Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, May 15, 2014

கனவுகளில் வாழ்க்கை






கனவுகளை என்னால் வெறுமனே கனவுகள் என்று ஒதுக்க முடியவில்லை, ஏனோ கனவுகள் என்னை மிகவும் லைவ்லியாக உணரவைக்கின்றன, அதுமட்டுமல்லாது ஒரு வேளை கனவுகளும் ஒரு சின்ன வாழ்க்கையாக இருக்குமோ என்று தோன்றுகிறது, ஒவ்வொரு கனவின் முடிவிலும் நான் இறக்கிறேன், மீண்டும் இந்த உடலின் வாழ்வை அனுபவிக்க வந்துவிடுகிறேன் என்று சொல்லத் தோன்றுகிறது. கனவுகளைப் பற்றிய ஆய்வுகள் ஏற்கனவே நிறைய நடந்திருந்தாலும், அவைகளினூடே உள்ள ஒரு சுதந்திரத்தை நிஜவாழ்வில் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அங்கே கட்டுகளற்ற கற்பனை வெளியில் பயணித்துவிட்டு, மீண்டும் உடல் சிறைக்குள் வருவது என்பது எனக்கு தினசரி எரிச்சலாக இருந்தது, இப்பொழுது பழகிவிட்டது. பிறப்பின் பொழுது என்னுடைய அழுகைக்கான காரணமும் இதுவாகத்தான் இருக்க முடியும், இந்த சிறைக்குள் வந்து சிக்கிகொள்கிறோமே என்று (ஹாஹாஹா!!). ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை, கனவோ அல்லது உடல் வாழ்வோ, விழிப்புணர்வின் நிலை எப்பொழுதும் தூயதாய் இருக்கிறது, அதன் முன் உடல் வாழ்க்கையோ கனவோ, எது நிகழ்ந்த போதும் அது, அதாவது என் நிஜம், அசையாது நிற்கிறது. அது அப்படித்தானே இருக்கும். 

Monday, April 23, 2012

பெண்களும் அழகியலும்..என் வருத்தமும்





..க்ரீம்கள், லோஷன்கள், ஸன்ஸ்க்ரீன்கள், பீல்-ஆஃப்கள், சோப்புகள் இப்படி அத்தனையும் விற்கிறது இந்த வியாபார உலகம்.
அதை கண்ணை மூடிகொண்டு வாங்கி பூசிகொள்கிறது இந்த பெண்களின் உலகம்(கொஞ்ச காலமாய் ஆண்களின் உலகமும்)

. ஃபேர் அண்ட் லவ்லியின் ஏழே நாளின் சிகப்பழகு பிரச்சாரம், என் வீட்டில் இருபது வருடமாய் நிரூபிக்கமுடியாமல்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யப்படும் ஒரு அறிவியல் ஆய்வு.

நான் ஒரு நாள் என் அம்மாவிடம் சொன்னேன் “மேக்கப்பில், மேற்புறத்தில் அழகாய் இருப்பது அழகே இல்லை. உள்ளிருந்து ஒரு தெளிவு உன் கண்களிலும்
முகத்திலும் ஒளிரும்பொழுது வருவதே அழகு” என்று சொல்லி புரியவைத்தேன். அன்றே அவர் அந்த பேர் அண்ட் லவ்லியை தூக்கி எறிந்துவிட்டார்.

நான் ஒன்றும் தலை சீவாதே, சுத்தமாய் இருக்காதே என்று சொல்லவில்லை. கண்டமேனிக்கு எதையாவது தடவி, பிறரைவிட நான் அழகு என்று
காட்டிகொள்ள போராடாதே என்று சொல்கிறேன். யாராவது “உன்னைவிட நான் பெரிய முட்டாள் தெரியுமா? பார் என் முட்டாள்தனத்தை” என்று பரைசாற்றுகொள்வார்களா?

இப்பொழுதைய பெண்களை கவனிக்கையில் ஒன்று நன்றாக தெரிகிறது.
தன்னை எவ்வளவு வருத்திகொள்ளவும் அவர்கள் தயார், ஆனால் யாராவது ஒருவராவது தன் அழகை ரசித்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்கிற்கு வந்துவிட்டனர் போல.
இருக்கமான சுடிதார்களும், ஜீன்ஸும், காலை, உடலை சுற்றி, இறுக்கிகொண்டிருக்கும் ஆடைகளும், ”அய்யோ கடவுளே, ஏன் இப்படி இருக்கிறார்கள்” என்று என்னை மனதிற்குள்
அலறவைக்கிறது. தன்னை சவுக்கால் அடித்துகொண்டு பணம் கேட்பார்களே சிலர், அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுவும் ஒருவகை குரூரம் தானே. அவன் சாட்டையால் அடித்துகொள்கிறான், இவள் ஆடையால் இறுக்கிகொள்கிறாள். This is Masochism.

வயதுக்கேற்ப ஆடைகள் அணியலாம் என்பது என் கருத்து. 30 வயதை கடந்தவர்கள், அதற்கேற்ற ஆடைகளை அணிவதை விடுத்து, 20 வயது பெண்களைப்போல் சுடிதாருக்குள் சிறைப்பட்டு சித்திரவதைப்படுவது எந்த விதத்தில் புத்திசாலித்தனம் என்று எனக்கு புரியவில்லை.

அன்றொரு நாள் அப்படித்தான், ஒரு முகூர்த்தத்திற்கு செல்ல வேண்டி இருந்தது, வேர்க்க விருவிருக்க பட்டு புடவை அணிந்து வந்தார், பார்க்கவே பாவமாக இருந்தது.
வெயிலில் செல்லப்போகிறோம், ஒரு நீட்டான காட்டன் புடவை அணியலாமே, அதுவுமில்லாமல், அங்கே கும்பலாக இருக்கும், அங்கே இன்னும் வியர்க்குமே என்றேன்.
நான் ஒருத்தி மட்டும் அப்படி போவதா? என்று வாதத்திற்கு வந்தாரே தவிர, என்பக்க நியாத்தை கேட்கவில்லை. சரியென்று விட்டுவிட்டேன்.

ஒரு தெளிந்த மனிதன் தன்னை நிம்மதியாக வைத்திருப்பவைகளையே தேர்ந்தெடுப்பான் என்பார்கள், தெளிவானவர்கள் என்று ஆண்களால் நினைக்கப்பட்டுகொண்டிருக்கும் பெண்கள், இப்படி மிகச்சிரிய விஷயங்களில் கூட தெளிவாய், நிம்மதியாய் இல்லாது இருப்பது வருத்தமளிக்கிறது.

பி.கு: மொத்த பெண்ணினமே இப்படி என்று சொல்லவரவில்லை,என் கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை, பெண்களை கண்டதில் எழுத தோன்றியது. எழுதுவிட்டேன்..!!

Friday, December 16, 2011

சுய முன்னேற்ற குப்பைகள்..


த்தனையோ வருடங்களாக நானும் சுயமுன்னேற்ற நூல்களை படித்தவன் தான். ஆனால்..இதற்கு மேலும் என்னால் இந்த குப்பைகளை
சகித்துகொள்ள முடியாது.

காரணம். சுய முன்னேற்றம் என்பதே ஒரு தவறான வார்த்தை. நாம் நம்மை மதிக்காததால் வெளியான வார்த்தை. நாம் நம்மை இன்னும் முழுதாய்
தெரிந்துகொள்ளாததால் வெளியான வார்த்தை இது. இந்த வார்த்தையின் நிஜமான சமுதாய அர்த்தம் : "பிறரோடு ஒப்பிட்டு பார்த்து வருத்தப்படு" என்பதே.

இதற்கு மேலும் பொருத்துக்கொள்ள முடியாது. நீங்கள் இனியும் இந்த சுயமுன்னேற்ற குப்பைகளில் சிக்கி சின்னாபின்ன படாதீர்கள். அது நரகம்... வெளியே வரவே முடியாத நரகம்.
எப்போது நீங்கள் ஒப்பிட ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் உங்களை அவமானப்படுத்திகொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் தாழ்வு மனப்பான்மையை நீங்கள் ஒப்புகொண்டுவிட்டீர்கள்
என்றே அர்த்தம். என்னுடைய தாழ்வு மனப்பான்மை சம்பந்தமான பதிவுகளின் அடிப்படை சாரமே.. தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு மாயை. அது
பிறரால் உங்களுக்கு உருவாக்கப்பட்டதே ஒழிய..நீங்கள் உங்களையே வெறுப்பது முடியாத காரியம். ஆனால் நாம் எப்படியோ அதனோடு ஒத்துபோய்விட்டோம். ஒரு தேவையே இல்லாத மனநிலையோடு
நாம் ஒத்துப்போய்விட்டோம். அதனால் நாம் இழந்தது,

நிதானத்தை,
எப்படி இழந்தீர்கள்? ஓடும் கூட்டத்தோடு ஓடவே உங்களுக்கு நேரம் சரியாக இருந்தது. ஓட ஓட தூரம் குறையவில்லை. ஆனால் வேகமெடுக்கவேண்டுமென்ற வெறியில் எத்தனையோ மனிதர்களின் கழுத்தில் மிதித்தீர்கள்..
அவர்களின் வேதனையிலும், கண்ணீரிலும் உங்கள் மாளிகைகள் வளர்ந்தன. நிதானித்திருந்தால்..நாம் மதிக்கவேண்டியது பணத்தை அல்ல, நல்ல மனிதர்களை என்று புரிந்திருக்கும்.

தெளிவை,
நம்முடைய குறிக்கோள்கள் எல்லாமே நம்மை நாமே மயக்கிகொள்ள பயன்படுத்தும் போதைவஸ்துக்கள் தான். அப்போதுதான் நாமும் செயல்பட்டுகொண்டே இருக்கிறோம் என்று நமக்கு ஒரு திருப்தி இருக்கும்.
இந்த விஷயத்தை எங்காவது பார்த்திருப்பீர்கள். அதாவது ஒரு வட்ட ஏணியில் ஒரு எலியை ஓடவிடுவார்கள்..அதன் முன்னால் இருக்கும் வெண்ணெய்கட்டிக்காக அது அப்படி ஓடும்..தன் முழு சக்தியையும் செலுத்தும்.
ஆனால் இறுதிவரை அதற்கு அது கிடைக்கப்போவதில்லை. அது வெறும் மாயை என்பது அதற்கு புரியப்போவதில்லை. நாமும் இப்படித்தான் சிக்கிகொண்டோம். நம் குறிக்கோள்கள் அத்தனையுமே அந்த மாய வெண்ணெய்கட்டிப்போல்..
ஒரு சிலரின் சுயநலத்திற்காக நீங்கள் அந்த எலிகளாய், வட்ட ஏணிகளுக்குள் ஓடி ஓடி உயிர்விடுவீர்கள். இது தேவையா? ஏணியை உடைத்துவிட்டு எழுந்துவாருங்கள்.

அமைதியை,
உலகத்திலேயே அமைதியான மனிதன் யார் தெரியுமா? தன்னை தானே எவன் எந்தவகையிலும் சித்திரவதை செய்துகொள்ளாது ஒருவன் இருந்தால், அவன் தான் இந்த உலகில் அமைதியான மனிதன்.
உங்களால், சொல்லமுடியுமா? நீங்கள் அமைதியான மனிதரென்று?

தன்னைத்தானே பார்த்து அறிந்துகொள்ளும் தன்மையை,
ஊரிலிருக்கும் சுயமுன்னேற்ற சொக்கர்களின் பேச்சில் மயங்கியே வாழ்வை ஓட்டிகொண்டிருந்தால், நீங்கள் எப்போது உங்களின் பேச்சை கேட்பது?

சுயமதிப்பை,
இரண்டாவது பேராவின் முதல் வரியை படியுங்களேன். ம்ம்.. இப்போது நம்மை நாம் மதித்திருந்தால், நம் திறமைகளை, நம் கற்பனைத்திறனை, நம் சக்தியை நாம் மதித்திருந்தால்,நாம் இப்படி அடுத்தவனின் கைப்பாவையாக ஆடவேண்டிய
சூழ்நிலை உருவாகி இருக்காது. இனியேனும் உங்களை நீங்கள் மதிக்க பழகுங்கள்.

