Thursday, May 10, 2012

தப்பி ஓட்டம்



சரியாத்தானே இருந்துச்சு..என்ன ஆச்சு..?!

ட்ட்டப்ப்..ட்ட்டப்ப்.. மீண்டும் இரண்டுமுறை அவர் அதை இடதும் வலதுமாய் தட்டித்தட்டிப் பார்த்தார். அது வேலைநிறுத்தத்தில் இருக்கிறதா? அல்லது விருப்ப ஓய்வே பெற்றுவிட்டதா? என்று யோசித்துகொண்டே மீண்டும் தட்டி தட்டி பார்த்தார்..ம்ஹீம்..ஒன்றும் பிரயோஜனமில்லை..

அந்த மீட்டரில் முள் சரியாக நூறில் அப்படியே நின்றபடி இருந்தது. நூறுக்கு மேலும் சேர்த்திருக்க வேண்டும் போல, அந்த அளவு அது அப்படியே நூறாம் எண்ணோடு பசைபோட்டு ஒட்டிகொண்டது. ஏனோ இதை பார்த்தவுடன், காலை வாக்கிங் முடித்து வரும்பொழுது, பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அம்மாவின் கால்களை இறுக்கிப்பிடித்துகொண்டிருந்த பெண்குழந்தை நினைவுக்கு வந்தது அவருக்கு.

சரி… மற்ற மீட்டர்களை சரி பார்ப்போம் என்று மற்ற மீட்டர்களை நோக்கி நடந்தார், அந்த சுவற்றில் வரிசையாக இருந்த பல்வேறு மீட்டர்களை பொதுவாக கவனித்தார்.எல்லாமே கொஞ்சம் நகர்ந்தவண்ணமாய் தான் இருந்தது. மயிலின் பைத்தியக்காரத்தனம்- 14 சதவிகிதம், கடல் நண்டின் பைத்தியக்காரத்தனம்- 19 சதவிகிதம், கரடியின் பைத்தியக்காரத்தனம்- 21 சதவிகிதம், நரி- 23 சதவிகிதம்..

எல்லாம் சரியாகத்தான் இருந்தது.. அப்படியென்றால்…அப்படியென்றால்.. இந்த மீட்டரும் சரியாகத்தான் இருக்கவேண்டும்..சரிக்கும் மேலாக, நூறுக்கும் மேலாக அது சரியாகத்தான் இருக்கமுடியும்..அப்பொழுது இந்த மீட்டரின் எதுவும் பிரச்சனை இல்லை..

பிரச்சனை..மனிதர்களிடம்தான்..

அவர் அதிர்ந்து போனார்..இதை எப்படி சமாளிப்பது. பகல் நெருங்க நெருங்க.. இன்னும் அந்த மீட்டர் வேகமாய் துடித்துகொண்டிருந்தது.. இன்னும் நேரம் ஆக ஆக, அந்த மீட்டரின் முள் சூட்டில் சிவந்தே விட்டது.. அதிர்ச்சியில் அவரும் மீட்டரைப்போலவே துடித்துகொண்டிருந்தார்.. ஒருவாறாய் ஒரு முடிவுக்கு வந்தார்..

”இனி இங்கு இருக்கமுடியாது.. இது சாத்தியப்படாத ஒன்று, நம் இருப்பு இவர்களுக்கு எளக்காரமாகிவிட்டது, ஒருவகையில் நாம் தான் இந்த அளவு இது வளர்ந்ததற்கு காரணம்கூட. இனியும் இது தொடரக்கூடாது” என்று முடிவுக்கு வந்தார்.

