெரி ஸேட்.. கொஞ்சமாச்சும் மாருங்கப்பா..!!


Monday, April 4, 2011

நீ காதலின் புன்னகை..!




உண்மைதான் புரிகிறது..
உன் பாசம் தெரிகிறது..

காதல் கொண்ட கண்ணில்
கோபம் கொட்டிக் கிடக்கிறது..

ஆசை சொல்லும் இதழில்
ஆத்திரம் பொங்கி வழிகிறது..

புன்னகை பூக்கும் முகம்
பூகம்பமாய் என்னை பார்க்கிறது..

தென்றல் வீசும் பேச்சு
இன்று இடியென இடிக்கிறது..

சாரல் வீசும் சொற்கள்..
கற்கள் வீசி செல்கிறது

வண்ண கண்களை கத்தியாக்கி
என் இதயத்தில் கீறாதே..

சொற்களின் சூரிய சுட்டீல்
என்னை சுட்டுவிடவும் பார்க்காதே..

தாமதம் தவறுதான்..
தயவுசெய்து என்னை மன்னி..

நாம் காதல்செய்யும் நேரமிது
புரிந்துகொள்ளடி என் கன்னி..

கண்கள் மெல்ல பார்த்து
காற்றாட காலாட நடந்து
காதல் செய்வதை விட்டுவிட்டு..

அட..
இதோ.. வருகிறது..
இன்னும் கொஞ்சம்..


அட வந்துவிட்டதே புன்னகை..!!
என் அழகிக்கு அழகு சேர்க்கும் பொன் நகை..!!



Wednesday, March 30, 2011

என் உயிரினும் மேலான..femaleக்கு..



நீ தயவுசெய்து சிரிக்காதே..
பொறாமையில் பூப்பதில்லையாம்..
சொர்க்கத்தில் பூக்கள்..

நீ தயவுசெய்து முறைக்காதே..
என்னை விட சூடா என்று
சுருங்கிப்போகிறான் சூரியன்..

நீ தயவுசெய்து அழாதே..
என்னைவிட அதிகம் தண்ணீர்..
நடுங்கிப்போகிறது நயாகரா..

நீ தயவுசெய்து நடக்காதே..
உன் பாதத்தின் மென்மையில்
உருகிவிடுகின்றன சாலைகள்..

நீ எதையும் தொடாதே..
தொட்டதெல்லாம் தங்கமானால்
தங்கத்திற்கும் ஏது மதிப்பு..??

நீ பேசவே செய்யாதே...
வரும் வார்த்தைகளை எல்லாம்
பொருக்கிகொண்டு ஓடுகிறது காற்று..

நீ எதையும் பார்க்காதே..
பார்ப்பதெல்லாம் பாசம்கொண்டு
பின்னால் வருகிறது உன்னோடு..

நீ பிறக்கத்தான் நான் பிறந்தேனாம்..
நாம் சேரத்தான் பூமி வந்ததாம்..
நாம்தானாம்

அந்த ஆசை  ஆதாமும்..
அழகி ஏவாளும்..
....
...
..
.

Monday, March 28, 2011

உன் பார்வையில்...!




புரட்டும் புத்தகம் பிடுங்கி எறிந்து
புதிதாய் பார்த்தாய் என்னை..

சீவி முடித்த தலை கலைத்து
சிரித்து பார்த்தாய் என்னை..

ஒரு கால் ஷூவை ஒளித்துவைத்து
ஒருமாதிரி பார்த்தாய் என்னை..

வெறும் தட்டை வெட்டென வைத்து
வெகுளியாய் பார்த்தாய் என்னை..

சட்டைபை நிறைய சில்லரை கொட்டி
சின்னதாய் பார்த்தாய் என்னை..

கைப்பையை காலியாக்கி
காளியாய் பார்த்தாய் என்னை..

நான் வாசல் நெருங்க
நீ ஓடிவந்து
கோபமாய் கிட்டே வந்து
காதோரம் சொன்னாய் நீ..

“லூஸே..இன்னைக்கு ஞாயிற்றுகிழமை”..


:))))

Wednesday, March 23, 2011

நான் இந்தியனில்லை.. நான் இந்துவுமில்லை..!!