அன்பை,
அன்புதான் நீங்கள்..நீங்கள் தான் அன்பு. அது தனியே வெளியிருந்து வருவது இல்லை. நீங்கள் முதலில் உங்களிடம், முதலில் உங்கள் உடலிடம் அன்பாய் இருங்கள்.. பிறகு உங்கள் உணர்வுகளுக்கு அன்பாய் இருங்கள். பிறகு பாருங்கள்..உங்களிடம் பொங்கும் அன்பை
அள்ளிப்பருக ஆயிரம் பேர் கூடிவிடுவர்..!!

மகிழ்ச்சியை,
அன்பென்று ஒன்று வந்துவிட்டால், மகிழ்ச்சி என்பதும் வந்தே தீரும். அது அன்பின் அடுத்த நிலை.

நட்புணர்வை,
மகிழ்ச்சியின் வழியில் பகிர்தல் துவங்கும். நீங்கள் மகிழ்ச்சியை, அன்பை, எதாவது ஒருவகையில் சகமனிதருக்கு கொடுக்கும்போது நட்புணர்வே அதன் முதல் சாத்தியம். பிறகென்ன..தினம் தினம்..நண்பர்கள்..
அமைதியான, தெளிவானதொரு வாழ்க்கை.

Monday, October 10, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு - 4


இன்று நான் பார்க்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமையை என்னால் கவனிக்க முடிகிறது. அதுதான் ”பிறரோடு தன்னை ஒப்பிட்டு வருந்துதல்”.

அவரை போல் தான் இல்லையே.. அந்த நடிகனைப்போல் எனக்கு கட்டுடல் இல்லையே..அந்த நடிகைப்போல் நான் சிகப்பாக, ஒல்லியாக இல்லையே.. அந்த எதிர்வீட்டுக்காரரைப் போல் தன்னால் ஒரு கார் வாங்க முடியவில்லையே..அந்த பெண்மணிபோல் உயர்ந்த பதவிகளில் இருந்துகொண்டு பிறரை ஆள நமக்கொரு வாய்ப்பில்லையே.. என் பிள்ளைகள் அவர்களைப்போல் அறிவுஜீவிகளாக இல்லையே..இப்படி எதற்கெடுத்தாலும் பிறரோடு நம்மை ஒப்புநோக்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது.

எப்படி வந்தது?

பள்ளியில் நீங்கள் படிக்கும்போது இந்த Comparision உங்களுக்கு போதிக்கப்படுகிறது. அதாவது நீங்கள் உங்களைவிட சிறப்பாக படிக்கும் மாணவரோடு எப்போதும் உங்களை ஒப்பிட்டுப்பார்த்துகொள்ள முதலில் உங்களுக்கு சொல்லித்தரப்படுகிறது. இப்படி செய்வதால், உங்களை நீங்களே காயப்படுத்திகொண்டு, அதாவது மாடு தன்னைத்தானே சவுக்கால் அடித்துகொண்டு வேகமாய் ஓடுவதுபோல்.. நீங்கள் உங்களை காயப்படுத்திகொண்டு மேலும் நன்றாய் படிக்க முயற்சி செய்கிறீர்கள். இப்படி கொஞ்சம் மேலே வந்ததும்..இன்னும் மேலே இருப்பவனோடு கம்பேர் செய்கிறீர்கள். பத்தாவது, பன்னிரெண்டாவது  வரும்போது.. காயங்களே உங்கள் உடம்பாய், கம்பேர் செய்வதொன்றே உங்கள் முழுநேர வேலையாகிவிடுகிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் மனம் கம்பேரிங் இயந்திரமாய் மாறிவிடுகிறது. உங்களை விட மெத்த படிப்பவன் 4 நண்பர்கள் வைத்திருந்தால், நீங்கள் 6 நண்பர்களை சேர்த்துகொள்வீர்கள். அவனை முந்தவே உங்கள் முழுநேரப்பொழுதும் செலவழிந்திருக்கும். இப்படி.. முப்பொழுதும் முழுமூச்சாய் போட்டி மனப்பான்மையில் வாழ நீங்கள் பழக்கப்பட்டுவிட்டீர்கள்.

இப்போது கல்லூரி வந்ததும், காதல் மலர்கிறது. அவன் அவளை காதலிக்கிறானே..நம்மை ஒருத்தியும் பார்ப்பதில்லையே..இவளுக்கு இவ்வளவு ஆண் நண்பர்கள் இருக்கிறார்களே..நம்மை ஒருவன்க்கூட பார்ப்பதில்லையே.. அவள் அவ்வளவு அழகாய் இருக்கிறாளே நாமில்லையே.. என்று..மீண்டும் மீண்டும் கம்பேரிங் குழியில் விழுகிறோம். தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறோம்.

சரி.. பிறகு திருமணம்.. அங்கேயும் நகை, சீர்செய்வது, என்று மீண்டும் ஒரு கூட்டம் நம்மை கம்பேர் செய்து கேலி செய்கிறது. அல்லது மெச்சுகிறது. அடுத்து குழந்தை பேறு. அங்கேயும், அவள் உடனே பெற்றுவிட்டாள், நீ ஏன் இன்னும் இழுத்தடிக்கிறாய் என்று கம்பேர் செய்கிறது. அடுத்து நம் பிள்ளை படிப்பு முதல், நம் செல்வ செழிப்புகள் வரை அந்த கூட்டம் நம்மையும், நாம் அந்த கூட்டத்தையும் பார்த்து கம்பேர் செய்தபடியே வாழ்க்கையை வீணடிக்கிறோம்.

ஒருநாளாவது, அந்த இளைஞன் 20லேயே இறந்துவிட்டாரே.. நாம் இன்னும் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று யாரும் கம்பேர் செய்ததில்லை. ஏன்? அதையும் முயன்று பாருங்களேன்.. நாட்டில் ஜனத்தொகையாவது குறையும்.

சரி இதற்கு தீர்வு என்ன?

முதலில் கம்பேரிஸனால் பொருள் சேருமே தவிர நிம்மதி சேராது என்பதை தெளிவாய் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் உழைத்து சேர்த்ததுதான் பொருளே தவிர, பிறரை பார்த்து, நீங்கள் சேர்த்தது உங்கள் பொருள் இல்லை அது அவர்களின் பொருள்.. காரணம் அவர்கள்தானே உங்களை வாங்க ஊக்கப்படுத்தியது. எனவே மனநிம்மதி என்பது பொருள் சேர்ப்பதில் இல்லை..நல்ல எண்ணங்களை, நல்ல சுபாவங்களை, நல்ல மனிதர்களை சேர்ப்பதில்தான் இருக்கிறது...இதை புரிந்துகொண்டாலே..இதை வாழ்வில் கொண்டுவர துவங்கினாலே போதும்..வாழ்வு நிறைவு பெறும்..!!

Friday, August 26, 2011

உனக்குள் ஒரு சப்தம்


அடிப்படையில் மனிதர்கள் இரண்டுவகை

ஒன்று: பிறரின் சப்தங்களுக்காக வாழ்பவர்கள்,

இரண்டு:தன்னுள் எழும் சப்தங்களைகொண்டு வாழ்பவர்கள்.

பிறரின் சப்தங்களுக்காக என்றால், அதாவது, நீங்கள் திறமைசாலி, நீங்கள் பெரிய மேதை, நீங்கள் எங்கள் நிறுவனித்தின் தூண், நிலைத்தாங்கி, இடிதாங்கி..இப்படி பிறரின் புகழ்ச்சிக்கும், பாராட்டுக்கும், பாராட்டு தரும் மயக்கத்திற்குமே ஏங்கி ஏங்கி, தன்னுடைய உழைப்பை வாரி இரைக்கும் நபர்கள், இவர்களால் உலகில், உலகுக்காக சிறப்பாய் வாழமுடியுமே தவிர, தன்னுள் ஆழ்ந்து சென்று தனக்கானதை தேடி செய்ய இயலாது.
இவர்களால் ஒரு நாளும் ஓய்வாய் அமர்தல் முடியாது. காரணம், இவர்கள் இயந்திரமானவர்கள். நான் பழி சொல்லவில்லை. அவர்களை அறியாமல் அவர்களை அவர்களே அப்படி செய்துகொண்டார்கள். I feel sorry for those people. அப்படி மெல்ல மெல்ல தன்னை இயந்திரமாய் மாற்றிகொண்டு, எதோ ஒரு மனிதனின் என்றோ கண்ட கனவை நினைவாக போராடிகொண்டிருக்கிறார்கள். இப்போது நாம் வாழ்க்கை இயந்திரதனமாய்
மாறிவிட்டதாய் புலம்புவதற்கு காரணம் இவர்களை போன்றோர் தான். இவர்களால் தான் வாழ்க்கை ஒரு வெறித்தன்மையும், போட்டித்தனும், போலித்தனமுமாய் மாறி நிற்கிறது. நான் சொல்வதை செய், இல்லையேல் ஓடிவிடு என்பது இவர்கள் கொளகை. இயந்திரத்தனமான, அன்பில்லாத, நிம்மதியில்லாத இவர்களின் தலைமையின் கீழ் 98% சதவிகத உலகம் சிக்கி சின்னப்பட்டுகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா? இவர்களிடம் இருந்து உலகை யார் காப்பாற்றுவது என்கிறீர்களா?


இப்போது இரண்டாவது வகை ஆட்கள், அதாவது, தன்னுள் எழும் சப்தங்களுக்காக வாழ்பவர்கள்.
தன்னுள் எழும் சப்தம் என்றதும், உடனே, நம் மனதின் வெற்று கூச்சல்களையே, வெறித்தன கூச்சல்களையே நாம் நம்முடைய சப்தம் என்று நினைத்திகொண்டிருக்கும். இல்லை. இல்லவே இல்லை. அது மனம். இயந்திரத்தனமானவர்கள் உங்களுக்குள் ஏற்படுத்திய நோய் மனம். அது எப்போதும் இயந்திரத்தனமானவர்களுக்கு உதவுமே தவிர உங்களுக்கு உதவாது. நீங்கள் அந்த மனமும் கிடையாது. நீங்கள் ஆன்மா. பெயரில்லா, மதமில்லா, சாதியில்லா ஒரு பிரபஞ்ச குழந்தை. உங்கள் தாய் பிரபஞ்சம், தந்தை வானம். நீங்கள் யாரென்று தெரிந்துகொள்ள முயல்வதே உங்கள் சப்தங்களை நீங்கள் கேட்டு உணரும் கணம். உங்கள் ஆன்மாவின் சப்தம், உங்கள் இதயத்தின் மூலமே கேட்கும். ஆம். உங்களில் இதயம், ஆன்மாவின் உதடுகள். இதயத்தை கவனியுங்கள்.
உங்களை திருப்திபடுத்த இதயத்தால் தான் முடியும். அதனால்தான் காதலின் சின்னம் இதயம். அன்பின் சின்னம் இதயம். இதயத்தின் படி வாழ மாபெரும் தைரியம் வேண்டும். அதுவும் இதயத்திலேயே இருக்கிறது. அப்படி வாழ்ந்தவர்கள் தான் பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்து சென்றனர். அவர்களாலே உலகம் உய்கிறது.
அவர்களே, அந்த பிரபஞ்ச குழந்தைகளே, புத்தனாய், இயேசுவாய், கிருஷ்ணராய், ஐன்ஸ்டீனாய், ரமணராய், ஷெல்டனாய், ஷேக்ஸ்பியராய், பாரதியாய், பட்டினத்தாராய், விவேகானந்தராய், இப்படி நம்மால் பைத்தியமாய் பார்க்கப்பட்ட பலராய் நம்மிடையே வந்து, நம் இயந்திரத்தனத்திலிருந்து இதயத்தில் வாழ நமக்கு வழி செய்தவர்கள். இன்னும் காலமிருக்கிறது. நீங்கள் இதயம் திறந்து நிறைவாய் வாழப்போகிறீர்களா? இல்லை  ஆட்டுகூட்டத்தில் ஆடாய், வாழாத வாழ்க்கைக்காக அழுதபடி இறக்கப்போகிறீர்களா? இல்லை சிங்கமாய், கம்பீரமாய், தனித்தன்மையோடு வாழ்ந்தோம் என்கிற நிறைவோடு புன்னகையோடு வாழ்வை முடிக்கப்போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்..

