அம்மா..ஒரே ஒரு தடவை மா..ப்ளீஸ் மா!!..
என்னடா இப்படி நச்சு பண்ற..என்ன வேணும் உனக்கு இப்போ?
கண்ணாமூச்சி ஆடணும்..மா..
இங்கயா? இந்த குடிசைல கண்ணாமூச்சி ஒண்ணுதான் குறைச்சல்…
சரி.. போ..போய் ஒளிஞ்சிக்கோ..!!
ஹையா ஜாலி..அம்மா திரும்பி நில்லு..
ம்ம்..சரிங்க துரை..!
முருகன் ஓடிப்போய் அருகில் இருந்த மரப்பலகை பின்னால் ஒளிந்துகொண்டான்.
முருகா..எங்கடா போய்ட..அச்சச்சோ..முருகனை காணலையே..டேய் திருட்டுபயலே..எங்கடா போய்ட..பொய்யாக தேடினாள் கண்ணம்மா.
களுக்கென்று வெட்கத்தோடு சிரிப்பு வந்தது முருகனுக்கு..
அம்மா நான் இங்கே இருக்கேன் என்று எழுந்து நின்றான்..
அடப்பாவி..அங்க போய் ஒளிஞ்சிகிட்டியா..கில்லாடிடா நீ..
ஹப்பா..இவனுக்கு எவ்வளவு சந்தோஷம்..இவளுக்குள்ளும் மகிழ்ச்சி தொற்றிகொண்டது. அணைத்துகொண்டாள் மகனை.
கண்ணம்மா..!! ஓங்கி ஒலித்தது ஒரு ஆண் குரல்.
சிடுசிடுப்பான முகம். கோபப் பார்வை. கலைந்த தலை. கசங்கிய சட்டை.
குடிசைக்குள்ளே நுழைந்தான் ராமசாமி.
வாங்க..!! காப்பி போடவா?
ம்கும்..இந்த ஊருல ஒரு நாய் என்னை மதிக்கிறதில்லை..காப்பி ஒன்னு தான் குறைச்சல்…போட்டு தொல போ..!!
சரிங்க..!..சில நிமிடங்களில் காப்பியோடு வந்தாள்.
அப்பா..ஆசையாய் கட்டிகொள்ள வந்தான் முருகன். கைகளை தட்டி விட்டு நாற்காலியில் அமர்ந்தான்.
என்னடா? என்ன வந்துச்சு உன் அப்பனுக்கு..? சொல்லு
பா.. கண்ணாமூச்சி ஆடலாமா பா..?
டேய்..அரைஞ்சி பல்லை எல்லாம் கழட்டிடுவேன்..இந்த குடிசைல கண்ணாமூச்சிதான் குறைச்சல்.. போடா போய் படிக்கிற வேலைய பாரு..
காப்பியோடு வந்த கண்ணம்மா முருகன் முகம் வாடுவதை கவனித்தாள்.
ஏங்க ஆசையா கேக்குறான்..ஒரு தடவ தானே..
ஏய் யாருடி இவ... சரிடா.. போ..போய் ஒளி..
ஹைய்யா..மீண்டும் அதே மரப்பலகை அருகில் ஒளிந்துகொண்டான்.
என்ன கோபமோ.. நேராக அவனை இழுத்து வந்து நடுகூடத்தில் போட்டு ஒரு அறை அறைந்தான்.ராமசாமி.
கலங்கியபடி அம்மாவிடம் சேர்ந்துகொண்டான் முருகன்.
ஏண்டா..அந்த பலகை பக்கம் போகாதேன்னு சொல்லி இருக்கேன்ல..விழுந்தா எவன் செலவுக்கு அழுவறதாம்?
ஸாரிப்பா..இனிமே போகலை..!! கண்ணில் நீர் பெருகியது.
வாசல் அருகில் அமர்ந்துகொண்டான்.
ஏங்க அவனை இப்படி வையறீங்க..பாவம் அவன்..!!
ஏய்..ஏண்டி.. நானே கம்பெனிக்காரனுங்க பண்ண கூத்துல கடுப்பா இருக்கேன்..இவன் வேற..
இவன் கம்பெனி கதையை சொல்ல..அவள் வீட்டு கதைகளை சொல்ல..
சில மணி நேரங்கள் உருண்டது.
ஆமா..எங்க முருகனை காணோம்? முருகா..!!..
தேடினார்கள்..தேடிக்கொண்டே இருந்தார்கள்..
காலையில் தான் கண்டுபிடித்தினர்..
முருகன் அந்த ஊர் கோவில் குளத்து நீரில் ஒளிந்திருப்பதை..அவன் அதில் அதுவாக மிதந்த போது..!!