உடனடியாக அவரின் உடைகளை பைக்குள் திணித்துகொண்டார்.அவரின் அறைக்கதவை சாத்துவதற்கு முன் ஒருமுறை அந்த மீட்டரை பார்த்தார், இன்னும் சிவந்து க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர் என அதிபயங்கர வேகத்தில் துடித்துகொண்டிருந்தது. மிரட்சியுடன் கதவைப்பூட்டிவிட்டு நடந்தார், காரில் ஏறினார், சில பில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள கிரகத்தை குறிப்பிட்டார். ஓய்வாக அவர் சாய்ந்து அமர, அவரைத் தூக்கிகொண்டு அந்த கார் விண்வெளிக்கு விருட்டென கிளம்பியது.


..பூமியில், ஏதோ ஒரு வீட்டு டி.வியில் அன்றிரவு..

…..வானத்தில் தீடீரென பிரகாசித்து மறைந்த பொருள்,.. மேலும் பல முக்கிய செய்திகள், விளம்பர இடைவேளைக்கு பிறகு..!!





Monday, April 23, 2012

பெண்களும் அழகியலும்..என் வருத்தமும்





..க்ரீம்கள், லோஷன்கள், ஸன்ஸ்க்ரீன்கள், பீல்-ஆஃப்கள், சோப்புகள் இப்படி அத்தனையும் விற்கிறது இந்த வியாபார உலகம்.
அதை கண்ணை மூடிகொண்டு வாங்கி பூசிகொள்கிறது இந்த பெண்களின் உலகம்(கொஞ்ச காலமாய் ஆண்களின் உலகமும்)

. ஃபேர் அண்ட் லவ்லியின் ஏழே நாளின் சிகப்பழகு பிரச்சாரம், என் வீட்டில் இருபது வருடமாய் நிரூபிக்கமுடியாமல்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யப்படும் ஒரு அறிவியல் ஆய்வு.

நான் ஒரு நாள் என் அம்மாவிடம் சொன்னேன் “மேக்கப்பில், மேற்புறத்தில் அழகாய் இருப்பது அழகே இல்லை. உள்ளிருந்து ஒரு தெளிவு உன் கண்களிலும்
முகத்திலும் ஒளிரும்பொழுது வருவதே அழகு” என்று சொல்லி புரியவைத்தேன். அன்றே அவர் அந்த பேர் அண்ட் லவ்லியை தூக்கி எறிந்துவிட்டார்.

நான் ஒன்றும் தலை சீவாதே, சுத்தமாய் இருக்காதே என்று சொல்லவில்லை. கண்டமேனிக்கு எதையாவது தடவி, பிறரைவிட நான் அழகு என்று
காட்டிகொள்ள போராடாதே என்று சொல்கிறேன். யாராவது “உன்னைவிட நான் பெரிய முட்டாள் தெரியுமா? பார் என் முட்டாள்தனத்தை” என்று பரைசாற்றுகொள்வார்களா?

இப்பொழுதைய பெண்களை கவனிக்கையில் ஒன்று நன்றாக தெரிகிறது.
தன்னை எவ்வளவு வருத்திகொள்ளவும் அவர்கள் தயார், ஆனால் யாராவது ஒருவராவது தன் அழகை ரசித்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்கிற்கு வந்துவிட்டனர் போல.
இருக்கமான சுடிதார்களும், ஜீன்ஸும், காலை, உடலை சுற்றி, இறுக்கிகொண்டிருக்கும் ஆடைகளும், ”அய்யோ கடவுளே, ஏன் இப்படி இருக்கிறார்கள்” என்று என்னை மனதிற்குள்
அலறவைக்கிறது. தன்னை சவுக்கால் அடித்துகொண்டு பணம் கேட்பார்களே சிலர், அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுவும் ஒருவகை குரூரம் தானே. அவன் சாட்டையால் அடித்துகொள்கிறான், இவள் ஆடையால் இறுக்கிகொள்கிறாள். This is Masochism.