எனக்கு இன்னைக்கு காலைல தாங்க தோணிச்சு..
அட.. நாம இந்த நாட்டுல பிறந்தது நம்ம தலையெழுத்தா?
இல்லை எதேச்சையான ஒரு விஷயமா? ம்ம்ம்..
எனக்கு நல்லா தெரியும் இது தலையெழுத்து இல்லைன்னு.. எனக்கு மொட்டை போட்டபோது எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும்..
ஜூம் பண்ணி பண்ணி பார்த்தேன்.. ”இந்தியனாய் பிற”ன்னு எதுவும் எழுதலை.. ஸோ..நோ தலையெழுத்து..

அப்போ.. எதேச்சையா நடந்த ஒரு விஷயம்.. ஓ.. அப்போ நான் இந்தியனெல்லாம் இல்லை..
இங்க பிறந்ததால இந்தியன்னு மெச்சிகலாம்.. அப்போ இதுல என்ன பெருமை இருக்கு?
நிறைய பேரை பாருங்க.. நான் இந்தியன்.. நான் ஆரியன்.. நான் திராவிடன்.. நான் அது.. நான் இது..
ஸ்ஸ்ஸப்பா.. எத்தனை ”..ன்”கள்.. முடியல..

இந்தியா ராக்கெட் விட்டா.. ஆஹா..இந்தியனாய் இருப்பதில் பெருமை.. அதே இந்தியா வேற நாட்டுகிட்ட
(முக்கியமா பாகிஸ்தான்)கிட்ட தோத்துட்டு வந்தா.. அந்த விளையாட்டு வீரர்கள் வீட்டை இடிக்கிறது.. பொம்மை எறிப்பு, அப்புறம்
இந்தியனாய் இருப்பதே அவமானம்னு புலம்பல்.

ஏன் இந்த வெட்டி பந்தா..ஏன் இந்த வீண் சோகம், வெறுமனே லாஜிக்கா யோசிச்சாலே போதும் இந்த எல்லா “..ன்”களும்
காணாம போய்டும். அப்படி என்னத்த இழந்துட்டீங்க.. அப்படி என்னத்த சாதிச்சிட்டீங்க.. ஒன்னுமில்லை..
இன்னும் இமயமலைதான் உசரமா இருக்கு.. இன்னும் கடலன்னை உங்களை மீறி சுனாமியா வரத்தான் செய்யுது..
Then what is the point in all the "ians"?

ஸோ..யாருக்கும் அவங்க அவங்க நாட்டை நினைச்சு பெருமைப்பட்டுக்கவோ, கேவலப்பட்டுக்கவோ வேண்டிய அவசியம் இல்லை!!

..அடுத்து வருவது மதம்..

ஸேம் லாஜிக்.. எதேச்சையா ஒரு இந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிறக்கவேண்டியதா போச்சு.... உடனே நானும் இந்துவாம்..
என்ன நியாயம் இது? நான் இந்துவாக இருப்பதும் வேறுமதத்தினனாய் இருப்பதும் என் தனிப்பட்ட உரிமை. இவங்களா எப்படி என் முதுகுல
இந்துன்னு சீல் குத்தலாம்? முதுகுலனா கூட பரவாயில்லை..தெரியாது ..சட்டை போட்டு மறைச்சிடலாம்.. ஆனா
நெத்தில விபூதி, குங்குமம், அப்புறம் அதென்னது..ஆங்..சந்தனம்.. ஃபர்பெக்ட்.. தேசிய கொடி கணக்கா எங்கப்பா வெச்சிவிட்டு அனுப்புவாரு..
அவருக்காக அதை ஏத்துக்குட்டேன்..அவரோட மதத்துக்காக அல்ல!! அதை ஒரு கிறுஸ்துவ டீச்சர் அழிச்சப்போ ஒரு இந்துவா எனக்கு
கோபமே வரலை.. என் தந்தையின் பாசமான பிள்ளையா எனக்கு செம கடுப்பு.

