Monday, June 1, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது ! பாகம்-3

இந்த மூன்றாம் பாகம் என் வாழ்க்கையோடு சரியாக பின்னப்பட்டதாக உணர்கிறேன்.
ஆம்.. இந்த பாகத்தில் நான் சொல்லப்போவது சூழ்நிலைக்கேற்றபடி தன்னை சரியமைத்துக்கொள்வது பற்றி.
இதை ஆங்கிலத்தில் “Evolve, Evolution" போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்கள்.

பட்டாம்பூச்சியின் தகவமைப்பும் சூழ்நிலைக்கேற்றபடி மாறிய ஒன்றுதான்.
ஆம்.. வெறும் புழுவாய் தன்னை ஏற்றுகொள்ளமுடியாத அந்த பட்டாம்பூச்சி தன்னை இரு உயர்ந்த இடத்தில்
கொள்ள ஆசைப்பட்டதன் விளைவுதான் அதன் சிறகுகள்.
அதன் சிறகுகள் அதற்கு மிகப்பெரிய பெருமையை தேடிந்தந்திருக்கிறது.அதன் உருமாற்றம் அதனுடைய வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது.அதனிடம் இருக்கும் இறைமையை வெளிப்பட வைத்து அதனை அழகான ஒரு
உயிரனமாக ஏற்றுக்கொள்ள வைத்தது.

இப்படி தன்னை சுற்றியுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகவமைப்பை மாற்றிக்கொள்வதன் அவசியம் என்ன?
வாழ்க்கை போராட்டம் தான். அவைகள் வயிற்றுக்காக செய்யும் அந்த தகவமைப்பு மாற்றத்தை நாம் நம்
ஆன்மாவுக்காக செய்தே ஆகவேண்டியுள்ளது. அப்படி சில உயர்ந்த நோக்கங்களுக்காக தன்னை தகவமைத்துகொள்கிற எந்த
மனிதனும் வீணாக போனதில்லை. என் வாழ்விலும் இது நடந்திருக்கிறது.

”தந்தை காலமாகி விட்டார்”.. மருத்துவர் அந்த வார்த்தைகளை சொல்லும்போது என் அம்மா மயக்கமுற்றார்.
தாங்கி பிடித்து மெல்ல அவர்களை சரி செய்து.. அடுத்த இருபது நிமிடங்கள் என் கண்களில் நீர் நின்றது.
நின்ற வண்ணமே இருந்தது.. கீழே விழாமல். மெல்ல மெல்ல என் மனநிலை மாறி வருவதை என்னால் உணர முடிந்தது.
அப்பாவின் சடலத்தினை வீட்டில் வைத்த போது நேரம் 1.30 மணி. நடு ஜாமம். என் தாயும் பாட்டியும் கண்ணீரில் நனைகிறார்கள்.
என்னால் ஏனோ அழ முடியவில்லை. அப்பாவின் நண்பர் ஆறுதல் சொல்ல அருகே வந்த போது.. ”அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க” என்ற போது
அவர் மலைத்துதான் போனார். அவருக்காக சோகமாய் அமர்ந்தது அந்த இருவது நிமிடங்கள் மட்டுமே.
இப்போது தூக்கு சட்டியுடன் இடுப்பில் ஒற்றை வேஷ்டியுடன்.. அவரின் இறுதி ஊர்வலத்தில்..சாலையில் நான் நடக்கிறேன். எனக்கு அப்போது தான் உறைத்தது..
என் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது என்பது. ஏதோ ஒன்று என்னை சாயாமல் தாங்கி நின்றதை உணர்ந்தேன்.

என்னை அழசொல்லி எவ்வளவோ பேர் வற்புருத்தினார்கள் என்றாலும்..அழ தோன்றவில்லை.
மனோரீதியான மாற்றங்கள் எனக்குள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன,இருக்கின்றன.