வயதுக்கேற்ப ஆடைகள் அணியலாம் என்பது என் கருத்து. 30 வயதை கடந்தவர்கள், அதற்கேற்ற ஆடைகளை அணிவதை விடுத்து, 20 வயது பெண்களைப்போல் சுடிதாருக்குள் சிறைப்பட்டு சித்திரவதைப்படுவது எந்த விதத்தில் புத்திசாலித்தனம் என்று எனக்கு புரியவில்லை.

அன்றொரு நாள் அப்படித்தான், ஒரு முகூர்த்தத்திற்கு செல்ல வேண்டி இருந்தது, வேர்க்க விருவிருக்க பட்டு புடவை அணிந்து வந்தார், பார்க்கவே பாவமாக இருந்தது.
வெயிலில் செல்லப்போகிறோம், ஒரு நீட்டான காட்டன் புடவை அணியலாமே, அதுவுமில்லாமல், அங்கே கும்பலாக இருக்கும், அங்கே இன்னும் வியர்க்குமே என்றேன்.
நான் ஒருத்தி மட்டும் அப்படி போவதா? என்று வாதத்திற்கு வந்தாரே தவிர, என்பக்க நியாத்தை கேட்கவில்லை. சரியென்று விட்டுவிட்டேன்.

ஒரு தெளிந்த மனிதன் தன்னை நிம்மதியாக வைத்திருப்பவைகளையே தேர்ந்தெடுப்பான் என்பார்கள், தெளிவானவர்கள் என்று ஆண்களால் நினைக்கப்பட்டுகொண்டிருக்கும் பெண்கள், இப்படி மிகச்சிரிய விஷயங்களில் கூட தெளிவாய், நிம்மதியாய் இல்லாது இருப்பது வருத்தமளிக்கிறது.

பி.கு: மொத்த பெண்ணினமே இப்படி என்று சொல்லவரவில்லை,என் கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை, பெண்களை கண்டதில் எழுத தோன்றியது. எழுதுவிட்டேன்..!!

Thursday, March 29, 2012

உன்னால் மட்டும்தான் அழ/சிரிக்க முடியும்..

 
 
 
 
 
உலகை பார், உலக உயிர்களை பார், மரம், செடி, கொடி, மிருகங்கள், பறவைகள்,
பூச்சிகள் இப்படி அனைத்தையும் பார். அவைகளை வாழ்கிறோம் என்ற விழிப்புணர்வே
இல்லாது வாழ்கின்றன. அவைகள் அவைகள் தான். அவைகளால் வேறொன்றாய் மாறமுடியாது.
நிச்சயமாய் முடியாது. பழமொழிகளில் மட்டுமே பூனை புலியை பார்த்து சூடு போட்டுகொள்ளும்.
மற்றபடி, எந்த புலியும் பூனையாய் வாழ்ந்ததில்லை. எந்த குருவியும் கழுகாக மாற துடித்ததில்லை.
தான் கழுகாய் இல்லையே என்று ஏங்கியதில்லை. ஏன், தான் ஒரு குருவி என்கிற கவனம் கூட
அதற்கு இல்லை. அவை அனைத்தும், விதிக்கப்பட்ட படி மட்டுமே வாழ தகுதியுடையவை.
ஒரு சிங்கம் பிறக்கும் போதே சிங்கம் தான். ஒரு மாமர விதை, அதை விதையிலிருந்தே மாமரம் தான்.
அதை நீ பலாமரமாகவோ, தேக்காகவோ மாற்ற இயலாது. அதன் விதி, அதன் விதையிலேயே
நிர்யணிக்கப்பட்டாயிற்று. இனி அதற்கு கவலை இல்லை, ஒன்று மாமரமாய் வளரலாம், இல்லையேல் அழிந்துபோகலாம்.
இரண்டே வாய்ப்புகள் தான். மாமரம் இல்லையேல் மரணம். (மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி என்பது போல்)

