Friday, June 3, 2011

எழுந்திரு, விழித்துக்கொள்.. கொண்டாடு!!




கண்ணை திறந்துகொண்டிருந்தால் மட்டும் ஒருவர் தூங்கவில்லை என்று அர்த்தமில்லை- பழமொழி

காலையில் வாக்கிங் போகிறீர்கள்.

மெதுவாக பாதங்கள் தரையில் படுகிறது. காற்று மெல்ல மேனியெங்கும் வீசுகிறது.
இன்றைய நாளில் முதல் பூவாய் சூரியன் உங்களை பார்த்து புன்னகைக்கிறது. வாழ்வு இன்று உங்களை மீண்டும்
உயிர்த்தெழ வைத்திருக்கிறது. நேற்றைய குப்பைகள் களைந்து சுத்தமாய் பரிசுத்தமாய் இருக்கிறீர்கள். மனம் தெளிவாய்
இறைவன் கருவறையாய் தெளிந்து நிற்கிறது. பூக்கள் வரவேற்கிறது. மரங்கள் உங்கள் வரவை கொண்டாடுகிறது.
இப்படி தினமும் தினமும் உங்கள் வாழ்வு திருவிழாவாய் திகழ்கிறது.

ஆனால்..

அது உங்களுக்கு தெரிவதே இல்லை..ஹாஹாஹா!! காரணம்.. கண் திறந்தும் தூக்கத்திலேயே காலம் செல்வதால்.
இதோ இந்த பதிவை படிக்கும்போது கூட உங்களின் குறட்டை சத்தத்தை என்னால் கேட்கமுடிகிறது. என்ன செய்ய..
நீங்கள் தூக்கத்தில் இருக்கும் வரைதான் இந்த சமுதாயம்.. நீங்கள் தூங்கும்வரை தான் உங்கள் சின்ன சின்ன கவலைகள்.
நீங்கள் தூங்கும் வரை தான் உங்களுக்கு துக்கமான ஒரு வாழ்க்கை. நீங்கள் தூங்கும்வரை தான் உங்கள் வாழ்க்கை விதியின்
கையில்.


இப்போது விவேகானந்தர் சொன்னதை கொஞ்சம் மாற்றி சொல்கிறேன். எழுந்திருங்கள்.. போதும் உறக்கம். உங்கள் கனவுகளுக்காக
வாழ்க்கை இங்கில்லை. உங்கள் சுயத்தின் முடிவுக்கு மட்டுமே இயற்கை வளையும். உங்களின் மனமென்னும் ஓட்டைபாத்திரத்தின்
தாகத்திற்கு வாழ்வு வளையாது. வளைக்க முயல்வதில் வீணாவது உங்கள் வாழ்க்கைதான்.

விழித்துகொள்ளுங்கள். உங்களுக்கு தாலாட்டு தேவை இல்லை. அலாரங்களே தேவை. தவறி தூங்கிவிடும் ஒவ்வொரு கணமும்
அடித்து எழுப்ப எப்போதும் உங்களோடு ஒரு அலாரத்தை வைத்துக்கொள்ளுங்கள். மனம் உங்களை எப்போதும் தூங்கவைக்கவே முயற்சிக்கும்.அப்பொதுதான் உங்கள் வீட்டில் திருடி.. தன்னை பணக்காரனாய் காட்டிகொள்ளமுடியும். போதும் உங்கள் திருடனை அனுமதித்தது. ஏற்கனவே
பாதி சொத்தை கொள்ளையடித்துவிட்டான். இன்னும் நீங்கள் படுக்கையில் புரண்டது போதும். விழித்துகொள்ளுங்கள். அவனை வெளியேற்றுங்கள்.


கொண்டாடுங்கள்..!! இங்கே போராட்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை..!! விழித்துக்கொள்ளாதவரை போரும் உண்டு..போராட்டமும் உண்டு.
விழித்துகொண்டபின் கொண்டாட்டம் தான். துக்கத்திற்குதான் நீங்கள் பெரிதும் முயற்சிகள் செய்யவேண்டும். மகிழ்ச்சி என்பது உங்கள்
அடிப்படை இயல்பு. பிறக்கும் போது நீங்கள் அழுதது துக்கத்தால் அல்ல..மகிழ்ச்சியால்.. ஆனந்தில் விட்ட கண்ணீர் அது. உன் தந்தையும் தாயும்
உங்களை முதலில் கண்டதும் அழுதார்களா என்ன? பூரித்துபோனார்கள்...மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். கொண்டாட்டமும் மகிழ்ச்சியுமே உங்கள்
சுயம். அதுவே வாழ்வை வாழச்சொல்லும் சக்தி.

தூக்கம் போதும்... வாழ்க்கை கணத்திற்கு கணம் நழுவுகிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு இல்லை. இன்றே கடைசி..இக்கணமே கடைசி..

வெற்று கனவுகளுக்காக அழுதது போதும்.. விழிப்பில் வாழுங்கள்.. எழுந்திருங்கள்..விழித்துகொள்ளுங்கள்..கொண்டாடுங்கள்..!!

3 comments:

Unknown said...

ம் நான் தூங்கிட்டேன்
அப்பரம் வந்து கமெண்ட் போடறேன்

Ungalranga said...

@siva,

அட எழுந்திருங்க பாஸ்..போதும் தூங்கினது..!!

இராஜராஜேஸ்வரி said...

விழித்துக்கொள்ளாதவரை போரும் உண்டு..போராட்டமும் உண்டு.
விழித்துகொண்டபின் கொண்டாட்டம் தான். //

அருமையான மனம் நிறைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.