இப்படி சின்னவயசுல இருந்தே மதம் என்னை எப்பவும் பாதிக்காம தொல்லை பண்ணாம இருக்கணும்னு நினைச்சேன்.. இன்னும் நினைக்கிறேன்..
பட்..உலகம் அப்படி இல்லை.. எப்போ பாரு மதபீத்தல்கள். என் கடவுள்தான் பெருசு, உன் கடவுள் டம்மி பீசுன்னு அடிச்சுக்கறாங்க.
ஏன்.. இந்துகளுக்குள்ளயே.. மூணுகண்ணன் சிவன் பெருசா? நாலுகை நாராயணன் பெரிசான்னு இன்னும் சண்டை....
(சின்னவயசுல அம்மா மூணுகண்ணன் வரான்னு சொல்லி சோறு ஊட்டுவாங்க.. ஒருவேளை இவராத்தான் இருக்குமோ?!)

இப்படி.. மதம் சம்பந்தமா அடிச்சிக்கிறது அர்த்தமே இல்லாத ஒரு வேளை. (எனக்கு சாமி கும்பிடுவதே அர்த்தமில்லாத வேலை)
எதேச்சையா ஒரு இந்து குடும்பத்திலோ, ஒரு இஸ்லாமிய அல்லது கிருத்துவ குடும்பத்திலோ பிறந்துவிட்டதால்..
நம்மை நாமே இந்து என்றோ, முஸ்லிம் என்றோ, கிருத்துவன் என்றோ நினைத்துகொண்டால் அது முட்டாள்தனம்.

சோ.. நம்மை பற்றி எதுவும் (கடவுள் உள்பட) எதுவும் கவலைப்படவில்லை. நாம் தான் தேவையே இல்லாமல் எல்லாவற்றையும்
பற்றி கவலைப்பட்டு, நேரத்தை வீணாக்கி மனநோயாளிகளாய் திரிகிறோம்.

மதமும், நாட்டு பற்றும் போலி வேஷங்கள். ஏமாற வேண்டாம்.

கொஞ்சம் மாத்தி யோசிங்க.. நான் மனிதன்ன்னு பெருமைப்படுங்க.. உலக உயிரங்களிலேயே தன்னை தனக்குள் தேடும்
ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே.
வாழ்வை ரசித்துவாழ, நம்மால் மட்டுமே முடியும். அன்பும், அரவணைப்பும், கவிதையும், காதலும், பாட்டும், ஓவியமும்,
கலையும், நயமும், ஆடலும் பாடலுமாய்.. மட்டற்ற மகிழ்ச்சியோடு வாழும் ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே..!!

Sunday, March 13, 2011

விவேகானந்தர் புத்தகத்தை எரித்தேன்.. ஏன்?



ம்ம்ம்.. ரொம்ப வருடங்களாக அந்த புத்தகம் என் அலமாரியை அலங்கரித்து வந்தது. அதன் மீது எனக்கு ஒரு காலத்தில்
அளவுகடந்த காதலும் மதிப்பும் இருந்தது.  அந்த புத்தகத்தை படித்து முடித்திருக்கிறேன் என்று சொன்னாலே எல்லாரும்
ஆச்சரியப்படுவார்கள். கண்கள் விரியும். புருவங்கள் உயரும். எனக்கும் மகிழ்ச்சியும் கொஞ்சம் மேதாவி என்கிற அகந்தையும்
கூடும்.. அதே போல் கூடியது.

சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் ஒரு சின்ன சிந்தனை... இவ்வளவு படித்து என்ன கிழித்துவிட்டோம்? இரண்டு கொம்புகள்
முளைத்துவிட்டதா? சிறகுகள் எதும் முளைத்துவிட்டதா?
மேதாவி என்பதால் தலையில் ஒளிவட்டம் எதும் தெரிகிறதா?
என் அறிவை பாராட்டும் எல்லாரும் என் அன்பை பாராட்டியிருக்கிறார்களா?
பார்ப்பதை எல்லாம் பகுத்தாராய்ந்துகொண்டே  இருந்தால்.. ரசிப்பது எப்போது? சுவைப்பது எப்போது?
அருவியில் நின்று குளித்து கும்மாளம் போடாமல் அதன் வேகத்தை அளப்பவன் முட்டாள் தானே?
வாழ்க்கை எனும் மாபெரும் அருவி என்னை அள்ளி அணைத்து இன்பம் தரத் துடிக்கும்போது..
அதை எட்ட நின்று பகுத்தாய்ந்து என்ன புண்ணியம் கண்டேன்..?