ஆனால் உன்னை பார், ஒரு மனிதனாய் உன்னை நீயே கவனி, அப்போது ஒரு அதியற்புதமான விஷயம், பளிச்சென்று
உனக்கு புரிபடும். அது நீ அளவுகடந்த வாய்ப்பு கொண்டவன் என்பது. நீ உடலில் மனிதன், ஆனால் உள்ளத்தில்?
நீ யார்? நீ யார்? நீ யார்? சொல்ல தெரியவில்லை தானே. அதுதான் உன் சுதந்திரம், அந்த தடுமாற்றம் இயலாமை அல்ல.
அந்த தடுமாற்றம் உன் முன் விரிந்துகிடக்கும் அளவற்ற வாய்ப்புகளால் உண்டானது. அதை பார்த்து வாயடைத்து போவதால் தான்
உன்னிடம் இருந்து எந்த பதிலும் வருவதில்லை. எப்போது நீ யார் என்று கேட்டாலும், நீ தெளிவடைந்த நீ, உனக்குள் விரியும்
வாய்ப்புகளை பார்க்கலாம், இப்போதே நீ கடவுளும் ஆகலாம், அல்லது இப்போதே நீ மிருகத்தைவிட கீழ் நோக்கியும் செல்லலாம்.
அந்த வாய்ப்பு இங்கே உன் முன் நிச்சயமாய் இருப்பது உனக்கு தெரிவதால் தான் உன்னால் “நீ யார்” என்பதற்கு பதிலளிக்கவே முடிவதில்லை.

பொத்தாம் பொதுவாய், நான் ஆண், நான் முகமதியன், இந்து, கிறுஸ்தவன், அந்த ஜாதி, இந்த இனம் என்று சொன்னாலும்,
அந்த உள்ளிருக்கும் ஒன்று நீ இதெல்லாம் இல்லை என்று மென்மையாக சொல்லிகொண்டே தான் இருக்கிறது. அதை நீ மறைக்கலாம்,
அதை நீ மறக்கலாம். அந்த வாய்ப்பும் கூட உன் கையிலேயே இருக்கிறது. இந்த அளவற்ற சுதந்திரத்தை கவனித்தாயா?
எந்த ஒரு மரத்தாலும், மிருகத்தாலும் தன் உள்ளியல்பை மறக்கவோ, மறைக்கவோ இயலாது. எல்லா வகையிலும் மாமரம்,
மாமரமாகத்தான் மிளிரும். எல்லா வகையிலும் ஒரு மல்லிகைப்பூ மல்லிகைப்பூ வாசமே வீசும். அவைகளால் மறைக்கவோ,மறக்கவோ முடியாது.
நிச்சயமாய் முடியாது. 

ஆனால், நீ இந்த அரிய வாய்ப்பை பெற்றிருக்கிறாய், நீ மறக்கலாம், மறைக்கலாம், அல்லது நீ உன் உள்ளியல்பை முழுவதுமாய்
வெளிப்படுத்தி, இந்த பாலத்தை கடக்கலாம். பாலமா? ஆம் பாலம் தான். மனிதன் ஒரு பாலம் தான். மனித பிறவி ஒரு பாலம் தான்.
இயற்கைக்கும் இறைமைக்குமான பாலம். மிருகத்திற்கும் கடவுளுக்குமான பாலம். மனிதன் அவனின் உள்ளியல்பு படி வாழ வாழ,
அவன் இறைமையை நெருங்குகிறான். அவன் உள்ளியல்பை வெறுத்தோ,மறைத்தோ, மறந்தோ வாழும்பொழுது மிருகத்திற்கும் கீழே செல்கிறான்.
அதனால் தான் நாம் புத்தரை உயர்த்தியும், ஒரு குடிகாரனை தாழ்த்தியும் பேசுகிறோம். காரணம், குடியில் மனிதன் தான் மனிதன் என்பதையே
மறக்கிறான். அவன் “அது”வாக மாறுகிறான். ஒரு உயர்திணை அஃறிணைக்கு தள்ளப்படுகிறது. ஆனால் புத்தன், பாலத்தை கடந்துவிட்டான், அவன்
மனிதனையும் கடந்து மேலே எழுந்துவிட்டான், இனி அவன் மனிதன் என்ற சின்ன சிறைக்குள் இல்லை, அதையும் கடந்து, இறைமைக்குள் குதித்துவிட்டான்.
விழிப்புணர்வே அல்லாத நிலை குடிகாரனுடையது. விழிப்புணர்வின் உச்சகட்டம், புத்தனுடையது. கள்ளுண்டவன் நீரின் 0 டிகிரி என்றால், புத்தன் நீரின் 100 டிகிரி.