நன்றி..!!

Friday, June 3, 2011

எழுந்திரு, விழித்துக்கொள்.. கொண்டாடு!!




கண்ணை திறந்துகொண்டிருந்தால் மட்டும் ஒருவர் தூங்கவில்லை என்று அர்த்தமில்லை- பழமொழி

காலையில் வாக்கிங் போகிறீர்கள்.

மெதுவாக பாதங்கள் தரையில் படுகிறது. காற்று மெல்ல மேனியெங்கும் வீசுகிறது.
இன்றைய நாளில் முதல் பூவாய் சூரியன் உங்களை பார்த்து புன்னகைக்கிறது. வாழ்வு இன்று உங்களை மீண்டும்
உயிர்த்தெழ வைத்திருக்கிறது. நேற்றைய குப்பைகள் களைந்து சுத்தமாய் பரிசுத்தமாய் இருக்கிறீர்கள். மனம் தெளிவாய்
இறைவன் கருவறையாய் தெளிந்து நிற்கிறது. பூக்கள் வரவேற்கிறது. மரங்கள் உங்கள் வரவை கொண்டாடுகிறது.
இப்படி தினமும் தினமும் உங்கள் வாழ்வு திருவிழாவாய் திகழ்கிறது.

ஆனால்..

அது உங்களுக்கு தெரிவதே இல்லை..ஹாஹாஹா!! காரணம்.. கண் திறந்தும் தூக்கத்திலேயே காலம் செல்வதால்.
இதோ இந்த பதிவை படிக்கும்போது கூட உங்களின் குறட்டை சத்தத்தை என்னால் கேட்கமுடிகிறது. என்ன செய்ய..
நீங்கள் தூக்கத்தில் இருக்கும் வரைதான் இந்த சமுதாயம்.. நீங்கள் தூங்கும்வரை தான் உங்கள் சின்ன சின்ன கவலைகள்.
நீங்கள் தூங்கும் வரை தான் உங்களுக்கு துக்கமான ஒரு வாழ்க்கை. நீங்கள் தூங்கும்வரை தான் உங்கள் வாழ்க்கை விதியின்
கையில்.


இப்போது விவேகானந்தர் சொன்னதை கொஞ்சம் மாற்றி சொல்கிறேன். எழுந்திருங்கள்.. போதும் உறக்கம். உங்கள் கனவுகளுக்காக
வாழ்க்கை இங்கில்லை. உங்கள் சுயத்தின் முடிவுக்கு மட்டுமே இயற்கை வளையும். உங்களின் மனமென்னும் ஓட்டைபாத்திரத்தின்
தாகத்திற்கு வாழ்வு வளையாது. வளைக்க முயல்வதில் வீணாவது உங்கள் வாழ்க்கைதான்.

விழித்துகொள்ளுங்கள். உங்களுக்கு தாலாட்டு தேவை இல்லை. அலாரங்களே தேவை. தவறி தூங்கிவிடும் ஒவ்வொரு கணமும்
அடித்து எழுப்ப எப்போதும் உங்களோடு ஒரு அலாரத்தை வைத்துக்கொள்ளுங்கள். மனம் உங்களை எப்போதும் தூங்கவைக்கவே முயற்சிக்கும்.அப்பொதுதான் உங்கள் வீட்டில் திருடி.. தன்னை பணக்காரனாய் காட்டிகொள்ளமுடியும். போதும் உங்கள் திருடனை அனுமதித்தது. ஏற்கனவே
பாதி சொத்தை கொள்ளையடித்துவிட்டான். இன்னும் நீங்கள் படுக்கையில் புரண்டது போதும். விழித்துகொள்ளுங்கள். அவனை வெளியேற்றுங்கள்.


கொண்டாடுங்கள்..!! இங்கே போராட்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை..!! விழித்துக்கொள்ளாதவரை போரும் உண்டு..போராட்டமும் உண்டு.
விழித்துகொண்டபின் கொண்டாட்டம் தான். துக்கத்திற்குதான் நீங்கள் பெரிதும் முயற்சிகள் செய்யவேண்டும். மகிழ்ச்சி என்பது உங்கள்
அடிப்படை இயல்பு. பிறக்கும் போது நீங்கள் அழுதது துக்கத்தால் அல்ல..மகிழ்ச்சியால்.. ஆனந்தில் விட்ட கண்ணீர் அது. உன் தந்தையும் தாயும்
உங்களை முதலில் கண்டதும் அழுதார்களா என்ன? பூரித்துபோனார்கள்...மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். கொண்டாட்டமும் மகிழ்ச்சியுமே உங்கள்
சுயம். அதுவே வாழ்வை வாழச்சொல்லும் சக்தி.

தூக்கம் போதும்... வாழ்க்கை கணத்திற்கு கணம் நழுவுகிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு இல்லை. இன்றே கடைசி..இக்கணமே கடைசி..

வெற்று கனவுகளுக்காக அழுதது போதும்.. விழிப்பில் வாழுங்கள்.. எழுந்திருங்கள்..விழித்துகொள்ளுங்கள்..கொண்டாடுங்கள்..!!

Monday, May 9, 2011

தியானமும் நானும்..!!




எவ்ளோ நாள் ஆச்சு.. அடடா.. என் வலைப்பக்கத்தை பார்க்க எனக்கே சங்கடமாய் இருக்கிறது.
இருந்தாலும்.. பிஸியாக இருந்த அளவுக்கு அது இப்போது ரெஸ்ட் எடுத்துகொண்டிருக்கிறது என்று ஒரு ஆறுதல்
சொல்லிகொள்கிறேன்..

நான் தியானம் பயில்கிறேன்.. ஆமாம்...உண்மைதான்..அட நிஜமாப்பா, ஆனால் பொதுவாக எல்லாரும் பயில்வது
போல் பத்மாசனம் போட்டு அமர்ந்து கண்ணை மூடி, முதுகை நிமிர்த்தி, மூச்சை இழுத்து இழுத்துவிட்டு, இப்படி
எதுவுமே செய்வது இல்லை. அதே போல் தியானம் செய்தே ஆகவேண்டும் என்று என்னை நானே கட்டாயப்படுத்திகொண்டதும்
இல்லை. எப்போது பசிக்கிறதோ அப்போது உண் என்பது போல எப்போது மனம் ஓய்வாய் அமைதியாய் இருக்க ஏங்குகிறதோ
அப்போதெல்லாம் தியானம் செய்ய தயாராகிவிடு என்பது எனது கொள்கை.

பொதுவாக எல்லாரும் மனம் அலைபாயும்போதும், கோபத்தில், ஆசையில், ஏக்கத்தில் கொதிக்கும்போதும் மட்டுமே தியானத்தை
நினைவுபடுத்தி மனதை கட்டுபடுத்தும் ஒரு முயற்சியாக அதை செய்கிறார்கள். ஆனால் மனதை கட்டுபடுத்தினால் மட்டும்
மனம் எதையும் சாதித்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது ஓடும் ரயிலை ட்ராக்கில் நின்றுகொண்டு
இரண்டு கையால் தடுக்க முடியும் என்று முயற்சிப்பதை போல.

ஒரு ரயிலை நிறுத்த அதன் அடிப்படை அம்சங்கள் தெரிந்திருக்க வேண்டும். எந்த லிவரை இழுத்தால் ரயில் வேகம் குறையும்,
எந்த லிவர் ப்ரேக்காக செயல்படுகிறது என்று முழுமையாக ஒரு ரயில் என்ஜினை புரிந்தவருக்கே ரயிலை நிறுத்துவது சாத்தியம்.

உன் மனதை பற்றி நீ சரியாக புரிந்துகொண்டால் அதை கொஞ்சம் கொஞ்சமாய் கவனித்து கவனித்து அதன் அடிப்படைகளை
புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொண்ட பின் அதை நிறுத்துவது, அதை உனக்கேற்றவாறு செயல்பட வைப்பது,
என அது சுலபமாக உன் கைக்குள் வந்துவிடும்.

மனம் ஓய்வை தேடும் நேரத்தில் அதை புரிந்துகொள்வது சுலபம். ஆனால், உனக்கு மனம் எப்போது ஓய்வை தேடுகிறது என்பதும்
தெரியாதே!!, இருக்கட்டும், எப்போதெல்லாம் உன் மனம் நிதானமாய் நிம்மதியாய் இருப்பதாய் உணர்கிறாயோ,
அதாவது உனக்கு பிடித்தவரோடு பேசும்போது, நடக்கும்போது, உனக்கு பிடித்த புத்தகம், பாடல், கவிதைகள் படிக்கும்போது
இப்படி பல்வேறு சமயங்களில் மனம் ஓய்வாய் இருக்கும். அந்த சமயங்களில் அதை கவனி.

வெறுமனே கவனி. நீ அதனிடம் பேச முயற்சி செய்யவே செய்யாதே. இது தவறான போக்கு. அப்படி பேசுவது அர்த்தமற்றது.
வெறுமனே கவனித்தல் போதுமானது. அப்படி கவனித்து வர வர அதன் அடிப்படைகள் புரிந்துவிடும்.

அப்போது அதை தாண்டி செல்வது சுலபமானது.

மனதை தாண்டி என்ன இருக்கிறது? எல்லாம் மனதை தாண்டிதான் இருக்கிறது. மனம் வெறும் காவலாளி. சொர்க்கத்தின் காவலாளி.
அவன் அவ்வளவு சீக்கிரன் உன்னை உள்ளே விடமாட்டான். அவனை தாண்டி நீ சென்றுவிடு. சென்றுவிட்டால், அப்போது புரியும்
அந்த சொர்க்கமே உன்னுடையது என்று.

நன்றி,
ரங்கன்.

Wednesday, April 13, 2011

மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடு, வாயை மூடு!!



என் வாழ்வில் பல திருமணங்களை பார்த்திருக்கிறேன், என் தங்கை திருமணம் உட்பட.
அவைகளில் உள்ள சில விஷயங்கள் எனக்கு முரணாகவும், முட்டாள்தனமாகவும் ஏன் கொஞ்சம்
கீழ்த்தரமானதாகவும் கூடப் படுகிறது.
அதில் முக்கியமான ஒன்று.. நான் மாப்பிள்ளை வீடு என்று பந்தா காட்டுவது. எதோ மைக்ரோஸாப்ட் ஓனரின்
ஒன்னுவிட்ட கஸின் போல சீனைப்போட்டுக் கொண்டு ஒருசில பெண்களும் ஆண்களும்
பெண்வீட்டுக்காரர்களை சீண்டுவதும், அதிகாரம் பண்ணுவதுமாய் இருப்பார்கள். பெண்வீட்டுகாரர்கள் மனதிற்குள்
பொருமினாலும் வெளியே சொல்லாமல் சிரித்தும், நாசூக்காக தவிர்த்தும் அவர்களை அனுசரித்துகொள்வர்.
இப்படி ஒரு ஆணை பெற்றேன் என்று பெருமை அடித்துகொள்வதை நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது.

சொல்லப்போனால் பெண்வீட்டுகாரர்கள் தான் பந்தா பண்ண வேண்டும். ஆணின் மொத்த பலமே.. பெண் தான்.
ஆண் தன்னை ஆண் என்று உறுதி செய்வதற்கும் ஒரு பெண்ணே தேவையாகிறாள். அவளின் அன்பும் அரவணைப்பும்
ஆணிற்கு மிகவும் முக்கியமானதாகவும், அவளின் புத்திசாலித்தனமும் நாசூக்கும் வாழ்க்கை சுமூகமாக செல்ல வழிவகுப்பதாகவும், தானே தாயான பின்னும் கணவனின் இரண்டாவது தாயாகவும் மாறும் பெருமையான பிறவியாக பெண் இருக்கிறாள்.

