Sunday, August 8, 2010

மாற்றமும் மாறும்!!



இந்த உலகத்தில் நிலைத்த தன்மை என்ற ஒன்றை நினைத்துபார்க்கவே முடிவதில்லை.
இதை இன்றைய விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்தே ஒப்புகொள்கின்றன.
காரணம், இயற்கை. இயற்கையின் நியதிகளில் மிகவும் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமாய்
இந்த மாறுதல் கோட்பாடு அமைந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இவ்வுலகமும், பிற உலகங்களும்,
ஏன்..மொத்த பிரபஞ்சமுமே இயங்கி வருகிறது.
இப்படிப்பட்ட அத்தியாவசிய மாறுதல் விதி நம்மை சுற்றி மட்டுமே நடக்கிறதா என்றால் இல்லை.
நமக்குள்ளும்,அதாவது நம்முடைய உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கு கூறுகளிலும் ஒரு தொடர் நிகழ்வாக நிகழ்ந்தவண்ணமே
உள்ளது.

நாம் அன்றைய நாகரிகமற்ற மனிதர்களைப்போல் இல்லை. கல்லை குட்டி தீமூட்டவில்லை. உணவை பச்சையாக உண்பதில்லை.
இவ்வளவு ஏன்..80களில் இருந்த மனித சமுதாயத்திற்கும் இப்போது இருக்கும் மனித சமுதாயத்திற்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள்.
இப்படி நம் அழகுணர்ச்சி முதல் நாம் பயன்பாட்டில் ஏற்றுகொண்ட பொருட்கள் வரை அவ்வளவும் தங்கள் நிலையில் இருந்து மருவி,
மாறுபட்டு நிற்கின்றன. மாறுபட்டு என்கிற வார்த்தையில் அடியிலும் எதோ ஒரு உட்கருத்து ஒளிந்துள்ளதை நான் உணர்கிறேன்.

அதுதான் படைப்பாற்றல்.

படைப்பாற்றல் என்பது ஓவியருக்கோ, பாடகருக்கோ, அல்லது சினிமாக்காரர்களுக்கு மட்டுமே இருக்கும் விஷயம் என்றால்,
நீங்கள் நினைப்பது தவறு. உங்கள் வீட்டில் தினமும் ஒரே குழம்பும் இட்லியும் செய்தால் ஏன் கோபப்படுகிறீர்கள்? மனம் புதியதை
அல்லது புதுவகையில் அதே விஷயம் மாறி இருப்பதையே விரும்புகிறது. நம் படைப்பாற்றலின் ஊற்று எல்லாருக்குள்ளும் ஒளிந்து
நம்மை மாற்றமடையவும், மேம்பட்ட ஒரு வாழ்க்கைக்கான ஊக்கத்தையும் தந்த வண்ணம் இருக்கிறது.

மாற்றங்களை தூண்டும் படைப்பாற்றல் மனித மனத்தில் ஒரு சிறந்த சீரான முதிர்ச்சியை தெளிவை கொடுக்கக்கூடியது.
அதன் எல்லைகளை தொட்டவர்கள் துறைசார்ந்த ஞானிகளாக விளங்கிகொண்டிருக்கிறார்கள். டாவின்சி முதல் ரஹ்மான் வரை
நாம் அவர்களை பெருமையோடு போற்றி வந்துள்ளோம். அப்படிப்பட்ட மாறுதலை தூண்டும் படைப்பாற்றல் எல்லாருக்கும் சொந்தமானது.

அதை அனைவரும் சுயமாய் தெரிந்துகொண்டு அதை சிறப்பான முறைகளில் வழிநடத்துவதன் மூலம் தன்னுள்ளும் மேம்பட்டு , மனித
சமுதாயத்தையும் மேம்படுத்த முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை.

2 comments:

கனிமொழி said...

:)

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

சிந்தனை அருமை - இடுகை அருமை - மாற்றம் ஒன்று தான் மாறதது - மாற்றத்தினை நாம் ஏற்கா விட்டால் மாற்றம் நம்மை மாற்றிவிடும் வேறு விதமாக - எதிர்முகமாக

நல்வாழ்த்துகள் ரங்கா
நட்புடன் சீனா

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.