நீ ஓவியனாகலாம், கவிஞனாகலாம், கலைஞனாகலாம், அறிஞனாகலாம், அறிவியல் செய்யலாம், ஆராய்ச்சியாளனாகலாம், புத்தனாகலாம் இப்படி
உன்னுடைய சுதந்திரம் அளப்பறியது. நீ உன்னுடைய இயல்பிலிருந்து எழும் எதை செய்தாலும், அது உன்னை இன்னும் மேம்படவே வைக்கும். எனவே,
உனக்குள் ஆழ்ந்து போ, உன்னை, உன் நிஜ உன்னை கண்டுபிடி. அதுதான் நீ மற்றவை எல்லாம், மனதின் சூதாட்டம்.

நன்றி,
ரங்கன்.

Sunday, January 8, 2012

மக்களை பூமிக்கு கொண்டுவர சில வழிகள்


பொதுவாக நாம் சந்திக்கும் மக்கள் அனைவரும் எந்நேரமும் பூமியிலேயே இருப்பதில்லை..
சிலர் செவ்வாயிலும், சிலர் வெள்ளியிலும், சிலர் வியாழனிலும் இருக்கிறார்கள்..
எதோ ஒரு சிந்தனையில் எதோ இயந்திரம்போல் வேலை செய்துகொண்டிருக்கும் நம் அன்பு மக்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவருவது நம் கடமையல்லவா..அதற்குதான் சில வழிகளை யோசித்திருக்கிறேன்..

1. சாலை போக்குவரத்து அதிகாரி:
சிக்னலில் அவர் அருகே நிற்க நேர்ந்தால்..
“ஏம்பா, நானும் காலைல இருந்து பார்த்துகிட்டு இருக்கேன்.. நடுரோட்டுல நின்னு போற வர்ற பொண்ணுங்களுக்கு கைகாட்டிகிட்டு இருக்க..ஒருத்தனும் ஏன்னு கேக்க மாட்டேங்கறான்.. எந்த ஊருப்பா நீயி? பஸ்ஸ விட்டுட்டியா? காசு எதுனா வேணுமா? “ என்று நலம் விசாரிக்கலாம்.

2. நகை கடை ஊழியர்:
வேகமாக உள்ளே சென்று ஒரு “நல்ல” ஊழியராய் பார்த்து “ ரெண்டு கிலோ தங்கம், ஒரு கிலோ வெள்ளி, அரை கிலோ ப்ளாட்டினம், அப்படியே கலப்படம் பண்ண கொஞ்சம் கொசுறு செம்பு பார்சல் பண்ணுப்பா.. அப்புறம், நெக்லஸ் முப்பது, அட்டிகை இருபத்தஞ்சு, தங்க மோதிரம் ஒரு நாப்பது..அப்படியே முத்து முந்நூறு..ம்ம்..இப்போதைக்கு இவ்ளோதான்.. என்னப்பா முழிக்கிற..எழுதிக்கோப்பா..”

அப்படியே அங்கே கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் சென்று “ தம்பி, லிஸ்ட் குடுத்துட்டேன்..சாயங்காலம் சரக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாகணும்..இல்லைன்னா அப்புறம் பார்த்துக்க” என்று மிரட்டிவிட்டு வரலாம்.