(உடனே பெண்ணியவாதின்னு நினைச்சுட்டீங்கன்னா உங்க தலைக்கு ஒரு செல்லக்குட்டு..நான் அவன் இல்லை :) )..

இப்படி ஒரு பெருமைக்குரிய பெண்ணை மணப்பெண்ணாய் ஒரு ஆணை நம்பி அனுப்புவதை நினைத்து பெருமையும்
பூரிப்பும் அடையவேண்டியது பெண்வீட்டார் தான். ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது..

அந்த பெண்ணை அவர்கள் படுத்தும் பாடு... மாப்பிள்ளையை எப்படி அனுசரித்து போவது? மாமியாரை எப்படி வழிக்கு கொண்டுவருவது?
மாமனார் எப்படி? என மாப்பிள்ளை குடும்பத்தாரை பற்றி பேசி பேசி அந்த பெண்ணின் மனதில் பெருமளவு பீதியை கிளப்பிவிட்டுகிறார்கள்..
சமையல் குறிப்பு முதல் அழகு குறிப்பு வரை.. வந்தார் போவாரெல்லாம் அட்வைஸ் மழை பொழிந்து தள்ளி..
அந்த பெண்ணை திக்குமுக்காட செய்துவிடுகிறார்கள். பாவம் அந்த ஜீவன்.. இவ்வளவு பெரிய தலைவலியா திருமண வாழ்க்கை என்று..
திருமணத்திற்கு முன்பே நோக ஆரம்பித்துவிடுகிறாள்.

அதுமட்டுமில்லாமல், கொடுக்கும் சீரில் அது இல்லை இது இல்லை என்றும்..நாங்கள் அது செய்தோம்..இவங்க இவ்வளவுதானா என்று கம்பேரிஸன் கண்மணிகள் வேறு ஒரு பக்கம்..


அடுத்த தொல்லை ஹோம குண்டம்.. வேர்த்து விருவிருத்து.. சீக்கிரம் கட்டிடுப்பா தாலியைன்னு கடுப்பா உட்கார்ந்திருப்பாங்க.
அடுத்து..போட்டோ செஷன்..
நாளைக்கே போட்டோ ஆகப்போகிறவர்கள் முதற்கொண்டு எல்லாரும் சுற்றி சுற்றி வந்து சுட்டுதள்ளுவார்கள்.
அத்தனை போட்டோவிலும் புன்னகைக்க வேண்டும். இல்லாவிடில் அதுக்கும் பிரச்சனை கிளப்பும் கூட்டம் இது.

இப்படியெல்லா வகையிலும் அவளை படுத்தி எடுத்ததில்லாமல் அந்த சடங்கு இந்த சடங்கு என அடுத்த இரண்டு மூன்று மணிநேரங்கள்
கூத்து நடக்கும்..

இதெல்லாம் எதற்கு செய்கிறோம் என்ற அர்த்தம் புரியாமல் சொல்லுதுங்க...செஞ்சி தொலைப்போம் என்று மாப்பிள்ளையும் பெண்ணும் பொம்மைகளாய்
வலம் வருகின்றனர்.

இப்படி பல்வேறு வகையில் பெண்ணை வதைத்தே திருமணங்கள் நடக்கின்றன.


வெரி ஸேட்.. கொஞ்சமாச்சும் மாருங்கப்பா..!!


Wednesday, March 23, 2011

நான் இந்தியனில்லை.. நான் இந்துவுமில்லை..!!




எனக்கு இன்னைக்கு காலைல தாங்க தோணிச்சு..
அட.. நாம இந்த நாட்டுல பிறந்தது நம்ம தலையெழுத்தா?
இல்லை எதேச்சையான ஒரு விஷயமா? ம்ம்ம்..
எனக்கு நல்லா தெரியும் இது தலையெழுத்து இல்லைன்னு.. எனக்கு மொட்டை போட்டபோது எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும்..
ஜூம் பண்ணி பண்ணி பார்த்தேன்.. ”இந்தியனாய் பிற”ன்னு எதுவும் எழுதலை.. ஸோ..நோ தலையெழுத்து..

அப்போ.. எதேச்சையா நடந்த ஒரு விஷயம்.. ஓ.. அப்போ நான் இந்தியனெல்லாம் இல்லை..
இங்க பிறந்ததால இந்தியன்னு மெச்சிகலாம்.. அப்போ இதுல என்ன பெருமை இருக்கு?
நிறைய பேரை பாருங்க.. நான் இந்தியன்.. நான் ஆரியன்.. நான் திராவிடன்.. நான் அது.. நான் இது..
ஸ்ஸ்ஸப்பா.. எத்தனை ”..ன்”கள்.. முடியல..

இந்தியா ராக்கெட் விட்டா.. ஆஹா..இந்தியனாய் இருப்பதில் பெருமை.. அதே இந்தியா வேற நாட்டுகிட்ட
(முக்கியமா பாகிஸ்தான்)கிட்ட தோத்துட்டு வந்தா.. அந்த விளையாட்டு வீரர்கள் வீட்டை இடிக்கிறது.. பொம்மை எறிப்பு, அப்புறம்
இந்தியனாய் இருப்பதே அவமானம்னு புலம்பல்.

ஏன் இந்த வெட்டி பந்தா..ஏன் இந்த வீண் சோகம், வெறுமனே லாஜிக்கா யோசிச்சாலே போதும் இந்த எல்லா “..ன்”களும்
காணாம போய்டும். அப்படி என்னத்த இழந்துட்டீங்க.. அப்படி என்னத்த சாதிச்சிட்டீங்க.. ஒன்னுமில்லை..
இன்னும் இமயமலைதான் உசரமா இருக்கு.. இன்னும் கடலன்னை உங்களை மீறி சுனாமியா வரத்தான் செய்யுது..
Then what is the point in all the "ians"?

ஸோ..யாருக்கும் அவங்க அவங்க நாட்டை நினைச்சு பெருமைப்பட்டுக்கவோ, கேவலப்பட்டுக்கவோ வேண்டிய அவசியம் இல்லை!!

..அடுத்து வருவது மதம்..

ஸேம் லாஜிக்.. எதேச்சையா ஒரு இந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிறக்கவேண்டியதா போச்சு.... உடனே நானும் இந்துவாம்..
என்ன நியாயம் இது? நான் இந்துவாக இருப்பதும் வேறுமதத்தினனாய் இருப்பதும் என் தனிப்பட்ட உரிமை. இவங்களா எப்படி என் முதுகுல
இந்துன்னு சீல் குத்தலாம்? முதுகுலனா கூட பரவாயில்லை..தெரியாது ..சட்டை போட்டு மறைச்சிடலாம்.. ஆனா
நெத்தில விபூதி, குங்குமம், அப்புறம் அதென்னது..ஆங்..சந்தனம்.. ஃபர்பெக்ட்.. தேசிய கொடி கணக்கா எங்கப்பா வெச்சிவிட்டு அனுப்புவாரு..
அவருக்காக அதை ஏத்துக்குட்டேன்..அவரோட மதத்துக்காக அல்ல!! அதை ஒரு கிறுஸ்துவ டீச்சர் அழிச்சப்போ ஒரு இந்துவா எனக்கு
கோபமே வரலை.. என் தந்தையின் பாசமான பிள்ளையா எனக்கு செம கடுப்பு.

இப்படி சின்னவயசுல இருந்தே மதம் என்னை எப்பவும் பாதிக்காம தொல்லை பண்ணாம இருக்கணும்னு நினைச்சேன்.. இன்னும் நினைக்கிறேன்..
பட்..உலகம் அப்படி இல்லை.. எப்போ பாரு மதபீத்தல்கள். என் கடவுள்தான் பெருசு, உன் கடவுள் டம்மி பீசுன்னு அடிச்சுக்கறாங்க.
ஏன்.. இந்துகளுக்குள்ளயே.. மூணுகண்ணன் சிவன் பெருசா? நாலுகை நாராயணன் பெரிசான்னு இன்னும் சண்டை....
(சின்னவயசுல அம்மா மூணுகண்ணன் வரான்னு சொல்லி சோறு ஊட்டுவாங்க.. ஒருவேளை இவராத்தான் இருக்குமோ?!)

இப்படி.. மதம் சம்பந்தமா அடிச்சிக்கிறது அர்த்தமே இல்லாத ஒரு வேளை. (எனக்கு சாமி கும்பிடுவதே அர்த்தமில்லாத வேலை)
எதேச்சையா ஒரு இந்து குடும்பத்திலோ, ஒரு இஸ்லாமிய அல்லது கிருத்துவ குடும்பத்திலோ பிறந்துவிட்டதால்..
நம்மை நாமே இந்து என்றோ, முஸ்லிம் என்றோ, கிருத்துவன் என்றோ நினைத்துகொண்டால் அது முட்டாள்தனம்.

சோ.. நம்மை பற்றி எதுவும் (கடவுள் உள்பட) எதுவும் கவலைப்படவில்லை. நாம் தான் தேவையே இல்லாமல் எல்லாவற்றையும்
பற்றி கவலைப்பட்டு, நேரத்தை வீணாக்கி மனநோயாளிகளாய் திரிகிறோம்.

மதமும், நாட்டு பற்றும் போலி வேஷங்கள். ஏமாற வேண்டாம்.

கொஞ்சம் மாத்தி யோசிங்க.. நான் மனிதன்ன்னு பெருமைப்படுங்க.. உலக உயிரங்களிலேயே தன்னை தனக்குள் தேடும்
ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே.
வாழ்வை ரசித்துவாழ, நம்மால் மட்டுமே முடியும். அன்பும், அரவணைப்பும், கவிதையும், காதலும், பாட்டும், ஓவியமும்,
கலையும், நயமும், ஆடலும் பாடலுமாய்.. மட்டற்ற மகிழ்ச்சியோடு வாழும் ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே..!!

Tuesday, March 8, 2011

நில்.. கவனி... செல்..!

            

  

தினமும் சாலைகளையும் மனிதர்களையும் பார்க்கிறோம்.. போக்குவரத்து நிறுத்தங்கள்,
சிகப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகள், பிறகு மீண்டும் பயணம்.. இப்படி இருக்க..ஒரு
நாள்.. இந்த சிகப்பு, பச்சை, மஞ்சள் என விளக்குகள் எறிய.. என் மனதிலும், இவைகளை சார்ந்து ஒரு விளக்கு எரிந்தது.

நில்..

நில்.. அதாவது.. வேகம் குறை. சில நேரங்களில் ரொம்ப கடுப்பா இருப்பீங்க. இல்ல ரொம்ப டென்ஷனா குழப்பத்தோட இருப்பீங்க. இப்போ கொஞ்சம் கவனிச்சு எல்லாத்தையும் நிறுத்துங்க.
அந்த இடத்தை விட்டு வெளியே வாங்க. வானம் பாருங்க. தண்ணி குடிங்க. உங்களுக்கு பிடிச்ச பாடலை கேளுங்க. வேகத்தையும் கோபத்தையும் விட்டுட்டு நிதானமாக, அமைதியா கூலா இருங்க. இப்போ அடுத்த கட்டம்.

கவனி..

கவனி.. மனம் ஏன் இப்படி அலைபாய்கிறது? ஏன் இந்த சூறாவளி? எதனால்? எக்ஸ்க்யூஸ்மி,
எதனால் என்று யோசியுங்கள். யாரால் என்று அல்ல. அப்படி யோசிப்பதில் பயனே இல்லை. மீண்டும் வெறுப்பும் கடுப்புமே கிளம்பும். எனவே எதனால்.. உங்கள் மனதில் நீங்களே எடுத்துவைத்துகொண்ட எந்த முடிவால் இந்த அவதி? அது தேவையானதா? சூழ்நிலையை சரியாக்க என்ன செய்யலாம்.. இப்படி வரிசையாக பொறுமையாக கவனியுங்கள். வரிசைப்படுத்தி திட்டமிடுங்கள்.

செல்..