மண்டைகனமும், மனதில் வெறுமையுமாய் வரண்டதொரு வாழ்க்கை தேவையா?
சிரிக்க தெரியாதவன் மனிதன் இல்லை என்பார்கள். நானும் சிரிப்பை தொலைத்திருந்தேன். என்னுடைய அறிவும் மூளையுமே
என் அன்பிற்கும் இதயத்திற்கும் எதிரிகளாய் மாறி நிற்பதை கண்டேன்.
கொஞ்ச நாள் இதைப்பற்றி யோசித்தபடி சுற்றி வந்தேன்.. சில வாரங்களில் பிறருக்கு அறிவுரை  கூறுதல் குறைந்தது.
இப்போது உலகம் கொஞ்சம் தெளிவாய் தெரிந்தது. அடுத்து வீணாக எனக்கு என்ன தெரியும் என்று காட்டிகொள்வதை நிறுத்தினேன்.
என்னை எவரும் எக்கேள்வியும் கேட்கதாவரை நான் எந்தவகையிலும் அறிவை வெளிப்படுத்தமாட்டேன் என்று உறுதிபூண்டேன்.
இந்த சிந்தனைகளின் உச்சகட்டமாய்.. என்னை என்னிடமிருந்தே பிரித்த எதோவொன்றை எரித்தால் என்னவென்று யோசித்தேன்.

என்னை பெரிய Intellectual Personஆக காட்டும் பொருட்களில் எதாவதை எரித்தால் என்னவென்று தோன்றியது.
கண்ணில் பட்டார் விவேகானந்தர். அவரை மதிக்கிறேன். அவரின் வார்த்தைகளின் மதிப்பும் எனக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் இப்போது காப்பாற்றப்பட வேண்டியது நா. என்னை  என் அகந்தையிலிருந்து காப்பாற்றவேண்டி இருப்பதால்..

ச்ச்ரக்க்..  தீக்குச்சி எரிந்தது. அடுத்து அவரின் புத்தகமும். மனம் அமைதியானது. பேச்சு நின்றது. அகந்தை அகன்று அமைதி வந்தது. இதை எழுதுவதற்கு காரணம். படிப்பதும், அதன்படி நடப்பதும் நல்லதுதான். அதையே பிடித்துகொண்டு..
அவர் அதை சொன்னார்..இவர் இதை சொன்னார்..கலீல் ஜிப்ரான் சொன்னார், காக்கை பாடினியார் கரைந்தார் என்று
கூறி அலைந்து அசாதரணமாக தெரிய எனக்கு துளியும் விருப்பமில்லை. சாதாரணம் போதும். அதில் நான் சௌக்கியமாய் இருந்துகொள்வேன்.

உங்ககிட்டயும் MatchBox இருக்குல்ல?

Tuesday, March 8, 2011

நில்.. கவனி... செல்..!

            

  

தினமும் சாலைகளையும் மனிதர்களையும் பார்க்கிறோம்.. போக்குவரத்து நிறுத்தங்கள்,
சிகப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகள், பிறகு மீண்டும் பயணம்.. இப்படி இருக்க..ஒரு
நாள்.. இந்த சிகப்பு, பச்சை, மஞ்சள் என விளக்குகள் எறிய.. என் மனதிலும், இவைகளை சார்ந்து ஒரு விளக்கு எரிந்தது.

நில்..

நில்.. அதாவது.. வேகம் குறை. சில நேரங்களில் ரொம்ப கடுப்பா இருப்பீங்க. இல்ல ரொம்ப டென்ஷனா குழப்பத்தோட இருப்பீங்க. இப்போ கொஞ்சம் கவனிச்சு எல்லாத்தையும் நிறுத்துங்க.
அந்த இடத்தை விட்டு வெளியே வாங்க. வானம் பாருங்க. தண்ணி குடிங்க. உங்களுக்கு பிடிச்ச பாடலை கேளுங்க. வேகத்தையும் கோபத்தையும் விட்டுட்டு நிதானமாக, அமைதியா கூலா இருங்க. இப்போ அடுத்த கட்டம்.