சரி.. இந்த சம்பவத்திற்கும் பட்டாம்பூச்சிக்கும் என்ன தொடர்பு. அது சொன்னது என்ன?
...சொல்கிறேன். பட்டாம்பூச்சியின் தகவமைப்பும் இதுவும் ஒரே
விஷயம்தான். ஆம் அது உடல்பூர்வமான தகவமைப்பு மாற்றம். இது மனப்பூர்வமான எவல்யூஷன்.




தன்னை முட்டாள் என்று பள்ளியை விட்டு நீக்கிய ஆசிரியையிடமே அறிவியல் மேதையாக மெடல் வாங்கியவர் ஐன்ஸ்டீன்.
அன்று அவருக்குள் நிகழ்ந்ததும் இதே மாற்றம் தான்.

”சூழ்நிலை உன்னை என்ன சொல்கிறது என்பது தேவையில்லை.
சூழ்நிலையிடம் நீ என்ன கற்றுகொண்டாய் எனபது தான் முக்கியம்” என்கிறார் மார்க்ஸ்.

எனவே உங்களிடம் நீங்கள் பேசி மெல்ல மெல்ல உங்களின் லட்சியத்தை நோக்கி செல்பவராக மாற்றுங்கள். மாறுங்கள்.
சூழ்நிலை உங்களுக்கு பட்டம் கட்டியது போதும். இனி உலகத்தை நீங்கள் கட்டுங்கள். கட்டியாளுங்கள். வாழ்த்துக்கள்!!

4 comments:

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

அன்றைய தினம் அதி காலையில் பேசிய பொழுது - இயல்பாக பதிலளித்தாய் - நான் சற்றே தடுமாறி விட்டேன் - என்ன பேசுவதென்றே தெரியாத நிலையில் நானும் - தெளிந்த நிலையில் நீயும் பேசியது நினைவுக்கு வருகிறது.

நன்று நன்று ரங்கா

நல்வாழ்த்ஹ்துகள் - நல்ல பதிவு

சென்ஷி said...

//”சூழ்நிலை உன்னை என்ன சொல்கிறது என்பது தேவையில்லை.
சூழ்நிலையிடம் நீ என்ன கற்றுகொண்டாய் எனபது தான் முக்கியம்” என்கிறார் மார்க்ஸ்./

வாழ்க்கைக்கு நிச்சயம் தேவையான தன்னம்பிக்கை பொழியும் வார்த்தைகள்..

நன்றி ரங்கா!

sakthi said...

எனவே உங்களிடம் நீங்கள் பேசி மெல்ல மெல்ல உங்களின் லட்சியத்தை நோக்கி செல்பவராக மாற்றுங்கள். மாறுங்கள்.
சூழ்நிலை உங்களுக்கு பட்டம் கட்டியது போதும். இனி உலகத்தை நீங்கள் கட்டுங்கள். கட்டியாளுங்கள். வாழ்த்துக்கள்!


அருமை ரங்கா

அற்புதமான வரிகள்

Anonymous said...

உன் வலி வார்த்தைகள் உணர்த்துகிறது அதே வார்த்தைகள் உன் மனோதிடத்தினை உறுதிப்படுத்துகிறது....அவங்க எல்லாம் அழுது வலியை கரையேற்றிவிட்டனர்... நீயோ அழாமல் அந்த வலியை மனதுக்குள் வைத்துக்கொண்டு இருக்கிறாய் அது உன்னை திடப்படுத்தும் என்ற நம்பிக்கையில்....ஆம் நீ தெளிய தேவைப்பட்டது என்னவோ 20 நிமிடம்....ஆனால் மனம் மட்டும் இன்னும் அவருக்காக கலங்கிய நீரோடையாய் தான் கலங்கிக் கொண்டிருக்கிறது....பட்டாம்பூச்சி 3ம் பாகம் உனக்கே உவமையாய் மாறும் என்பது எதிர்பாராத அதிர்ச்சி.....உன் திடம் நம்பிக்கை உன்னை வருங்காலத்தில் ஒரு சிறந்த இடத்தில் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை,,,,,,,,,,

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.