அடுத்து செல்வது..விருட்டென்று கிளம்புவதல்ல... கொஞ்சமாக.. கொஞ்சம்கொஞ்சமாக..
0... முதல்.. 10.., 10 முதல் 20.., 20 முதல் 40.. இப்படி.. போட்ட திட்டங்களை நிதானமாக
ஒன்றொன்றாய் செயல்படுத்துங்கள்.. அவசரமே வேண்டாம்.. அதிவேகமாக செயல்பாடுகள்,
உடனடி தோல்விகளில் முடியும். எனவே நிதானமாய் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.





 ************************************

இவையனைத்தும் என் சொந்த அனுபவத்தில் கண்டது. உங்கள் அனுபவங்கள் வேறுபடின் அதையும் பகிருங்கள்.
நன்றி..!!


Friday, October 29, 2010

என் கேள்விக்கென்ன பதில்?



நாம் நம்முடைய இந்திய கல்வியின்படி சிறப்பாக பதில் சொல்லவே கற்றுதரப்படுகிறோம்.
அதே 40 வருட பழமையான கேள்விகள். பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிற்து.

என்னை எப்போதும் வாட்டுவது..
ஒரு குழந்தையிடம் ¨நீ வருங்காலத்தில் என்னவாக போகிறாய்?¨ என்ற முட்டாள்தனமான
கேள்வி.
ரேடியோக்களில், டி.வியில், ஏன் நம் வீடுகளிலும் சகஜமாய் இந்த கேள்வி குழந்தைகளிடம்
கேட்கப்படுகிறது. இது ஒரு அர்த்தமற்ற கேள்வி.
அதே கேள்வியை குழந்தை உங்களிடம் திருப்பிகேட்டால்..
¨நீங்க என்னவா  ஆகி இருக்கீங்க அங்கிள்/ஆண்டி? சின்னவயசில் நீங்க சொன்னதை அடைஞ்சுட்டீங்களா?¨ என்று தன் பிஞ்சு மொழியில் கேட்டாலும்..நெஞ்சில் நஞ்சை பாய்ச்சியதுபோல
இருக்கும். காரணம். நமக்கே தெரியும்.
நாம் நம்மை இலக்கை இன்னும் அடையவே இல்லை. நம் இலக்கை இன்னும் தீர்மானிக்கக்கூட இல்லை என்பது.
குழந்தைகள் கலெக்டர்களாவதற்கு பிறக்கவில்லை, டாக்டராகவும் பிறக்கவில்லை, என்ஜினியராகவும்
பிறக்கவில்லை. அவர்கள் வாழப் பிறக்கிறார்கள்.  அவர்கள் நம்மைப்போல் கேள்விகளுக்கு பதில்
சொல்லும் கிளிப்பிள்ளைகள் இல்லை. பிரபஞ்சத்தின் மிச்சங்கள் அவர்கள். அவர்களுக்கு சிறப்பாக
பதில் சொல்ல கற்றுதருவதை விட சிறப்பாக கேள்விகேட்க கற்றுகொடுக்க வேண்டும்.

இனி பிள்ளைகளிடம் நீ என்னவாக போகிறாய் என்று கேட்காதீர்கள்..
அவர்கள் எப்படியும் நீங்கள் சொல்லிகொடுத்ததை தான் சொல்வார்கள்.
அவர்களுக்கு முதலில் வாழ கற்றுகொடுங்கள். கேள்வி கேட்கும் பிள்ளைகளால்தான் உலகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதே தவிர..
டேப்ரிக்காடர்களாலோ, கிளிப்பிள்ளைகளாலோ..இந்த உலகுக்கு ஒரு புண்ணியமும் இல்லை.

ஏன் ஆப்பிள் கீழே விழவேண்டும்? என்று ஒரு இந்தியன் யோசிக்கவில்லை.
ஒருவேளை  பூமி சூரியனை சுற்றுகிறதோ? என்று இந்தியன் யோசிக்கவில்லை. தீக்குளித்தானே முத்துகுமார்.. உண்மையில் அவன் ஈழத்துக்காகத்தான் இறந்தானா? என்று
எத்தனை பேர் யோசித்து இருப்போம்..??

3000 ஆண்டுகளாக மண்ணையும், பெண்ணையும் தின்றே வாழ்ந்த சமூகம் நம் சமூகம்.
இல்லை..இல்லை..ஆர்யபட்டருக்கு புவியீர்ப்பு தெரியும், கோள்களை பற்றியும் தெரியும் என்று சொன்னாலும்..
அவைகள் மதக்கலாச்சாரத்தில் மக்கிபோய்விட்டன.

தெரியும் என்று சொல்வதை விட..தெரிவிக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பவனை தான் உலகம்
தேடிக்கொண்டிருக்கிறது.

இன்று கேள்விகளை சிறப்பாக கேட்க தெரிந்ததால் தான் சந்திராயன் என்கிற இந்திய செயற்கோளை
உலகுக்கு தந்து நம்மால் நெஞ்சை  நிமிர்த்தி நிறக முடிகிறது.

கேட்பவனின் துணிவும், அதற்கான பதிலை  அடைய துடிக்கும் முயற்சியும் இருந்துவிட்டால்..பிரபஞ்சத்தின் கதவுகள்..தானே  திறந்துகொள்ளும்..!!

(பி.கு):  இந்த பதிவு சம்பந்தமாய் எதேனும் கேள்விகள் இருந்தால் என்னை கேட்கலாம்!!

Tuesday, October 19, 2010

நீங்க அறிவாளியா ? நல்லவரா?


இந்த உலகமே இரண்டு முக்கியமான அம்சங்களில் இயங்குகிறது.
ஒன்று.. அறிவு. இன்னொன்று அன்பு.

சொல்லபோனால்.. இரண்டுமே எல்லாவகையிலும் ஒன்றுகொன்று எதிரானவை.
ஆனால் இந்த இயற்கையை , மொத்த பிரபஞ்சத்தை எடுத்து பார்த்தால்..
வாய்பிளக்கவைக்கும் அறிவியலும், நெஞ்சை பிழியும் அன்பும் சரிசமமாய் இணைந்திருக்கிறது.

ஏன் வானம் வரை போய்கொண்டு... ஒரு மரத்தை எடுத்துகொள்ளுங்கள்.
அதன் வேர்கள்.. அதன் கிளைகளை விட நீளமானவை.. ஆழமானவையும் கூட.
அதன் நடுமரம். அதாவது தண்டுபகுதி.. அது கடினமானதே என்றாலும்..அதன் வழியாகத்தான்
நீர் புகுந்து செல்கிறது. இது கிளைகளின் பரவி..இலைகளை தளைக்க செய்கிறது.
சூரியகாந்தி பூவை எடுத்துகொள்ளுங்கள். அதன் நடுவில் மகரந்த அடுக்கு.. அது ஒரு
Fibonacci numberக்கு சரியான குறியீடு.

இப்படி மனிதன் தன்னை சுற்றி உள்ள எல்லா விஷயங்களில் அறிவியல் ஒளிந்திருப்பதை
காண்கிறான். அதை கணிதத்திலும், கணினியிலும் கணக்கிட்டு புதிய பல மேம்பாடுகளை
அவன் வாழ்க்கைக்கு ஏற்படுத்தி கொள்கிறான்.

இப்படி, வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் அறிவியலை திணித்து திணித்து..
அதாவது..மூளையை கொண்டு மட்டுமே யோசித்து யோசித்து..இன்று மனிதன்
இதயமில்லாதவன் என்ற பெரும்பேறு பெற்றிருக்கிறான்.

ஒரு மரத்தின் இத்தனை விஷயங்களை கவனித்து கணித்த நாம், அதன்
சலசலப்பில் என்றாவது மனம் மயங்கி நின்று..நாமும் மரமும் ஒன்றாகி நின்றிருப்போமா?

இப்போது அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் வாழ்வில் நடத்த சம்பவத்தை
சொல்கிறேன் கேளுங்கள்.

ஒருமுறை  அவரை சந்திக்க சில விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள்.
என்ன விஷயம் என்று கேட்டால், புகழ்பெற்ற பீத்தோவனின் சிம்பனிகளை
ஆராய்ந்ததில் சில புதிய ஒலிமாறுபாடுகளை கண்டுபிடித்திருப்பதாகவும்,
அவைகளை ஐன்ஸ்டீனும் ஆராய்ந்து ஒரு ஒப்புகை சான்று வழங்கவேண்டும்
எனக் கேட்க வந்திருந்தனர்.
ஐன்ஸ்டீனுக்கோ வெகு கோபம், ஒழுங்காக ஓடிவிடுங்கள்.
அந்த மாமனிதரின் இசையை, அதன் தெய்வீகத்தை  ரசித்து மகிழ்வதை
விட்டுவிட்டு.. அதை கூறுபோட்டு அசிங்கப்படுத்த பார்க்கிறீர்களா?
கிளம்புங்கள் முதலில்.. என்று அவர்களை விரட்டிவிட்டார்.

 அறிவு.. என்ற ஒன்றை மட்டுமே கொண்டு
எந்த வகையிலும் வாழ்க்கையை நடத்திவிட முடியாது என்று இயற்கைக்கே
தெரிந்ததால்தான் நமக்கு இதயத்தையும் சேர்த்து வைத்து படைத்திருக்கிறது.

அதை சுத்தமாய் மறந்துவிட்டு... அறிவியலை கண்ட உலகில் அன்பை
பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்.

இதற்கு ஒரு மாற்று உண்டு.
நீங்கள் உங்களை பிடிக்காதவரோடு பேசவும் பழகவும் வேண்டி உள்ளதா?
3:1 என்கிற அளவில் , 3 பங்கு அறிவு, ஒரு பங்கு அன்போடு இருங்கள்.
உங்கள் குழந்தைகளிடம்... 1:3, அதாவது ஒரு பங்கு அறிவு..மூன்று பங்கு
அன்போடு இருங்கள். இப்படி சரியான அளவுகளில் மூளையையும், இதயத்தையும்,
பயன்படுத்த பழகிகொண்டால், வாழ்வில் நாம் எந்த தடைகளையும்
முறியடித்து வாழலாம்..!!

Monday, September 27, 2010

ஹையா ஜாலி!! நான் சுயநலவாதி!!

இதுக்கெல்லாமா சந்தோஷப்படுவாங்க.
ஏங்க..ஏன் சந்தோஷப்படகூடாது..?

இன்னைக்குதான் சுயநலம் என்பது எவ்வளவு அழகானதுன்னு புரிஞ்சிகிட்டேன்.


இது ரொம்ப முக்கியமான விஷயம். பல சந்தர்பங்களில் நாம் பொதுநலவாதிகளா மாறி நமக்கு நாமே ஆப்புவைத்துகொண்ட
நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும்  நடந்திருக்கும். அப்படிப்பட்ட நிலைமைக்கு காரணம் இந்த "பொதுநலம்" என்கிற எண்ணம்.

முதலில் பொதுநலம் என்பது என்ன? நாலு பேருக்கு கொடுப்பது.. நாலு பேருக்கு நன்மை செய்வது. இப்படி நாலு நாலு பேருக்கா
தினமும் நன்மை செஞ்சிகிட்டு  இருந்தா .நாலு பேரு நம்மை... நாலு நாள் கழிச்சு.. நாலு தெரு தள்ளி இருக்குற இடுகாட்டுக்கு தூக்கிட்டு
போகவேண்டியதுதான்.

  ஏன் இப்படி சொல்கிறேன்?

காரணம் நம்மிடம் இருப்பதில் பங்களித்து கொடுப்பதுதான் பொதுநலமாகமே தவிர.. நம்மையே கொடுத்துவிடுவது பொதுநலமில்லை.
அப்படி கொடுத்தவர்களும் உண்டு. அவர்கள் அன்பில் நிறைந்துவழிந்தவர்கள், அப்படிப்பட்ட நிறைவு, நம்மிடம் இருக்குமேயானால்
கொடுப்பதில் தவறேதும் இல்லை.