கவனி..

கவனி.. மனம் ஏன் இப்படி அலைபாய்கிறது? ஏன் இந்த சூறாவளி? எதனால்? எக்ஸ்க்யூஸ்மி,
எதனால் என்று யோசியுங்கள். யாரால் என்று அல்ல. அப்படி யோசிப்பதில் பயனே இல்லை. மீண்டும் வெறுப்பும் கடுப்புமே கிளம்பும். எனவே எதனால்.. உங்கள் மனதில் நீங்களே எடுத்துவைத்துகொண்ட எந்த முடிவால் இந்த அவதி? அது தேவையானதா? சூழ்நிலையை சரியாக்க என்ன செய்யலாம்.. இப்படி வரிசையாக பொறுமையாக கவனியுங்கள். வரிசைப்படுத்தி திட்டமிடுங்கள்.

செல்..

அடுத்து செல்வது..விருட்டென்று கிளம்புவதல்ல... கொஞ்சமாக.. கொஞ்சம்கொஞ்சமாக..
0... முதல்.. 10.., 10 முதல் 20.., 20 முதல் 40.. இப்படி.. போட்ட திட்டங்களை நிதானமாக
ஒன்றொன்றாய் செயல்படுத்துங்கள்.. அவசரமே வேண்டாம்.. அதிவேகமாக செயல்பாடுகள்,
உடனடி தோல்விகளில் முடியும். எனவே நிதானமாய் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.





 ************************************

இவையனைத்தும் என் சொந்த அனுபவத்தில் கண்டது. உங்கள் அனுபவங்கள் வேறுபடின் அதையும் பகிருங்கள்.
நன்றி..!!


Tuesday, February 15, 2011

தீண்டல்..!!




கண்சிமிட்டும் கணமொன்றில்
என்னை கடந்துபோகும் நேரத்தில்
தீண்டத்துடிக்கிறேன்.. உன் கன்னங்களை..

மெல்ல வந்தமரும்
மேனியெங்கும் பூவாய் நீயமர
தீண்டத்துடிக்கிறேன்.. உன் உள்ளங்கைகளை..

ஜல்ஜல் சத்தமிட்டு
என்னை ஸ்ருதியிழக்க செய்தோட..
தீண்டத்துடிக்கிறேன்.. உன் கொலுசுப்பாதங்களை..

சமையலின் சமயங்களில்..
சத்தமிடாமல் சத்தமிடும் வளையலால்..
தீண்டத்துடிக்கிறேன்.. உன் வளைகரத்தை..


குழந்தையாய் கொஞ்சம்
குழந்தையை நீ கொஞ்ச..
தீண்டத்துடிக்கிறேன் அந்த மெல்லிடையை..

என்னடி பார்க்கிறாய்
என்று கேட்க தலைகுனிவாய்..
தீண்டத்துடிக்கிறேன்.. அந்த தீக்கண்களை..

காதலோடு வந்து
காதோரம் சுவாசம் தந்து..
தீண்டத்துடிக்கிறேன்.. அந்த மணிக்கழுத்தை..

தீயே!!நான்..

தீண்டலின் தீண்டலில்
தீயாய் தீய்ந்ததில்
தீந்தமிழ் கொண்டிங்கு
தீட்டினேன் ஓர் கவிதை..!!

Sunday, February 6, 2011

மீண்டு(ம்) வந்துவிட்டேன்..சில கவிதைகளோடு!!



தொட்டு போன தென்றல்
கடந்து ஓடும் நதி
கண்முன் மறையும் சூரியன்
உதிர்ந்துவிழும் பூ
இவை எதுவும் பாதிக்கவில்லை
என்னை மறந்துசென்ற உன்னைப்போல்..!!



காத்திருக்க சொன்னாய்
பொறுமையோடு
சேர்ந்திருக்க சொன்னாய்
நட்போடு
பூத்திருக்க சொன்னாய்
சிரிப்போடு
எல்லாமுமாய் இருக்கிறேன்..
நீ என்னை மறந்துபோன பின்னும்..