3. வங்கி பணியாளர்:
வெகு நேரம் ஒரு க்யூவில் நில்லுங்கள்.. பிறகு பக்கத்து க்யூவிற்கு மாறிவிடுங்கள், பிறகு மீண்டும் அடுத்த க்யூவிற்கு மாறிகொள்ளுங்கள்..வெகு நேரம் நின்றபின் உங்கள் முறை வந்தவுடன் “5 ரூபாய்க்கு சில்லரை இருக்கா?” என்று அவசரமாய் கேளுங்கள். உங்களை அவர்கள் வாழ்க்கைக்கும் மறக்கமாட்டார்.

4. கோவில் பூசாரி:
உங்கள் பேருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அவர் வெளியே வந்ததும்.. “அய்யரே, ஒன்னுமே புரியலை.. என்னய்யா மந்திரம் படிச்சீரு.. ஒழுங்கா புரியற மாதிரி இன்னொரு முறை சொல்லும்..போங்க..”  பலமுறை அவரை விரட்டுங்கள். அல்லது.
”நீயும்தான் தினமும் சாமிகிட்ட வேண்டுற, சாமி பக்கத்துலயே இருக்க.. ஆனா என்ன புண்ணியம்? ஒரு சட்டை கூட வாங்க வழியில்லை.. என்னை பார்த்தியா? எப்பவாச்சும் தான் வரேன்..ஒரு 2 நிமிஷம் தான் நிக்கறேன்..சட்டை பார்த்தீல்ல..500 ரூபா.. அதுக்கெல்லாம் குடுப்பணை வேணும்யா..” என்று சொல்லி கடுப்பேத்தலாம்.

5. ஹாஸ்பிடஸ் ரிஷப்ஷனிஸ்ட்:
வேகமாக அவரை அணுகுங்கள், மிக சீரியஸாய்
”இந்த 302ம் ரூம்ல இருக்கற பேஷண்ட் எப்போ சாவார்னு கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா?” என்று கேட்கலாம்.

6. கிஃப்ட் ஷாப் வைத்திருப்பவர்:
நேராக உள்ளே போய் “எடுங்க..எடுங்க..டைம் ஆச்சு..”
அவர் பேந்த பேந்த முழிப்பார்.
“அலோ, கிஃப்ட எடுங்க, என் கிஃப்ட எனக்கு குடுக்க இவ்ளோ யோசிக்கிறீங்க..”
என்று அவரை முழிபிதுங்க வைக்கலாம்.

7. மீன் விற்கும் கடை:
திடீரென சத்தமாக “ஏம்பா. திமிங்கலம் ரெண்டு, டால்பின் ஒண்ணு போடுப்பா, நேரமாச்சு.. அப்படியே ஆக்டோபஸ் அரைகிலோ பார்ஸல் பண்ணிடுஎ ..அப்படியெ கொசுறா கொஞ்சம் விண்மீன் போட்டுடு” என்று சொல்லலாம்.

8. ஜெராக்ஸ் கடை:

நீங்கள் உங்கள் நண்பரையும் இதில் கூட அழைத்துகொள்ளலாம்.
”ஏம்பா, வீட்ல ஏகப்பட்ட வேலை.. ஒரே ஆளா சமாளிக்க முடியலை.. என்ன ரெண்டு காப்பி ஜெராக்ஸ் எடு, இவரு என் நண்பரு, அப்படியே இவரையும் ஒரு காப்பி ஜெராக்ஸ் போட்டுடு..எவ்ளோ ஆகும்?” என்று பவ்யமாக கேட்கலாம்.