இங்கு நாமே "அய்யா சாமி"என்று அலையும்போது நம் வாசலில் எவனாவது கடன்கேட்டு வந்தால், கண்டிப்பாக உதையை தவிர வேறெதுவும் கொடுக்க
வேண்டியதில்லை. நம்மிடமே இல்லாத போது கர்ணபிரபுவாக மாறுவது முட்டாள்தனம். நம்மிடம் அதிகமாக இருக்கும்போது கஞ்சப்பிரபுவாக
மாறுவது அதைவிட முட்டாள்தனம். நாம் இவைகள் இரண்டையுமே இப்போதைய காலத்தில் சிறப்பாக செய்து வருகிறோம்.
நம் வறுமையை போக்கிகொள்ள வக்கில்லாமல் இருந்தாலும், பிறருக்காக, பொதுநலனுக்காக செய்கிறேன் பேர்வழி என்று எத்தனையோ பேர்
குடும்பத்தை கவிழ்த்திருக்கிறார்கள்.

இயற்கையில் தனக்காக வாழத்தெரியாத ஒரு பைத்தியக்காரத்தனமான உயிரனம் மனிதாக மட்டுமே இருக்க முடியும். மரங்களை எடுத்துகொள்ளுங்கள்.
அவைகள் சுயநலமானவைதான். அவைகள் நன்கு வளரும்வரை வேர்களை பரப்பி நீரை தேடுகின்றன. இலைகளில் சூரியவெப்பத்தை சேர்த்து உணவு
சமைக்கின்றன. இப்படி ஒரு பெரும் சுயநலப் போராட்டத்திற்கு பின்பே..அவைகள் பூக்கின்றன, காய்க்கின்றன, கனிகள் தருகின்றன. காரணம், அவைகள்
நிறைந்துவிட்டன. நிறைவடைந்துவிட்டன. இனிமேல் அவைகள் பொதுநலவாதிகள் ஆகலாம். அவைகள் தன்னளவில் நிறையாவிட்டால் காயுமில்லை,
கனியுமில்லை. இப்படிமொத்த இயற்கையும் சுயநலம் என்பதை சரியாக பயன்படுத்திகொள்கிறது.
இவ்வளவு சுயநலமான இயற்கையை நம்மால் ரசிக்கமுடிகிறது. நம் அருகில் இருக்கும் ஒரே ஒரு சுயநலவாதியை நம்மால் சகித்துகொள்ள முடிவதில்லை.

அப்போ எப்பவுமே சுயநலமா இருக்கணுமா?
எப்போதும் சுயநலமாய் இரு என்று சொல்லவரவில்லை. நீங்க நிறைவடையாமல், நீங்கள் முழுமையடையாமல் பிறரை முழுமைப்படுத்த முடியாது.
நீங்கள் எப்போது முழுமையடைகிறீர்களோ அப்போதே அது பொதுநலமாக மாறிவிடும். அது உங்களை மீறி நடந்துவிடும். பொதுநலம் ஒரு மகிழ்ச்சிதரும்.
நிறைவடையாமல் இப்போது நாம் செய்யும் எந்த பொதுநல சேவையும் மகிழ்ச்சிதராது. நம்மை நாமே ஏமாற்றிகொள்வது அது. நீங்கள் வாழ்வை முழுமையாக வாழுங்கள்.
முழுமை கிடைத்ததும், பிறரை கவனிக்கலாம். :)

புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு முக்கியமாய் நான் சொல்வதும் இதுதான். அவளை நீயும், அவனை நீயும் புரிந்துகொள்ளுங்கள். புரிதலில் முழுமை வந்ததும்
பிறப்பதே பிள்ளையாக இருக்கும்.!!, மற்றவை.....  ( இது ஒரு பேச்சுலரின் அட்வைஸ். :))) )

Friday, August 27, 2010

"நல்லவர்"- ஒரு மோசமான கெட்ட வார்த்தை!



என்னடா இவன், நல்லவர்னு சொல்றதை கெட்ட வார்த்தை ஆக்கிட்டானேன்னு
யோசிக்கிறீங்களா.. காரணம் இருக்கு..

முதல் காரணம். நம் மனது. அதென்ன.. நன்மை தீமை, நல்லவர், கெட்டவர்..
இந்த இரண்டு விஷயங்களும் எப்படி நம் மனித சமுதாயத்தை எப்படி ஆக்ரமிக்க
ஆரம்பித்தன..?

நல்ல- என்பது என்னை பொறுத்தவரை சாதகமான என்கிற வார்த்தையின் திரிபுச் சொல்.
அதாவது நமக்கு சாதகமான எல்லாமே நமக்கு நல்லவை. நம் பேச்சை கேட்டு வளரும் பிள்ளைகள்
நல்ல பிள்ளைகள். நம் தேவைக்கேற்ற சம்பளம் வழங்கும் நிறுவனம் நல்ல நிறுவனம். இப்படி
நமக்கும், நம் சூழ்நிலைகளுக்கும் சாதகமாக எவரோ, எவைகளோ இருந்தால் அவைகள், அவர்கள்
நல்லவர்களாகிவிடுகிறார்கள்.

இந்த நல்ல , தீய என்கிற வார்த்தைகள் வெகு சீக்கிரமாக நம் மனதை  ஆக்ரமித்து நம் அறிவுக்கு
வேலை இல்லாமல் செய்து நம்மை முடமாக்கிவிடுகின்றன. அதுவும் நம்மை பார்த்தே நான்கு பேர்
நல்லவன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டால்.. முட்டாளாக முதல் வகுப்பு ஆரம்பித்துவிட்டது என்றே அர்த்தம்..!!

நல்லவர் பட்டம்: அதென்ன நல்லவர் என்கிற முத்திரை குத்துவது? ஏன் இந்த வழக்கம்?
அதாவது ஒருவர் உங்களுக்கு சாதகமாக செயல்படவோ, செயல்பட்டிருந்தாலோ அவரை உங்கள்
அருகில் வைத்துகொள்ள இந்த நல்லவர் பட்டத்தை அவருக்கு கொடுத்து நீங்களும் அவரும் சேர்ந்தே
நல்லவராகிவிடுகிறீர்கள்.

நல்லவன் ஒரு மனநோயாளி: என்னது நல்லவன் மனநோயாளியா? ஆமாம். இல்லாத ஒரு கற்பனையான
ஒரு பதவியை, முத்திரையை  தன்மீது சுமந்துகொண்டு, அதனால் ஒரு பலனும் இல்லாமல் படாதபாடுபடும்
பரிதாப மனநோயாளி. அவனுக்கு இந்த முத்திரையை குத்தியதும் சில மனநோயாளிகள்தான்.
இந்த மனநோயால் பாதிக்கப்படுவது, அவனுடைய சொந்த வாழ்க்கையும், அவனை  சுற்றியுள்ளோரின் வாழ்க்கையும்தான்.
இதை புரிந்துகொண்டாலுமே இதில் இருந்து வெளிவர பெரும்பாடு படவேண்டும்.

கடவுள் நல்லவரா? : என்னை கேட்டால் நிச்சயமாக இல்லை. நமக்கு சாதகமான விஷயங்களை , சூழ்நிலைகளை மட்டுமே  அமைத்துதரும் கடவுள் நிச்சயம் கடவுளாகக்கூட இருக்க முடியாது.
காரணம், சிறப்பான வாழ்க்கைக்கு, மேம்படும் வாழ்க்கைக்கு அன்பு எப்படி முக்கியமோ அதே போல்
சில அடிகளும் முக்கியம். இரண்டுமே நம்மை மேம்படுத்தும். நம்மை வலிமைமிக்கவராக ஆக்கும் ஒரு ஜிம் ட்ரெயினர் , அல்லது பி.டி. மாஸ்டரை போலத்தான்
கடவுள் இருக்கமுடியுமே தவிர.. நம் காதுக்கும், கண்ணுக்கும் இனிமை  அளிக்கும் கவர்ச்சி நடிகையாக இருக்க முடியாது.

இப்போ  என்னதான் செய்யட்டும்? : வெகு எளிய வழி ஒன்று இருக்கிறது. பட்டத்தை  தூக்கி எறி, அதுக்காக பத்துபேர் பல்லை உடைக்க சொல்லவில்லை.
சூழ்நிலைகளை  அப்படியே  ஏற்றுகொள்ளுங்கள். இந்த சூழ்நிலைக்கு நீங்கள் கெட்டவராகியே தீரவேண்டுமென்றால், போய்ட்டு போகுது பதவி. கெட்டவராகுங்கள்.
நமக்கு End Result தான் முக்கியமே தவிர..பட்டம் முக்கியமில்லை. கையில் கத்தியோடு எதிரி முன்னால் நிற்கும் போது, நல்லவன் வேஷம் பலிக்காது.
அவனுக்கு நீங்கள் கெட்டவனானால்தான்..உங்கள் குடும்பம் உங்களை  போற்றும். இல்லைன்னா எமதூதர்கள்கூட கேவலமாக சிரிப்பார்கள்.

மொத்தத்தில், இனிமேல் யாராவது உங்களை நல்லவர் என்று சொன்னால் எச்சரிக்கையாக இருங்கள். அது உங்களை அரவணைக்க அல்ல. ஆப்பு வைக்க.!!

 டிஸ்கி: அதே  போல் உங்களை நன்கு புரிந்துகொண்டவர்கள் உங்களை நல்லவர் என்றும் போற்றி புகழமாட்டார், கெட்டவர் என்றும் தூற்றி இகழவும் மாட்டார்.

Friday, July 23, 2010

உறவுப்பூர்வமான அன்பும், உணர்வுப்பூர்வமான அன்பும்!!




அன்பு, கேட்க, காண, நுகர, தொட, உணர என பல்வேறு வழிகளில் தினமும் நாம் அன்பை , அன்பாய் பெற்றும் கொடுத்தும் வருகிறோம்.
அதே அன்பு இன்றைய உலகில் இரண்டு வேறு கூறுகளாக பிரிந்துகிடக்கிறது. 

ஒன்று: உறவுப்பூர்வமான அன்பு.
இரண்டு: உணர்வுப்பூர்வமான அன்பு.

முதலில் ஏன் இப்படி அன்பு இருகூறுகளாய் பிரிந்தது என்று தெரிஞ்சிக்குவோம்.
அன்பு எப்போதும் அன்பு மட்டுமே. அதற்கு வேறு  அடைமொழிகள் கிடையாது.
ஆனால் உறவுக்காக சிலர் அன்பாய் இருப்பதாய் காட்டிகொள்ள ஆரம்பித்த போது,
உண்மை அன்பு குறைந்து சிதறி, உறவுப்பூர்வமான அன்பாகி போனது.

உணர்வுப்பூர்வமான அன்பு என்பது முழுக்க முழுக்க சுயநலமான அன்பு. என்னடா
இவன் உணர்வுப்பூர்வமான அன்பை சுயநலம் என்கிறானே என்று நீங்கள் எண்ணலாம்.
ஆனால் அதில்தான் விஷயம் இருக்கிறது.

நீங்கள் உங்கள் அன்பை பிறருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமெனில், அது முதலில் உங்களுக்காக,
உங்களுக்குள் பூத்த அன்பாய் இருக்கவேண்டும். அதாவது, உங்களுக்குள் மணற்கேணி நீராய் ஊரும்
அன்பானது வெளியே கொடுக்கப்பட்டால் அது உண்மையில் நல்ல சுயநலமான, அன்புதான்.
அப்படிப்பட்ட அன்பை தான் புத்தர் போதித்தார். ஏசு ரத்தத்தில் காட்டினார். மஹாவீரர் அகிலத்தையே
அரவணைத்து தன் சொந்த அன்பால் உலகை நனைத்தார்.

இப்படி அன்பானது அதன் துவக்கம், அல்லது அது பிறக்கும் காரணத்தை பொறுத்து மாறுபடுகிறது.
உறவுப்பூர்வமான அன்பிற்கு வருவோம். இதுதான் இந்த உலகில் இப்போது மலிந்துகிடக்கும் அன்பின்
ரகம். ஆனால் தரம் மிககுறைவு. ஏன் தரம் குறைந்தது என்கிறேன்..?

பல நேரங்களில் பல உறவுக்காரர்களை நமக்கு பிடிக்காவிட்டாலும், அவர்களை பார்த்தமட்டில் அன்பே
பொங்காவிட்டாலும், அவர்கள் மீது அன்புசெலுத்துவதாய் காட்டிகொள்கிறோம். அவர்களை நாம் ஆதரிப்பதாகவும்,
அரவணைப்பதாகவும் காட்டிகொள்கிறோம். காரணம். சொஸைட்டி. கௌரவம். அவர்கள்மீது நீங்கள் அன்பாய் இருப்பதாக
காட்டிகொண்டால் மட்டுமே நீங்கள் மற்றவரால் மதிக்கப்படுவீர்கள் என்கிற சூழ்நிலை என்பதால், இந்த அன்பு நாடகம்.

இது வெரும் உறவுக்காரர்கள் மத்தியில் மட்டும் நாம் செய்வதல்ல, நம் நண்பர்களிடமும் இதே நிலைமை தான். வசதிப்படைத்த
நண்பர்கள் கைவசம் இருக்கவேண்டும் என்பதற்காக நாம் அன்பாய் நடிக்கிறோம். சரி..நண்பர்கள், உறவுக்காரர்கள் மத்தியில்
மட்டும்தான் இந்த நிலை என்றால் அதுதான் இல்லை. ஒரு குடும்பத்திற்குள்ளேயே இது நடக்கிறது. எனக்கு தெரிந்தவர் வீடு ஒன்றில்,
கலியாணம் முடிந்த  அடுத்த வருடமே குழந்தை பெற்றுகொள்கிறார்கள்! இப்போது
இரண்டு பிள்ளைகளுடன் அந்த இளம்தாயார், "இதுங்களை பெத்ததுக்கு", "ஏன்தான் இந்த மனுஷனை கட்டிகிட்டேனோ?!" என்று எசப்பாடல்கள்
பாடிவருகிறார்.

சமுதாய அங்கீகாரத்திற்காக பிள்ளைகள் பெறுவதை  எப்போதுதான் நிறுத்துவார்களோ சில பெண்கள். இப்படி சமுதாயத்திற்காக பிள்ளைபெற்றுகொள்ளும் மனோபாவம் மாறவேண்டும்.

இப்படி பிள்ளைபெற்றவர்கள் உண்மை அன்பை அவர்களுக்கு காட்ட இயலுமா? அவர்களால் அதை உணர்ந்திருக்கவும் முடியுமா?பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்கமுடியுமா? என்பது சந்தேகமே!!

உறவுரீதியான அன்பை  விடுத்து, உணர்வுப்பூர்வமான அன்பை கொடுங்கள்!! அதுவே மனிதத்தின் வளர்ச்சியாகும். மனதின் முதிர்ச்சியும் அங்கேதான் பரிமளிக்கிறது!!
உறவுப்பூர்வமான அன்பிற்கு மனமுதிர்ச்சி தேவையே இல்லை. ஆனால் உணர்வுப்பூர்வமான அன்பில் மனம் நிச்சயமாய் முதிர்ச்சியடையும்! உலகம் மீதான பயம் தெளிந்து
தெளிவு பிறக்கும்.

உறவுரீதியான அன்பை  விடுத்து, உணர்வுப்பூர்வமான அன்பை கொடுங்கள்!!


வாழ்க்கை அன்புமயமாகட்டும், வாழ்த்துக்கள்!!


டிஸ்கி : இந்த பதிவில் தாய்மார்களை தாக்க வேண்டுமென எனக்கேதும் எண்ணமில்லை.
அப்படி தாக்கி இருந்தாலும் அது வெகு சிலரையே தவிர.. என் அன்னையை  போல் எல்லாரையும் மதிக்கிறேன்.

Friday, July 9, 2010

சிங்கத்தின் எண்ணங்கள்!!

இந்த பதிவில் நான் எழுதியது எதுவும் இல்லை..!!
விவேகானந்தரின் வீரமான வார்த்தைகளில் இருந்து பிறந்த வாக்கியங்களை இங்கே தந்துள்ளேன்..!


முடிந்தால் ப்ரிண்ட் போட்டு கண்ணில்படுமாறு ஒட்டிவிடுங்கள்.
தன்னம்பிக்கை குறைவதாய்ப்படும் சமயங்களில் இது பெரிதும் உதுவும்.(அனுபவச்சி சொல்றேன் :) )







* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.


* நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும்.


* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில் அக்கறை காட்டுங்கள்.


* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக இன்னொன்றைக் கொடுங்கள்.


* மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.


* ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.


* எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடையவராகுங்கள். உங்கள் மீதே முழுப்பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப்பழகுங்கள்.


* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.


* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்கு தேவை.


* தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும் இறைவனே முன்நின்று உதவுவார்.


* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.


* நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சியளிக்கிறது. நமது எண்ணங்களே உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும் ஆக்குகின்றன.


* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

Tuesday, June 22, 2010

தூக்கமும், மரணமும், கொஞ்சம் புரிதலும்!! பாகம்-1

இரவு தூங்கும் நேரம்..நினைவு தூங்கிடாது!! நினைவு தூங்கினாலும், உறவு தூங்கிடாது!!
நல்ல பாடல் !! இரவில் கேட்க இன்னும் சுகம்..!!

தூக்கம் மனிதனின் ஆதர்ஷ நண்பன். இவன் அதிக நேரம் நம்மோடு இருந்துவிடவும் கூடாது.
வராமலும் நம்மை வருந்தவைக்க கூடாது.

ஒரே ஒரு நண்பனை மட்டும் நாம் எப்போதும் வரவேற்பதில்லை. அவன் பெயர் மரணம்!!

இவைகள் இரண்டை பற்றியும் நான் சிந்தித்து தெளிந்த கருத்துகளை சொல்ல ஆசைப்படுகிறேன்..!!

தூக்கம், மரணம் இவை இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்களாக...அல்லது
ஒரே விஷயமோ என்று யோசிக்கிறேன்!!


முதலில் தூக்கத்திற்கு வருவோம். தூக்கம் என்பது உடம்புக்கு ஓய்வு கொடுத்து மனதை அமைதிப்படுத்தும்
ஒரு தினசரி நிகழ்வு. சிலருக்கு இது நடப்பதே இல்லை..உடம்பு ஓய்வுபெற்றாலும் மனம் தூக்கத்திலும் இயங்கி,
தூக்கத்தை கெடுத்துவிடுவது வேறு கதை :).

இப்போது தூக்கத்தின் சாரத்தை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டி
இருக்கிறது. முதலில் தூக்கம் துவங்கும் போது..உடனே கண்கள் மூடி ஆழ்ந்து தூங்கிவிடுவதில்லை. முதலில் உடலுக்குள்
ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு..கொஞ்சமாய் நம் கைகளும் கால்களும் ஓய்வு பெறுகின்றன..அடுத்து அடிவயிறு, மேல்வயிறு..பிறகு
மார்பு என இந்த பகுதிகளில் ஒரு அயற்சி ஏற்பட்டு அந்த சதைகள் இளகுகின்றன.

பிறகு அதற்கும் மேலாக நம் தோள்பட்டை சதைகள்
இளகிவிடும் போது..தூக்கம் நம்மை நெருங்கியதாக உணர ஆரம்பிக்கிறோம். மூச்சு லேசாகிறது. ஆழ்ந்து மூச்சுவிட முடிகிறது. கண்கள்
கனத்து தூக்கம் வந்துவிடுகிறது. அடுத்து..உடல் மீண்டும் சுறுசுறுப்பாகிறது. உங்கள் அனுமதியை பற்றியெல்லாம் கவலைப்படாமல்
உடல் திசுக்கள் தானாக தங்களை சரிசெய்து கொள்கின்றன.

அடுத்த கட்டமான ரிப்பேர்கள் முடிந்து உடல் சமநிலை பெறுகிறது. அப்போது உங்களை மறந்து ஆழ்ந்து தூங்கிபோவீர்கள்.அப்போது
நம் உள்ளார்ந்த சக்திகள் அனைத்தும் நிதானமடைந்து அவைகள் உயிராற்றலுடன் கலந்துவிடுகிறது. இதைதான் “Returning to Source" என்று
சொல்வார்கள். அதாவது உயிரின் மூலத்திற்கே எல்லா சக்திகளும் திரும்பி விடுவது. அப்போது கொஞ்ச நேரம் நீங்கள் மரணமடைந்தவர்தான்.

....இதில் நல்ல விஷயம் என்னவென்றால் காலை நீங்கள் எழும் போது..உங்கள் முதல் கான்சியஸில் சக்திகள் அனைத்தும் உடலின் பாகங்களுக்கு
மீண்டும் பரவி உங்களை ஃப்ரெஷ்ஷாக்கி விடுகிறது. தூங்கி எழுந்தவுடன் ஃப்ரெஷ்ஷாக உணர்வதெல்லாம் அதனால் தான்.
புதிய சக்தி உங்கள் உடலில் பாயதுவங்கியதால்.நாம் எப்போது தூங்குவோம், எப்போது விழிக்க வேண்டும், என்ற கால நேர வரையறைகளில்
தூக்கம் முடிந்துவிடுகிறது. ஆனால் ”மிஸ்டர் மரணம்” அப்படி இல்லை..!!

”நான் எப்போ வருவேன்..எப்படி வருவேன்னு யாருக்கு தெரியாது” ...என்று அது பஞ்ச் டயலாக் பேசினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உண்மை என்னவோ அதுதான்..!!

மனிதர்கள் தூங்க தயார். சாக தயாரில்லை என்று சொல்வதே வினோதமான ஒன்று.
தூக்கம் என்பதே ஒருவகை வரையறுக்கப்பட்ட மரணம்தான்.!!


நீங்கள் உங்கள் உடலில் இறந்து...மீண்டும் அதே உடலில் மீண்டும் விழிந்தெழுந்தால் அது தூக்கம்...!! 
நீங்கள் இன்று தூங்கி நாளை காலை வேறொரு உடலில் விழித்தெழுந்தால்.. அது தூக்கமில்லை ..மரணம்!!



மரணம் பற்றிய பயத்தை விட அதை பற்றிய புரிதல் தேவை..அப்படி புரிந்துகொண்டால் அது எவ்வளவு நல்ல விஷயம் என்பது புரியும்..!!
அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்..!!

Tuesday, June 15, 2010

பாட வராதா? ஆட வராதா? கவிதை வராதா? பொய் சொல்லாதீங்க..!!

ம்ம்ம்ம்..மனிதர்கள் தோன்றி ஒரு 2 லட்சம் வருடங்கள் இருக்குமா?

                      

இருக்கும்...!! கடந்த கால மனிதர்களுக்கும் நம் நவீன கால மனிதர்களுக்கும் தான் எத்தனை வித்தியாசம்.!!
எத்தனை மாற்றங்கள், எத்தனை முன்னேற்றங்கள், எத்தனை சவுகரியங்கள், சுகங்கள்!!

இதை, இந்த சவுகரியத்தையும் சுகத்தையும்தான் அந்த ஆதிகால மனிதன், அந்த கல்லை குட்டி தீமூட்டி நின்றவன்
சிந்தித்தான். செயலாற்ற முனைந்தான். அதுவே இன்று நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டுருக்கின்றன..!!

இதற்கு அடிப்படை மனிதனின் படைப்பாற்றல்!! Creativity. அது அவனை இன்னும் பல்வேறு மைல்கள் கொண்டுசெல்லும்
என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை..!! அது எப்போதும் முட்டி மோதி தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது..!!

ஆனால்..இப்போது சூழ்நிலை சரியில்லையோ என்று தோன்றுகிறது. என்னிடம் பேசும் பலர்...எனக்கு கற்பனைத் திறன் கம்மி!! என்று
பெருமையாக சொல்லும் போது “வெகு சிறுமையாக உணர்ந்தேன்”..!!
என்ன செய்ய..இப்போது இதுவே ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது..