9. திருமண தகவல் மையம்:
நேராக உள்ளே சென்று, ”எனக்கு தெரிஞ்சு பையன் ஒருத்தன் இருக்கான், செவ்வாய் கிரகத்துல மணல் அள்ளுற வேலை, நல்ல் சம்பளம், வருஷம் ஒருக்கா ஒரு பத்து நிமிஷம் டான்னு வீட்டுக்கு வந்துடுவான், நல்ல உயரம்.. ஒரு 17 அடி இருக்கும், படிப்பு கம்மிதான்.. ஆள் ஆனா பூசினாப்படி..ஒரு லாரி சைஸ் இருப்பான்.. நல்ல செவப்பா இருப்பான்.. பொண்ணு எதுனா இருக்கா?” என்று கேட்கலாம்.

10. லேடிஸ் ஹாஸ்டல்:

அங்கே மேனேஜரிடம், அறிவியல் பூர்வமான சொல்லணும்னா ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கு, ஒவ்வொரு ஆணுக்குள் ஒரு பெண் இருக்கு. இப்போ எனக்குள்ளயும் ஒரு பெண் இருக்கு, அதனால என்னை இங்கெ தங்க அனுமதிக்கணும், இல்லைன்னா இங்க இருக்குற எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கு, எனவே எல்லாரையும் உடனே வெளியேற்றியே ஆகணும். ஏன்னா இது லேடிஸ் ஹாஸ்டல்” என்று மிரட்டல் விடுக்கலாம்..

11. ஹோட்டல் சர்வர்:

டிப்ஸ் கேட்கும்பொழுது:
”முதலில் நீ நன்றாக வேகமாக நடக்க பழகவேண்டும், அப்போதுதான் கஸ்டமருக்கு உன் மீது மதிப்பு வரும். இரண்டாவது, நீ பல்விளக்காது வரவே கூடாது. உன்னால் என் நண்பர் இரண்டுமுறை மயங்கிவிழுந்துவிட்டார். மூன்றாவது, மாதமொரு தடவை எப்பாடுப்பட்டாவது குளித்துவிட வேண்டும்.. எனக்கென்னவோ உன்னால்தான் இந்த ஹோட்டலில் ஒரு கெட்ட வாடை வருகிறதென்று தோன்றுகிறது”
 என்று இப்படி நல்ல நல்ல டிப்ஸ் கொடுக்கலாம். நிச்சயம் பயன்படும்.
மேற்சொன்ன ஐடியாக்களை செய்து பார்க்கும்பொழுது, ஏச்சுக்களோ, வசவுகளோ வாங்க நேர்ந்தால் அஞ்ச வேண்டாம். ஏனெனில், உங்களுக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக பதிலளிக்க முடியாமல் இருப்பது அவர்களது பிரச்சனை. நமக்கு அவர்களை பூமிக்கு கொண்டுவந்தாயிற்று.. அவ்வளவுதான். :)

Thursday, January 5, 2012

டாக்டரை கொல்ல முடியுமா? - ஒரு செய்தி சார்ந்த சிந்தனை

இது போன்ற ஒரு முட்டாள்தனமான ஒரு கூட்டத்தை  நான் பார்த்ததே இல்லை- இதுதான் நேற்று அந்த டாக்டர் பெண்மணி ஒருவர் இறந்துவிட்டார், நடவடிக்கை  எடுக்க கோரி டாக்டர்கள் போராட்டம் என்று செய்தி வந்த போது, என் மனதில் தோன்றிய எண்ணம்.
ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்தது என்கிறீர்களா? சொல்கிறேன்.

 முதலாவதாக
டாக்டரை  யாராலும் கொல்ல முடியாது. ஏனெனில் டாக்டர் என்பது ஒரு கற்பனை பட்டம். உங்களை நல்லவர், வல்லவர் என்று சொல்வது போல (நீங்கள் எவ்வளவு மோசம் என்று அவரவர் மனசிற்கு தெரியும்..அது வேறு விஷயம்). ஒரு பட்டத்தை சுமந்து திரிந்த ஒரு பெண்ணைத்தான் யாரோ ஒருவன் கொன்றிருக்கிறானே தவிர.. டாக்டரை கொல்ல முடியாது. அது ஒரு Abstract Noun.