ஹிஹி..!! எனக்கு பாட வராது..!! எனக்கு வரைய வராது..!! எனக்கு வாசிக்க வராது..!! என்று எல்லா படைப்பாற்றலையும்
வராது வராது என்று சொல்லியே வரவிடாமல் செய்துவிட்டோம்..!!

ஏன் நான் வரைய வராது என்று கூசாமல் சொல்கிறேன்..?? அடிப்படை படைப்பாற்றலையே அழிக்க பார்க்கும் இந்த சுபாவம்
எங்கிருந்து வந்தது?
அதன் அடிப்படை..நம்முடைய தாழ்வு மனப்பான்மை.!! இப்போது இந்த மொத்த சமூகத்திலும் தாழ்வு மனப்பான்மை பெருமையானதாக
மாற துவங்கி இருக்கிறது..!!

நாம் பாடலாம், ஆடலாம், வரையலாம், இசை மீட்டலாம், குறுந்திரைப்படங்கள் இயக்கலாம்..இப்படி எல்லா வகையான படைப்பாற்றல்மிக்க
செயல்களும் செய்ய நமக்கு வசதியும் வாய்ப்பும் இருந்தும்....நாம் வராது என்று சொல்வது நம் கையை நாமே முறித்துகொள்வது போல்.!!

நாம் ஒரு புல்லாங்குழலை எடுத்து ஊத ஆரம்பிக்கும் போது  மனம் சொல்லும்..”இதனால் உனக்கென்ன புதிதாய் வேலைகிடைத்துவிட போகிறதா?
இதனால் என்ன ப்ரயோஜனம்? வீணான வேலை இல்லையா இது? “இப்படி மனம் பல்வேறு வழிகளில் உங்கள் படைப்பாற்றலை முடக்கி போடும்..!!

கண்டுகொள்ளவே செய்யாதீர்கள்.உங்கள் ஜென்ம சனி உங்கள் மனம் மட்டுமே..!! இதயமும் அறிவும் கலந்து நடத்தும் படைப்பாற்றிலின் வித்தையை
மனம் எப்போதும் குறுக்கிட்டு கெடுக்கும்..!

விடாதீர்கள்..அதை கண்டுகொள்ளாமல்.. இசையை..அந்த ஆழ்ந்த நேசத்தை..உங்களுக்கான உள்ளார்ந்த காதலை..
அன்பை..இறைவன் அருளை..அனுபவியுங்கள்..!! நீங்கள் பார்த்திராத நிம்மதியும் அமைதியும் உங்களை தேடி வந்து தாலாட்டும்..மீண்டும்
உங்கள் தாயின் மடிக்கே திரும்பிய சுகத்தை நிச்சயம் உணர்வீர்கள்..!!

முயன்றுபாருங்கள்..!! படைப்பாற்றலை கையிலெடுங்கள்..!! அது தரும் நிம்மதியை உணருங்கள்..முழுமையான மனிதராய் வாழுங்கள்!!
வாழ்த்துக்கள்!!

Wednesday, May 5, 2010

ஒரு பெரிய்ய்ய்ய்ய விஷயம் - ஒரு குட்டி கதையில்!!

இந்த நாளை கொண்டாடுங்கள்!!




அந்த துறவிகள் கூடத்தில் புதிதாக சேர்ந்திருந்தார் அந்த இளம் துறவி.
மாலை நேரத்தில் அந்த ஆசிரமத்தில் இருக்கும் மூத்த துறவியிடம் சென்று ஆசிப்பெற்றுவிட்டு
தன் அறைக்கு திரும்பினார் துறவி. விடிகாலை தியானத்திற்காக சீக்கிரம் எழுந்தார் அந்த இளம் துறவி.
வெளியே வந்து பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்..அந்த மூத்த துறவி மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்தார்.
இந்த இளம்துறவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “என்னடா இந்த மனிதர் இப்படி குதிக்கிறார்..ஆடுகிறார்..பாடுகிறார்?..ஒருவேளை இவருக்கு
பைத்தியமோ” என்று நினைத்துகொண்டார்.

பிறகு அடுத்த கட்ட வேலைகள் வந்து சேர..இந்த விஷயத்தை மறந்து போனார்.
இரவு படுக்க போகும் போதும் இதே போல மூத்த துறவி குதித்தாடி கொண்டே தன் அறைக்கு செல்வதை இந்த இளம்துறவி பார்த்துவிட்டார்.

“என்ன இந்த மனிதர் இப்படி செய்கிறாரே..குழந்தைதனமாக அல்லவா இருக்கிறது” என்று நினைத்தபடியே தூங்கிப்போனார்.

அடுத்த நாள் காலையும் அதே போல் மூத்த துறவி குதியாட்டம் போட..
இந்த இளம்துறவிக்கு ஆர்வம் தாங்கவில்லை.. நேரடியாக கேட்டே விடுவது என்று முடிவு செய்து அவரை நெருங்கினார்.

மூத்த துறவி இவரை பார்த்து புன்னகைக்க..
இவர் தன் சந்தேகத்தை கேட்டார் : “அய்யா, கடந்த இரண்டு நாட்களாக நானும் கவனித்து வருகிறேன்..நீங்கள் தினசரி காலையும்
இரவு தூங்க செல்வதற்கு முன்னும் இப்படி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறீர்கள்..இது ஏன்? அப்படி என்ன விஷயத்தை சாதித்ததால்
இந்த மகிழ்ச்சி? எனக்கும் சொல்லுங்களேன் “ என கேட்கிறார்.

அந்த கேள்வி மூத்த துறவியை இன்னும் சிரிப்பு மூட்டியது. விழுந்து விழுந்து சிரித்தார்.
இப்போது அந்த இளம்துறவியை பார்த்து கேட்டார் : “எதாவது சாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா என்ன?”என்று.

இவரும் ”ஆமாம், அதுதானே மகிழ்ச்சி”என்று சொல்ல..

மூத்த துறவி “அப்படி பார்த்தால் நான் இங்கே உன்னோடு பேசிக்கொண்டிருப்பதே சாதனை தான்” என்றார்.

இளம்துறவிக்கு இன்னும் புரியவில்லை. “எப்படி வெறுமனே பேசுவதே சாதனையாகும் ?” என்று கேட்டார்.

துறவி கொஞ்சம் நிதானித்து விளக்கினார் “ இன்று நீ என்னிடம் பேச, இந்த கேள்வியை கேட்க இறைவன் அல்லது இயற்கை உன்னை
இன்னும் உயிரோடு வைத்திருக்கிறதே..அது சாதனை தான். இன்று காலை நீ மரணத்தை வென்று விழிந்தெழுந்துவிட்டாய். இதோ
என் பேச்சை கவனிக்கும் இந்த கணம் நீ மரணமடையவில்லை..எனவே நீ மரணத்தை வென்று வாழ்கிறாய்....இப்படி உலகையே அச்சுறுத்தும்
மரணத்தை சர்வ சாதரணமாக வெற்றிகொள்வது சாதனை இல்லையா..இதற்கு நீ மகிழ்ச்சி கொள்ள வேண்டாமா?” என்று கேட்கிறார்.



இளம்துறவியின் கண்கள் பனித்தன. மகிழ்ச்சி அவரையும் தொற்றிகொள்ள..அவரும் எழுந்து நடனமாட துவங்கி விட்டார்.

.....

இந்த கதையை படித்து முடிக்கும் வரை எல்லாமே சரியாக நிகழ்ந்திருக்கிறது. உங்கள் கணினி சரியாக இயங்குகிறது. உங்களுக்கு கண் பார்வை
தெரிகிறது. நீங்கள் அழகாக மூச்சு விடுகிறீர்கள். சொல்லப்போனால் இன்னும் உயிரோடு தான் இருக்கிறீர்கள்..எனவே மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
சோதனைகளை எல்லாம் சாதனையாக்குங்கள்.

(பி.கு)இது முழுக்கதையும் எங்கிருந்தும் எடுக்கபடவில்லை. என் எண்ணங்களில் உதித்தது தான். :)

Friday, April 23, 2010

உங்களுக்கு கடவுள் மீதிருப்பது நம்பிக்கையா ? பயமா?

கடந்த சில வருடங்களாகவே என்னுள் எப்போதும் ஒரு ஊசலாட்டம்.
நம்பிக்கை, நம்பிக்கையின்மை(பயம்) இவைகளுக்கு இடையேயான ஊசலாட்டம் அது.

http://geesun.files.wordpress.com/2009/12/believe_small1.jpg

எல்லா ஊஞ்சல்களையும் போல இது மேலேயும் கொண்டு சென்றது. கீழேயும் தள்ள பார்த்தது.

என்ன செய்ய? எல்லா மனிதனுக்கும் இந்த ஊசலாட்டம் இருந்துகொண்டு தானே இருக்கிறது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
நானும் இந்த ஊசலில் ஆடி ஓய்ந்த போது ஒரு சின்ன விஷயம் மூளையில் பளிச்சிட்டது. அதுதான், நம்பிக்கை, பயம் இரண்டுமே
ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல். அவைகள் ஒன்றை ஒன்று சார்ந்தும், சாராமலும் இயங்கும்
ஒரு விசித்திர இயந்திரமாய் தெரிந்தது.

ஒரு இருட்டறையில் நுழையும்போது, அங்கே எதுவும் இருக்காது என்கிற நம் மனதின் நம்பிக்கையே, எதாவது இருக்குமோ என்கிற பயமாய்
மாறிவிடுகிறது. இது எப்போதும் நிகழ்வதே. நம்பிக்கையே நாம் செய்யும் எந்த செயலுக்கும் அடிப்படை. பயமே நாம் தவிர்க்கும் எந்த செயலுக்கும்
அடிப்படை. இப்படி நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஆதார சுருதியாக விரும்பும் இந்த இருவரின் கையில் நாம் பொம்மைகளாக இருக்கிறோம்.

http://ui05.gamespot.com/260/fear_2.jpg

நம்பிக்கையால் தூண்டப்படுவதும், அதனால் சில செயல்கள் செய்வதும், அது தோற்றபின் அந்த செயலில் பயம்கொள்வதும்
எப்போதும் நடக்கிறது. எப்போதும் நாம் முழுமையாக வெற்றியடையும் என்கிற நம்பிக்கை உடைய விஷயங்களை மட்டுமே முன்னுரிமை தருகிறோம்.
தோல்வி சார்ந்த விஷயங்களை நாம் எப்போதும் கண்டு அஞ்சுகிறோம். இந்த அச்சம் தேவையற்றது என்கிறேன்.



குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருக்கிறீர்களா? அவைகள் எப்போதும் வெற்றிக்காக விளையாடுவதில்லை.
அந்த விளையாட்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே அவைகள் விளையாடுகின்றன. வெற்றிக்கான வெறியும் இல்லை. தோல்விக்கான
பயமும் இல்லை.
கால்பந்து வீரர் பீலே ஒரு பேட்டியின் சொன்னார் :
“நான் விளையாடவே ஆசைப்படுகிறேன். ஆனால் என்னையும் அறியாமல் ஜெயித்துவிடுகிறேன்” என்று.

வாழ்க்கை நம்பிக்கையை சார்ந்ததும் அல்ல, பயத்தை சார்ந்ததும் அல்ல. அது வாழ்க்கையை முழுமையாக ஏற்றுகொள்வதிலேயே இருக்கிறது.

ஒரு அருவியில் குளிப்பதை போல், ஒரு தென்றலை அனுபவிப்பதை போல, ஒரு குழந்தையோடு கொஞ்சி மகிழ்வதை போல..
அது எப்போதும் நம்பிக்கைக்கும், பயங்களுக்கும் அப்பாற்பட்டதாய்...அன்பு மயமானதாய், ஆனந்தமானதாய் இருக்கிறது.

நம்பிக்கை, பயம் இந்த இரண்டையுமே கடந்து விட்டால் கடவுளும் உங்கள் கைப்பிடித்து நடப்பார் :)

மறக்காம ஓட்டும் கமெண்டும் பண்ணிடுங்க..!!

நன்றி,
ரங்கன்