இரண்டாவதாக,
டாக்டரை கொல்லவேண்டும் என்று அவன் எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அவனால் கொல்லமுடியாது. கடவுளை கொல்ல முடியுமா? முடியாது. ஏனெனில் அது ஒரு மனகற்பனை, அதேதான் இங்கும். டாக்டர் என்பதும் உங்களுக்கு பிறரால் கொடுக்கப்பட்ட ஒரு கற்பனை அங்கீகாரம். அவ்வளவே.. எனவே...அந்த கொலையாளி கொன்றது ஒரு பெண்ணைத்தானே தவிர.. டாக்டரை அல்ல.

மூன்றாவதாக,
அப்படி கொன்றதற்கு அவனுக்கு எனது நன்றிகள். இப்போது இவர்கள் போராடுவதன் மூலம் நான் டாக்டருக்கே  படித்திருந்தாலும் முட்டாள்தான், சுயசிந்தனை என்பதே இல்லாமல்தான் நானும் வாழ்கிறென் என்று இத்தனைப்பேர் தங்களை தாங்களே வெளிச்சம் போட்டு காட்டிகொண்டனர்.

நான்காவதாக,
இப்போது டாக்டர்களுக்கு ஒரே சந்தோஷமாக இருக்கும். இதோ, தங்களாலும் கொஞ்சம் சமுதாயம் ஸ்தம்பிக்கத்தான் செய்கிறது. ஹைய்யா ஜாலி என்று உள்ளுக்குள் ஒரே குஷியாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று மூன்றாம்தர அரசியல்வாதிகள்(அரசியலே மூன்றாம்தரம் தான்) போல் இவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் என் மனவேதனை.

ஐந்தாவதாக,
யாரோ ஒரு அம்மையார் இறந்ததற்காக போராடுகிறேன் பேர்வழி என்று போய், இருக்கும் நோயாளிகள் இறந்துபோனால் யார் பொறுப்பு? இப்போது அந்த கொலையாளியை விட இவர்கள் கீழே  சென்றுவிட்டனர். அவன் பொறுப்பாய் அவன் கடமையை செய்துவிட்டான். கொல்வது கடமை, கொன்றாயிற்று. ஆனால் காப்பாற்றும் கடமையிலிருந்து நழுவ சந்தர்ப்பம் தேடும் இவர்களை என்ன செய்யலாம்?

ஆறாவதாக,
ஐ.சி.யூ. விற்கு மட்டும் வந்து பார்ப்போம் என்கிறார் ஒருவர். சாதாரண நோயாளிகளை, மருத்தவம் பார்த்து சரிசெய்யாதுவிட்டால், ஐ.சி.யூ. விற்கு தானே  வந்தாக வேண்டும். இதில் என்ன கருணை வள்ளல் போல் ஐ.சி.யூ. விற்கு மட்டும் வருவோம் என்பது.
ஐ.சி.யூ. வில் வைத்துவிட்டால் சிறப்பாக பில்லைத் தீட்ட முடியுமென்பதால், அங்கு மட்டும் Concession-ஆ? சரி புறநோயாளி என்ன பாவம் செய்தான்? பணம் கட்ட வழியில்லாமல், வெளியிலேயே பிணமாய் போனால், கவலை இல்லையா உங்களுக்கு?( அது இருந்தால் ஏன் போராட்டம் அது இது என்று நேரத்தை  வீணடிக்க போகிறீர்கள்?)

..ஒன்று மட்டும் சரியாக புரிகிறது..
இப்போதைய ட்ரெண்ட் போராட்டம்.. பொழுது போகவில்லையா  போராடு, பொட்டி பொட்டியாய் பணம் வேண்டுமா போராடு..
..யப்பா..முடியல..!!

பி.கு: இறந்த அந்த பெண்மணிக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.